வெள்ளி, 30 ஏப்ரல், 2010

யாழினியும் நாமும்....!


நெருஞ்சி முட்களாய் கண்ணிமைகள் மாறினால்...

அமிலப் புகையை நுரையீரல் சுவாசிக்குமேயானால்...

சம்மட்டிகளின் வீச்சு இதயத்தில் இறங்குமேயானால்....

அந்த மனிதன் என்னாவான்?

யாழினி குறும் படம் பார்த்தபோது அப்படியொரு அனுபவம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல் ஒட்டு மொத்த தமிழ் ஈழ சகோதரிகளின் துயரத்தை,துன்பத்தை,பாழ்பட்டுப் போனதை எடுத்துகாட்டிவிட்டாள் ,யாழினி.

புழுக்களாய், புன்மைத் தேரைகளாய்,கோழைகளாய், மூடர்களாய்,வாழ்கிறோமே என்கிற குற்ற உணர்வு குத்திக் கிழித்தது.

தத்தும் தவளைக்கிடமாகிவிட்டதே முல்லைக் காடு..

'தாவும் புலிக்கொரு நாய் எந்த மூலை 'என்று கேட்ட பாவேந்தனின் கூற்றுப் பொய்யாகிப் போனதே என்கிற வேதனை...

இருக்க வழிதான் இல்லை ,ஆனால் இறக்க எத்தனையோ வழிகள் !

முத்துக்குமார்கள் நினைவுக்கு வந்தனர்,யாழினியை தரிசித்து விட்டு வெளியே வந்த பிறகு...

தமிழகத்தமிழன் தன்னுடைய அடையாளங்களை ,பாரம்பரிய குணத்தை இழந்து ,பணத்துக்காக மந்தைகளாக மாறி எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன.

தமிழால் பிழைத்துக் கொண்டிருக்கிறோம்.

வீரம்,ஈரம் ,என்பதெல்லாம் இங்கே வணிகமாகிவிட்டன.

ஈழத் தமிழர்களது வீர மரணம் இங்கே உள்ள கட்சிகளுக்கு வாக்கு சீட்டுகளாக மாற வழிஏதும் இருக்கிறதா?

சொல்லுங்கள் யாழினிகளே!

உங்களது படங்களை சுவரொட்டிகளில் காட்டுகிறோம்.

உங்களது தியாகத்தை எங்களது அரசியல் வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டு ஆட்சி பீடம் ஏறுவோம்.

இதுதான் நாங்கள் செய்யும் கைமாறு....!

புதன், 28 ஏப்ரல், 2010

கற்பு காவலர்களே ...


அப்பாடா!
ஒரு வழியாக கற்பு பிரச்னையில் இந்தியாவின் உச்ச நீதி மன்றம் குஷ்புவைக் காப்பாற்றிவிட்டது.கற்பின் காவலர்கள் வெகுண்டெழுந்து குஷ்புவுக்கு எதிராக தொடுத்த எல்லா குப்பைகளையும் ,அவை எங்கே கிடக்கவேண்டுமோ ,அங்கே கொட்டியாகிவிட்டது.
கலாசாரம்,பண்பாடு பற்றி வாய் கிழிகிறவர்கள் சுய சோதனை செய்து பார்ப்பதில்லை.ஆணாதிக்க வெறியோடு அவர்கள் நசுக்கி ,நாசமாக்கிய பெண்களின் எபிசோடுகளை நினைப்பதில்லை.ஆனால் கொடி பிடிப்பதற்கு மதங்களுடன் வந்துவிடுவார்கள்.
ஆண் ஊர் மேய்வான்.கோயிலுக்கு போவதே 'சைட்' அடிப்பதற்கு தான். இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கும் போது பக்கத்தில் நிற்கிற பெண்களை உரசியபடி 'கோவிந்தா'சொல்வான்.சேட்டைகள் செய்வான்.
ஆனால் யதார்த்தமுடன் ஒரு ஆணைப் பார்த்துவிட்டால் ''வச்சிருக்கா!கள்ளத்தனமா பார்க்கிறா''என்று கதை எழுதிவிடுவான்.ஆணாதிக்க திமிர்!
பெண்களை குற்றம் சாட்டுகிற ஆண்கள் அதன் காரணங்களை பார்ப்பதில்லை. வறுமை,சூழ்நிலை,நிர்பந்தம் என எத்தனையோ காரணங்கள் .
பெண்களை கேவலமாக நடத்துகிற அரசியல்வாதிகள் மீது மீடியாக்கள் மென்மையான போக்கை கையாளுவதேன்?
திரைஉலகிலும் பெண்கள் மீதான பார்வை மட்டமாகத்தானே இருக்கிறது.மனைவி இருக்கும்போது மற்றொரு பெண்ணுடன் வாழ்கிற ஆண்களை பற்றி 'கற்பின் காவலர்கள்'என்றைக்காவது கொடி பிடித்ததுண்டா ?
தவறுக்கு பெண் மட்டும்தான் காரணமா?
ஆண்களின் பங்கு இல்லையா?
பெண் தவறு செய்கிறாள் என்றால் அதற்கு ஆணும் உடந்தை தானே?
ஆணுறை விளம்பரத்தில் பெண்ணின் படம் ஏன்?
கற்பு, புனிதம் பற்றி பேசும் தகுதி மத குருக்களுக்கே இல்லை!
பிறகேன் துண்டு துக்கடாக்கள் துள்ளுகின்றன ?
குஷ்பு மீதான வழக்குகளை உச்ச நீதி மன்றம் ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்தது வரவேற்கத் தகுந்தது.

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

இயக்குனர் சிகரத்திற்கு ......





மரியாதைக்குரிய 'சிகரம்' அவர்களுக்கு,

அண்மையில் நிகழ்ந்த திரைப் பட நிகழ்ச்சி ஒன்றில் தாங்கள் பேசிய பேச்சை கேட்டேன்.
தமிழ் சினிமாவுக்கு 'இரண்டு திருடர்கள்,திருட்டு விசிடியுடன் ஐ பி எல் லும் சேர்ந்து இருக் கிறது'என்று பேசியிருக்கிறீர்கள்.
திரைப் படங்களின் வசூல் குறைவதற்கு காரணமாக இருப்பவர்கள் எல்லாம் திருடர்கள் என்று சொல்வதாக இருந்தால் அந்த பட்டியலில் சினிமா துறையினருக்கும் பங்கு உண்டு.
ஐ.பி.எல்.லை புறக்கணிக்கும் வகையில் படம் இருந்தால் ரசிகர்கள் ஏன் கிரிக்கெட்டை நோக்கி ஓடப் போகிறார்கள்?
முதலில் கிரிக்கெட் ரசிகர்கள் வேறு,சினிமா ரசிகர்கள் வேறு.
நீங்கள் இரண்டையும் போட்டுக் குழப்பி திருடர்கள் பட்டியலில் ஐ.பி.எல்.லையும் சேர்த்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
ஐ.பி.எல்.போட்டி நடக்கிறபோது சினிமாக் கொட்டகைகளில் வசூல் குறைகிறது என்பதால் திருடர் ஆகி விடுமா ஐ.பி.எல்?
அப்படியானால் ஐ.பி.எல். பார்க்கிறவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன?திருடர்களுக்கு துணை போகிறவர்களா?
மன்னிக்கவேண்டும் அய்யா!
அன்றைய மேட்சை பார்க்காவிட்டால் ரசிகனுக்கு திரில் இருக்காது.அவன் நேரடியாக பலவிதமான உணர்வுகளை அனுபவிக்கிறான்.
ஒவ்வொரு பாலிலும் சிக்சர் இருக்கிறது.பவுண்டரி இருக்கிறது.ரன் அவுட் இருக்கிறது.கேட்ச் இருக்கிறது.வொயிட் இருக்கிறது.
நோ பால் இருக்கிறது.ஆக ஒவ்வொரு பாலும் எதிர்பார்ப்புகள் தான் .
அவன் நேரடியாக போலித்தனம் இல்லாத விளையாட்டை பார்க்கிறான்.ஆரம்பத் திலிருந்து முடிவு வரை பரபரப்புக்குள் தன்னை ஆட் படுத்திக் கொள்கிறான்.
ஆனால் படங்களில் அவனால் அத்தகைய உணர்வுகளைப் பெறமுடிவதில்லை.அடுத்து வரும் காட்சிகளை ஊகிக்கமுடிகிறது.ஒரே அடியில் பத்து பேரை கதாநாயகன் 'ரோப்' கட்டி சாய்ப்பதை ,டூப் போட்டு சண்டை போடுவதை பார்த்து ,பார்த்து சலித்துப் போனவன்.
ஆனால் ஐ.பி.எல்.லில் சினிமா ,சிகினா வேலைகள் இருப்பதில்லை.
கதாநாயகனின் இமேஜ் உயர்த்துவதற்கான 'பஞ்ச'வசனங்கள் , காட்சிகள் ஐ.பி.எல்.லில் இல்லாததால் கிரிக்கெட் மேட்சை பார்க்க ஓடுகிறான்.
அவனை சினிமா பக்கமாக இழுப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசியுங்கள்.
கதாசிரியர்களுக்குப் பஞ்சம் .
வெளிநாட்டு டி.வி.டி.கள் தான் இப்போது தமிழ்சினிமாவின் பஞ்சம் போக்கும் அட்சய பாத்திரம்.
பழைய படங்களின் பெயர் வைத்தால் படம் ஓடும் என்கிற முட்டாள்த் தனமான நம்பிக்கை'
ஆக,மற்றவர்கள் மீது குற்றம் சாட்டும் போக்கு தவிர்க்கப் படவேண்டும் என்று விரும்புகிறேன்.

உங்களின் ரசிகன்,
தேவிமணி.

புதன், 21 ஏப்ரல், 2010

பீர் பந்தல் வைங்கோ!!

மூச்சு விட்டால் அனல் காற்று. மீசை கருகிவிடும் போல் இருக்கிறது. கோடை வெயில் சுட்டெரிக்கிறது.மின்சாரம் எந்த நேரம் உயிரை விடும் என்பது தெரியாது.கச,கசன்னு வியர்வை.சட்டையெல்லாம் நனைந்து 'கப்'படிக்கிறது.
மக்களின் கஷ்டங்களைப் பார்த்து மனம் பொறுக்காத நம்ம கட்சித் தலைவர்கள் ''தண்ணீர்ப் பந்தல் வச்சு ,மக்களின் தாகத்தைத் தணியுங்க '' என்று தொண்டர்களுக்கு கோரிக்கை விட்டிருக்கிறார்கள்.
கோடை வெயிலுக்கு இதைவிட வேறு எப்படி உதவி செய்ய முடியும்?
நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்...
அதாவது ஒரு ஆலோசனைதான்.
எதிர்காலத்தில் இப்படி நடக்காது என்று சொல்லமுடியாது.
ஓட்டுப் போடுவதற்கு காசு பணம் கொடுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. என்னாச்சு ?
சட்டி,பானை ,சேலை ,வேட்டி என்று கொடுத்தவர்கள் இப்போது ஆயிரம் ,இரண்டாயிரம் ரொக்கம் என்று கொடுத்து முன்னேறிவிட்டார்களா, இல்லையா?
மக்களும் மனம் இரங்கி ''இவ்வளவு பணம் கொடுத்தவங்களை ஏமாத்தினா போய் சேரும் இடத்தில புண்ணியம் கிடைக்காது''என்று நினைத்து குத்து ,குத்துன்னு குத்தி வெற்றி பெறவைக்கலியா? இனிமேல் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணம் என்று நிர்ணயம் செய்கிற காலம் வரத்தான் போகிறது.
இது ஒரு வித முன்னேற்றம் என்றுதான் சொல்லவேண்டும்.
மக்கள் என்கிற இனம் தமிழ்நாட்டில் அதன் பண்புகளை இழந்து அரசியல் கட்சிகளுக்கு அடிமை ஆகிப் போய்விட்டது.
பண்புகளைத் திரும்பவும் பெறுமா என்பது ஆயிரம் பொற்காசு கேள்வி!
அதனால்தான் சொல்கிறேன் தண்ணீர்ப் பந்தல் வைப்பதற்கு பதிலாக ''பீர் பந்தல்'' வைக்கலாம் என்று!
ஏரியா வாரியாக பிரித்துக் கொண்டு ரேஷன் கார்டு கொடுப்பது போல் பீர் கார்டு கொடுக்கலாம். அந்தந்த கட்சித் தலைவர்களின் படங்களுடன் தேர்தல் சின்னத்தையும் மறக்காமல் அந்த கார்டில் பதிவு செய்து விட்டால் மக்களால் மறக்க முடியாது.
சம்மருக்கு பீர் அடிப்பது 'குளிர்ச்சி' என்று எந்த நாதாரியோ சொன்னதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. பார்லி வாட்டர் என்று தான் அதை சொல்கிறார்கள். டாஸ்மாக் போவதை அன்றாட கடமையென கருதும் குடிமகன்களை சுலபமாக கவர் பண்ணிவிடலாம்.
ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறவர்களுக்கு நூறு ரூபாய் செலவில் பீர் கொடுக்க முடியாதா என்ன? அரசியல் கட்சித் தலைவர்களிடம் பீர் பாக்டரி இருப்பதாக சொல்வதால் பீர் பந்தல் வைப்பது அவர்களுக்கு சப்பை மேட்டர்.
அதனால்தான் சொல்கிறேன் ,பீர் பந்தல் மேட்டரை கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்கோ .கட்சிக் காகத்தான் மக்கள் என்று எப்பவோ மாறிப் போயாச்சு. அதனால் மக்களைப் பற்றி கவலைப்படவேண்டாம் . தமிழ் வாழ்க ,தமிழன் வாழ்க .....

சனி, 17 ஏப்ரல், 2010

துருப் பிடித்துப் போன மூளைகள்!!

இதயம் இருக்கிறதா இல்லையா ?

துருபிடித்துப்போன மூளைகளின் ஆதிக்கத்தினால் 72 வயது மூதாட்டியின் உயிர் கேள்விக்குறி ஆகி இருக்கிறது .

குடியரசு தலைவர் என்கிற உயர் பதவியில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறார் . ஆட்டிப்படிக்கும் ஆட்சிக்கட்டிலின் விசைக் கயிறும் ஒரு பெண்ணின் கையில் தான் இருக்கிறது.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி வாய்கிழியப் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள் .

உள்கட்சி ஜனநாயகம் - வெளிக் கட்சி ஜனநாயகம் என்று பேசுகிற ஜனநாயகத்தின் தத்துப் பிள்ளைகளும் இந்த நாட்டில் தான் இருக்கிறார்கள் .

இருந்தும் என்ன செய்ய?

பக்க வாதத்தினால் பாதிக்கப் பட்டிருக்கிற 72 வயது மூதாட்டி சிகிச்சை பெற தமிழ் நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது . சென்னை வந்த அவரை தரை இறங்க விடாமல் மறித்து நள்ளிரவில் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள் .

இருந்தும் என்ன செய்ய?

காரணம் அவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் .

அவர் இங்கே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டால் எரிமலை வெடித்துவிடுமா ? பூமி பிளந்து போகுமா? கடல் பொங்கிவிடுமா?

ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது இங்கே என்ன நடந்தது ?

அனுதாப தீர்மானம் போடக் கூட கட்சி இல்லையே அய்யா !

இந்த மூதாட்டியை அனுமதித்தால் என்ன நடந்து விடும் என்று ஆட்சியாளர்கள் அஞ்சி இருக்கிறார்கள் . பயங்கரவாதத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் எனக் கூறப்படுகிறவர்களை ஒடுக்குவதற்கு திராணியற்றவர்கள் 72 வயது மூதாட்டியிடம் எதற்காக அஞ்சுகிறார்கள் ?

பாவிகளா! அவருக்கு சரியான நினைவு கிடையாது நடக்கவும் இயலாது . முதுமை கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது மனிதாபிமானமற்ற செயல் !

டெல்லி எஜமானர்களை எதிர்க்கிற சக்தி ஆளும் கட்சிகளுக்கும் இல்லை எதிர் கட்சிகளுக்கும் இல்லை!

அடுத்த தேர்தலில் எத்தனை சீட்டுகள் , யாருடன் கூட்டணி பேரம் பேசலாம் என்பதில் கவனமாக இருக்கிற அரசியல் கட்சியினர் வெறும் காகிதப் புலிகளே ! அவர்களது கண்டனம் காகிதத்துடன் நின்று விடும் . உண்ணா விரதம் , மனித சங்கிலி என்கிற நாடகங்களுடன் களைந்து போவார்கள்!

என்ன செய்வது?

தமிழும் , இனமும் எதிர்வரும் காலத்தில் அனாதையாக , ஒடுக்கப்பட்ட இனமாக வாழ வேண்டும் என்பது விதிக்கப் பட்ட சதி!

சதியை எதிர்போம் என்று சொல்லி போராட்ட அரசியல் நடத்தி கட்சி வளர்ப்பதற்கு சில கட்சிகளும் வரும்!

வாழ்க ! வாழ்க! வாழ்க!

புதன், 14 ஏப்ரல், 2010

எங்கே இருக்கிறான் தமிழன்?

'மெல்லத் தமிழ் இனி சாகும்'
உண்மைதான்!
''தமிழன் தனது இன,மான, மொழி உணர்வினை தானே அழித்துக் கொண்டான் !ஆண்ட இனம் அடிமையாக மாறியதற்கு அவனே காரணமாகினான் '' என்று எதிர்வரும் காலத்தில் வரலாறு சொல்லுமானால்.....?
சொல்லுமானால் என்ன ,சொல்லும்!செவிட்டில் அறைந்து சொல்லும்.
தமிழனது பாரம்பரிய அடையாளங்களை பதவிக்காக ,பணத்துக்காக ,அதிகார மையத்துக்காக மாற்றிக்கொண்டான்!இன விடுதலைக்காக போராடிய தமிழர்களை ஒழிப்பதற்கு 'தமிழனே' துணை போனான் என்று வரலாறு பதிவு செய்திருக்கும்.
தமிழனது புத்தாண்டு 'திருவள்ளுவர் ஆண்டு'என்றே அழைக்கப்படும் ,தைத் திங்கள் தான் ஆண்டின் தொடக்கம் என்று அதிகாரப் பூர்வமாக அரசு அறிவித்திருந்தாலும் 'விக்ருதி'தான் தமிழர் ஆண்டு என்று சில
சக்திகள் சித்திரையை கொண்டாடிவிட்டன!
இதில் எனக்கு வருத்தமோ ,கவலையோ இல்லை.இனத்தின்
அடையாளங்கள் அழிவதற்கு நம்மவர்களும் துணை போகிறார்களே என்கிற கோபம் தான் அதிகமாகிறது.
'விக்ருதி' கதை என்ன? பொருள் என்ன?
கேவலமானது !
அந்த கேவலத்தை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்!
கிருஷ்ணனிடம் நாரதர் வந்தார்.
பொறாமையும் ஏக்கமும் கண்களில்!
''ஏம்பா,கிருஷ்ணா!அறுபதாயிரம் கோபிகைகளுடன் நீ குஷாலாக கும்மியடிக்கிறாய்.கூடிக்கலக்கிறாய்.குதுகலமாக இருக்கிறாய். நானோ ஒன்றும் கிடைக்காமல் காய்ந்துபோய் இருக்கிறேன். அந்த அறுபதாயிரத்தில் ஒன்றை எனக்குத் தள்ளி விடக்கூடாதா?''என்று ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்.
கிருஷ்ணனுக்கு பெரிய மனசு.
'' நாரதா! திரிலோக சஞ்சாரியான நீ இவ்வளவு ஆசைப்பட்டுக் கேட்கிறபோது நான் உனக்கு உதவி செய்யாவிட்டால் நன்றாக இருக்காது. நான் இல்லாத வீடாகப் பார்த்து அந்த வீட்டுப் பெண்ணைத் தள்ளிக்கொண்டு போய்விடு! ''என்று யோசனை சொல்கிறார்.
நாரதரும் ஒவ்வொரு வீடாகப்போகிறார்.
அத்தனை வீடுகளிலும் கிருஷ்ணன்!
யாரைத் தள்ளிக் கொண்டு போகமுடியும்?
திரும்பவும் வருகிறார் கிருஷ்ணனிடம் !
''அய்யா,பரமாத்மா,கிருஷ்ணா!தேடி அலைந்ததில் கால்களும் ,கண்களும் தேய்ந்ததுதான் மிச்சம். ஒரு பிகர் கூட மாட்டலே! அடியேனுக்கு இப்போது உன் மீது ஆசை!நான் பெண்ணாக மாறி உன்னுடன் கலவி செய்யவேண்டும் .என் ஆசையை தணிப்பாயா?''என்று நாரதர் கேட்கிறார்.
''கவலைப்படாதே!நீ யமுனைக்குப் போ.நீராடு!! பெண்ணாக மாறிவிடுவாய். அதன் பிறகு என்னிடம் வா!கலக்கலாம்''என்று கிருஷ்ணன் வழியைக் காட்ட,
எல்லாம் கிருஷ்ணன் சொன்னபடியே நடக்கிறது.
கிருஷ்ணனும் ,பெண்ணாகிய நாரதனும் அறுபது வருடங்கள் கூடி கலவி செய்ய ,வருடத்திற்கு ஒரு குழந்தை பிறக்கிறது. இப்படி வரிசையாக
பிறந்த குழந்தைகளின் பெயர்தான் 'பிரபவ 'முதல் 'அட்சய' வரை.
இந்தப் பெயர்களில் தமிழ் அடையாளம் ஏதாவது தெரிகிறதா ?
பண்பாடு ,கலாச்சாரம் இருக்கிறதா?
தமிழுடன் ஒட்டவும் முடியாது.உறவு கொள்ளவும் முடியாது.
யாரோ ,எவனோ இட்டுக்கட்டி எழுதிய முட்டாள்த் தனமான கதையை இன்றைய நவீன காலத்தியவர்களும் நம்புகிறார்கள் என்றால் தமிழுக்கு ஏது எதிர்காலம்?
முட்டாள்த் தனத்தை எதிர்க்க கடமைப் பட்டவர்கள் அதிகார மையத்தின் அரவணைப்பில் சுகம் கண்டுவிட்டனர்.அவர்களுக்கு எப்போது தோல்விப் பயம் வருமோ ,அப்போது சற்று குரல் விடுவார்கள்.
ஆக ,மொத்தத்தில் தமிழ் 'மெல்ல சாகும்' என்பது உண்மையாகி வருகிறது.





























kon








8கொண்டான்!ஆண்ட இனம் அடிமையாக மாறுவதற்கு அவனே காரணமாகினான்''

திங்கள், 12 ஏப்ரல், 2010

திருப்பதி எழுமலை வெங்கடேசா!!

திருப்பதிக்குப் போய்வந்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் !
இப்படியும் ஒரு நம்பிக்கை!
சுட்டெரிக்கும் வெயில்.தாகம் எடுத்த நாக்கு தண்ணீருக்காக தவிக்கிறது.
வெந்நீர் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லமுடியுமா?ஆற வைத்து நாக்கை நனைப்பதில்லையா?
அதைப் போலவே திருப்பதி போனால் திருப்பம் வரும் என்கிற நம்பிக்கையும்!
ஆனால் அங்கு போன பிறகுதான் அந்த தெரியாத திருப்பத்துக்காக நாம் எவ்வளவுகொடுமையை தெரிந்தே அனுபவிக்கிறோம் என்பது.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று சொல்லிவைத்த மனிதன் அதில் சில சலுகைகளையும் ,சமரசங்களையும் செய்து கொண்டான்.சமம் என்று சொன்னது பொய்.மாய்மாலம் என்பதைப் போலவே கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்பதும் பொய்,கயமை என்பதை திருப்பதியில் தெரிந்துகொண்டேன்
சர்வதரிசனம் என்பது காசில்லாதவர்களுக்கு!
குய்க் தரிசனம் 300 என்பது சற்று வசதியானவர்களுக்கு.
இன்னும் பலவிதமாக பக்தர்களை பிரித்து வைத்திருக்கிறார்கள்.பதவி,அதிகாரம் உள்ளவர்கள் என்றால் எந்த பிரச்னையும் இல்லை.தனிவழி,தனிச்சலுகை ,சுலப தரிசனம்.
ஆனால் நம்மைப்போன்றவர்கள் கால் கடுக்க வரிசையில் நின்று ,நகர்ந்து நகர்ந்து போனால் ,வசதியான,காற்றோட்டமான கொட்டடியில் நம்மை நாமே சிறை வைத்துக்கொள்ளவேண்டும்.நிறைய கொட்டடிகள் இருக்கின்றன.அடை பட்டபிறகு வெளியே வர முடியாது.கொட்டடி எப்போது திறக்கப்படும் என்பது "வெங்கி"மட்டுமே தெரிந்திருக்கும் உண்மை.குறைந்தது ஐந்து மணி நேரம் கொட்டட்டியில் இருக்கவேண்டும். திறக்கப்பட்டதும் மக்கள் ?ஆடு,மாடுகளைப்போல் நெருக்கியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.போகிற வழியில் "லட்டு"கவுண்டர்.20 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கினால்தரிசனம் முடிந்து இரண்டு லட்டு வாங்கலாம்.கோவிலுக்கு வெளியே.
லட்டு வாங்குவதற்கு நாம் பயில்வானாக இருப்பது நல்லது.
தரிசனம் என்பது அவ்வளவு சுலபம் அல்ல.
ஆண்,பெண் ,குழந்தைகள்,முதியவர்கள் என்கிற வேறுபாடு இல்லாமல் "சமமாக" நடத்தப்படுவது இங்குதான். லட்டு டோக்கன் வாங்கிய பிறகு ஒருவரோடு ஒருவர் உரசிக்கொண்டும் ,படாத இடங்களில் பல கைகள் பட்டும் "சந்நிதானம்" நோக்கி நடக்கிறோம்.நமக்கே வெறுப்பு வருகிறது.இவ்வளவு கேவலமானவர்களா நாம்?பெண்ணின் அங்கங்கள் மீது பக்தி செலுத்தும் "பக்தர்களை"அங்கு பார்க்க நேர்ந்தது.
சன்னிதானத்தின் சுவர்களில் தமிழ் வட்டெழுத்துகள்.கர்ப்பகிரகத்தின் சுவர்களிலும் தமிழ் வட்டெழுத்துகள்.அப்படியானால் திருப்பதி தமிழனுடையதா?
இந்த எழுத்துகளைப் பார்த்துக் கொண்டே "வெங்கியை" நெருங்கினால் சில வினாடிகள் கூட நின்று கும்பிட முடியவில்லை."கோவிந்தா"என்றுசொல்லி முடிப்பதற்குள் "போ,போ"என்று தள்ளிவிடுகிறார்கள்.
எல்லாம் முடிந்து வெளியே வந்து லட்டு வாங்கவேண்டும்.கூடுதலாக லட்டு வேண்டும் என்றால் ஒருவருக்கு நாலு கிடைக்கும்.நூறு ரூபாய். பத்து ரூபாய் லட்டு 25 ரூபாய்.பகல் கொள்ளை.
பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்று திருப்பதி முழுவதும் போர்டு வைத்திருப்பவர்கள் லட்டுகள் வாங்க பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்கிறார்கள்.
இலவச மொட்டை .ஆனால் மூன்று மணி நேரம் ஆகிறது.சனி ,ஞாயிறு கிழமைகளில் வந்தால் இவ்வளவு கொடுமைகளை தாங்கத்தான் வேண்டும் என்கிறார்கள்.
திருப்பதி போனால் திருப்பம் வரும் என்பது மெய்யா,பொய்யா என்பது இனிமேல்தான் தெரியும்.