சனி, 27 மார்ச், 2010

சேரன் சொன்னதில் என்ன தப்பு?



கோரிப்பாளையம் டிரைலர் வெளியீட்டு விழாவை அரசியல் கட்சிக்கு உரிய பந்தாவுடன்நடத்தி இருந்தார் ,தயாரிப்பாளர் மிக்கேல் ராயப்பன். அவர் தே.மு. தி.க. என்பதால் அவருடைய தலைவர் கேப்டன் விஜயகாந்த் வந்திருந்தார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணனும் வந்திருந்தார்.இவர் தி.மு.க. என்றாலும் மேடையில் அரசியல் கலக்கவில்லை . ஆரோக்கியமான விஷயம்.
''நானும் விஜயகாந்த் சாரும் முப்பதாண்டு கால நண்பர்கள்.எங்கள் நட்பு அரசியலைக் கடந்த நட்பு .''என்று ராம.நாராயணன் சொன்னதை முக மலர்ச்சியுடன் கேப்டன் ஒப்புக் கொண்டார். இருவரும் அருகருகே அமர்ந்து இருந்தனர். அடிக்கடி சிரித்துக் கொண்டனர்.அரசியல் பேசினார்களா,சினிமாவைப் பற்றிப் பேசி சிரித்துக் கொண்டார்களா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
பேசிய அனைவரும் கேப்டனைப் புகழ்ந்தது மேடை நாகரிகம். தவிர்க்க இயலாதது.மேடையில் வேறு எந்த கட்சி தலைவர் உட்கார்ந்திருந்தாலும் அவரைப் பாராட்டிப் பேசுவதுதான் பண்பு. ஆனால் 'துறை ' சார்ந்த பிரச்னைகளை சொல்வது என்பது தவிர்க்க இயலாதது. அந்த கருத்தை இந்த இடத்தில் சொல்வது சரியானதாக இருக்கும் .சம்பந்தப்பட்டவர்கள் அங்கே இருப்பதால் பிரச்னைகளை சொல்லலாம் என்கிற மனநிலையில் இயக்குனர் சேரன் இந்த மேடையில் சில கருத்துகளை முன் வைத்தார். அது நியாயமானதும் கூட.
சேரன் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.'
'' சி னிமா சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை.சேனல்களின் போட்டியை மீறி எத்தனை தயாரிப்பாளர்களால் வெற்றி பெறமுடியும்?1. 5 ,கோடி செலவு செய்து சேனல்களில் விளம்பரம் செய்தால்தான் படம் ஓட முடியும் என்கிற 'நிலை' உருவாக்கப்பட்டிருக்கிறது.தயாரிப்பாளர்கள் கூலித் தொழிலாளர்களாக மாறி வாழ்க்கை பறிபோகும் நிலை இருக்கிறது.எல்லாப் படங்களையும் சேனல்கள் வாங்குவதில்லை.மலை மாதிரி உயர்ந்து இருக்கிற சினிமா சரிந்து விழுந்து மண் மேடாகும் நிலை வந்திருக்கிறது ''என்று சேரன் பேசினார்.
மனசாட்சி உள்ள சினிமாக்காரர்களால் சத்தியமாக இதை மறுக்க முடியாது.
பாரம்பரியமுள்ள ஒரு தயாரிப்பு நிறுவனம் சேனல்களின் ஆதிக்கப் போட்டியினால் 'இனிமேல் தமிழ்ப் படமே எடுப்பதில்லை ' என்று தெலுங்கு தேசம் பக்கமாக ஒதுங்கிவிட்டது. தனது ஸ்டுடியோவின் ஒரு பகுதியை சேனல் ஒன்றுக்கு விற்றிருக்கிறார் இன்னொருவர். இதெல்லாம் எதனால்?
அண்மையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ஒருபடத்தை ஒரு சேனலுக்கு விற்றுவிட்டார் என்பதால் அந்த தயாரிப்பாளரின் பட விளம்பரங்களை இன்னொரு சேனல் ஒளிபரப்பமுடியாது என்று சொல்லிவிட்டது.
இது ஆதிக்க போட்டிதானே?
பணம் கொடுத்தாலும் விளம்பரத்தை ஒளிபரப்பமாட்டேன் .நீ ஏன் அந்த சேனலுக்கு படத்தை விற்றாய் என்று சொல்வது தொழில் தர்மமா ?
இந்த கொடுமையைத் தானே சேரன் சொன்னார்.
இதைத் தவறு என்று நடிகர் லாரன்ஸ் அந்த மேடையில் மறுத்து பேசியது எதை எதிர்பார்த்து என்பதுதான் தெரியவில்லை. சேனல்களின் ஆதிக்கம் 'ஆக்டோபஸ்' மாதிரி பல துறைகள் மீது பதிந்து இருக்கிறது .மேலும் பரவிக் கொண்டிருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை.

வெள்ளி, 19 மார்ச், 2010

ஆண்டாளும் ,ரஞ்சிதாவும்....!



தலைப்பைப் படிப்பவர்களில் பலர் என் மீது காய்வார்கள் என்பது நன்கு தெரியும். அதற்காக நான் என் எண்ணத்தை மாற்றிக் கொள்ளப்போவதில்லை.
நித்தியானந்த சாமியார் மீது போலீஸ் பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.அதில் ''இயற்கைக்கு முரணான செக்ஸ் ''என ஒரு பிரிவு.
செக்ஸ் என்பது தனி மனித உரிமை.
இப்படிதான் செக்ஸ் வைத்துக் கொள்ளவேண்டும்என்று எவனும் கட்டாயப் படுத்த முடியாது. சட்டம் போட்டு விட்டு ஒவ்வொருவனுடைய படுக்கை அறையிலும் மூன்றாவது மனிதன் கண் பதிக்கமுடியாது.
அவனும் ,அவளும் எப்படியெல்லாம் விரும்புகிறார்களோ ,அதன்படி மனம் இணைந்து கலவி செய்வதை 'இயற்கைக்கு முரணானது' என்று எப்படி சொல்ல முடியும்?
சரி,இயற்கையான செக்ஸ் என்பதாக எதை சொல்கிறார்கள்?
கணவன் -மனைவி இருவரும் கலப்பதுதான் இயற்கையான செக்ஸ் என்றால் 'லிவிங்டுகெதர்'என்று வாழ்கிறார்களே ,அவர்களை சட்டம் என்ன செய்திருக்கிறது?
ஆணும் ,ஆணும்-பெண்ணும்,பெண்ணும் செக்ஸ் வைத்துக் கொள்வதை சர்வதேச நாடுகள் பல அங்கீகரித்திருக்கின்றன .ஆக இயற்கைக்கு முரணான செக்ஸ் என 'வகை'ப்படுத்துவது தனி மனித உரிமையில் கை வைப்பதாகும்.
இனி சாமியார் மேட்டருக்கு வரலாம்.
நித்தியானந்தாவுக்கு 'பணிவிடை' செய்ததாக ரஞ்சிதா சொன்னதாக செய்திகள்.அது உண்மையா இல்லையா என்பதை அவர் நேரில் வந்து சொன்னால்தான் வெளிச்சம் தெரியும்.
பணிவிடை என்பது கடவுளுக்கு,கணவனுக்கு ,முதலாளிக்கு செய்யப்படுகிற ஒருவித அடிமைத்தனம். அது 'பணிவிடை'செய்பவனின் மனநிலையைப் பொருத்தது.
ஆண்டாளை எல்லோருக்கும் தெரியும்.
அவள் திருவரங்கனை காதலித்தவள் .
'கடவுளைக்' காதலித்த மனுசி. சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள் என்று ஆத்திகர்கள் வணங்கி வருகிறார்கள்.
அரங்கனை ,அவளது காதலனை எப்படியெல்லாம் நேசித்தாள் என்பதை அவளே பாடியிருக்கிறாள்.
தொண்டு செய்வது எப்படி என்பதை ஆண்டாள் சொல்லியிருப்பதை சாமியாரை பழிப்பவர்கள் ஒருமுறை படிப்பது நல்லது. சாமியாரை நியாயப் படுத்துவதாக தயவு செய்து யாரும் நினைத்து விட வேண்டாம்.
நாச்சியார் திருமொழியில் அவள் பாடியிருப்பதை படித்துப் பாருங்கள். ''என்ன இவன்,எங்கே போனான்? நான் இருக்கிறேனா இல்லையா என்கிற கவலை கூட இல்லையே அவனுக்கு?
ஆனால் அவனைப் பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை .
நினைவெல்லாம் அவனே நிறைந்திருக்கிறான் .
எப்படி மறக்கமுடியும்,மறக்கமுடியுமா அவனை ?
உருகிப் போனேன்.உடைந்து போனேன்.
நைந்து நாராகிப் போனேன்.
தன்னை விரும்புகிற பாவையை வெறுத்து ஒதுக்குகிறானா?
கொள்ளை கொள்ளிக் குறும்பனே !கோவர்த்தனனே !எனை அலட்சியப் படுத்துகிறாயே,அடுக்குமா உனக்கு?
நேரில் நீ வருவாயானால் எனது மார்பகங்களை வேருடன் பிய்த்து உன் மார்பில்வெறிகொண்டு வீசுவேன். அப்படிதான் என் துன்பம் தீர்ப்பேன் . ஆலிலைக் கண்ணா,வந்து விடு.
உனக்கு நான் 'தொண்டு'செய்யவேண்டும். செழித்து வளர்ந்திருக்கிற எனது பருத்த மார்பகங்களின் ஏக்கமும் துன்பமும் நீங்க வேண்டுமானால் அந்த
கோவிந்தனுக்கு ஊழியம் செய்தாக வேண்டும். இந்தப் பிறவியில் அவனுக்கு 'அந்தரங்கத் தொண்டு'செய்யாவிட்டால் பிறப்பின் பயன்தான் என்ன? பரமபதம் கிடைத்தாலும் போய் செய்யும் தவம்தான் என்ன ?
பேரழகா, பெருமாளே!என்னை சேர்த்துக் கொள் .செம்மை உடைய உனது திருமார்பில் நான் செம்மாந்து அணைந்திருக்க அருள் புரிய மாட்டாயா? அருளாளனே ,என்னைப் பிடிக்கவில்லை என்றால் அதையாவது எனது முகம் பார்த்து சொல்லிவிடு''என்று கெஞ்சுகிறாள், ஆண்டாள்.

''உள்ளே உருகி நைவேனை
ஊனோ இலனோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த்தனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்து என் அழலைத் தீர்வனே !''

இது அந்தக் கால தொண்டு முறையோ ,என்னவோ? ஆண்டாளை வணங்குகிறவர்கள் ,அவளது தெய்வீகத் தொண்டினை பாராட்டுகிறவர்கள் ரஞ்சிதாவின் 'பணிவிடையை' பழிப்பது ஏன் என்பதுதான் எனது சந்தேகம்?
நித்தியானந்தர்கள் அரசியலில் இல்லையா?
சொல்லுங்கள்.