ஞாயிறு, 20 ஜூன், 2010

வைகோவும்,விஜயகாந்தும்....

                               எலும்பில்லாத நாக்கு ...
                               மனிதன் பொய் பேசுவதற்காகவே..
                               நேற்று பேசியதை இன்று மறப்பதற்காக ...
                               இன்று கொடுக்கும் வாக்குறுதிகளை நாளை மறப்பதற்காக..
                               அரசியல்வாதிகளின் வசதிக்காகவே வாய்க்குள் வைத்துவிட்டான் படைத்தவன்.     
                             அரசியல்வாதிகளில் யாருமே பொய் சொல்லா மெய்யர்கள் இல்லை.
                             சத்தியங்கள் அடிக்கடி சட்டையை உரித்துக் கொண்டு நிர்வாணமாகி பொய்களை புணர்ந்து கொள்ளும் காலம் இது.
                            வசதிக்காக ,சுய நலத்திற்காக ,வளம் பெறுவதற்காக பொய் சொல்லலாம்.
  1.                           2004 ஆண்டு ,நவம்பர் ஒன்பதாம் தேதி.
                              சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம்....
                              விஜயகாந்த் பேசுகிறார்.
                             ''அண்ணா திமுகவை கட்டிக் காத்து மிகப் பெரிய சரித்திரம் படைத்திருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மனையும் ,அலெக்சாண்டரையும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக சொல்வார்கள்.இனிமேல் தன்னம்பிக்கைக்கு   உதாரணமாக    ஜெயலலிதாவை சொல்லவேண்டும்''என்கிறார்.
                              தன்னம்பிக்கைக்கு உதாரணமாக சொல்லப்பட்டஜெயலலிதா பின்னர் விஜயகாந்தைப் பார்த்து ''குடித்து விட்டு வருகிறார்''என்று சொன்னதும்,இதற்கு விஜயகாந்த் மறுதளித்து ''இவர்தான் ஊத்திக் கொடுத்தாரா'' என்று நக்கல்  அடித்ததும்  மறக்கக் கூடியதுதானா?
                           மறக்கத்தான்  வேண்டும்.
                          ஏனென்றால் இது அரசியல்.
                          உச்சநடிகர் ரஜினிகாந்த் அதே இடத்தில் என்ன பேசினார் தெரியுமா?
                         ''வீரப்பனை சுட்டுக் கொன்றதுசாதனை  அல்ல.சரித்திரம்.வனதேவதைக்கு  விடுதலை வாங்கி தந்திருக்கிறீர்கள் .இந்தியாவில் தமிழர்களின் மானத்தை காப்பாற்றிவிட்டீர்கள்''என்று சத்தியம் பேசினார்!!
                      இதே ரஜினிகாந்த் தன் வாயாலேயே ''ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது'' என்று  சொன்னார்.
                     இதையும் நாம் மறக்கத்தான் வேண்டும்.
                     ஏனென்றால் இது அரசியல்.
                   தேர்தல் உடன்பாடு ஏற்பட்டு ஒரே மேடையில் ஜெயலலிதா,விஜயகாந்த் ,வைகோ, ராமதாஸ் ஆகிய தலைவர்கள் தரிசனம் தந்தாலும் அது ஆச்சரியம் அல்ல.
                    அரசியலில் எதுவும் நடக்கலாம்.
                   நாளை அதிமுக-தேமுதிக கூட்டணி அமையுமேயானால் விஜயகாந்திற்கு அடுத்த இடம் தான் வைகோ அவர்களுக்கு.
                  விஜயகாந்திற்கு  கொடுத்தது போக எஞ்சிய தொகுதிகளை ,குறைந்த தொகுதிகளை கொடுத்தாலும் வாங்கவேண்டிய நிலையில்தான் மதிமுக இருக்கிறது.
                        அரசியல் எங்கே போய் கொண்டிருக்கிறது?
                     வரவிருக்கிற தேர்தலில் வித்தியாசமான கூட்டணிகளை பார்க்கலாம்.
                     வைகோ -விஜயகாந்த்-இடது வலது கம்யு கட்சிகள் கூட்டணி சேரும் வாய்ப்பு இருக்கிறதா?

ஞாயிறு, 13 ஜூன், 2010

காமராஜரைத் தெரியுமா?

                                    ''காமராஜரைத் தெரியுமா?''

                                    ''அவர் எந்தப் படத்தில் நடிச்சிருக்கார்!''

                                    ''அடப்  பாவி!அவர் கர்ம வீரர்டா! ''

                                   ''அந்தப் படத்தை நான் பார்க்கலீங்க!அவரோடு நடிச்ச ஹீரோயின் யார்னு  சொன்னிங்கன்னா ஒருவேளை நினைவுக்கு வந்தாலும் வரும்.''

                                   ''உருப்படுமாடா தமிழ்நாடு?காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய தலைவர்டா. கல்விக் கண்ணைத் திறந்த புண்ணியவான்.''

                                   ''காங்கிரஸ் கட்சியா?எந்த காங்கிரஸ்?தங்கபாலு காங்கிரசா?ஜி.கே.வாசன்  காங்கிரசா?இளங்கோவன் காங்கிரசா?இவர் எந்த காங்கிரஸ்?''

                                 ''கிழிஞ்சது.தமிழ்நாட்டில் லஞ்ச ஊழல் இல்லாம வாழ்ந்த ஒரு மகானைப் பத்தி தெரியலேன்கிறது உன் தப்பு இல்லடா!சொந்த கட்சிக் காரங்களே அவரை மறந்திட்டாங்க! பொதுவா பெரிய தலைவர்களை எந்தக் கட்சியா இருந்தாலும் நினைவில வச்சுக்கிறதில்ல. சரக்கடிக்கிறபோது தொட்டுக்கிற சைடு டிஷ் மாதிரி ஆகிட்டாங்க .காரியமாகனும்கிறபோது நினைக்கிறாங்க.சரி.விடு.வரப் போற தேர்தலில் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடப் போறே?''

                               ''கேனத்தனமா கேட்கிறியே ,எந்தக் கட்சிக்காரன் நோட்டு அதிகமா வெட்டுறானோ ,அந்த கட்சிக்காரனுக்குத்தான் ஓட்டுப் போடுவேன்.''

                              ''அப்படினா கெட்டது செய்றவன் அதிகமா நோட்டு வெட்டினா அவனுக்குதான்  போடுவே!நல்லவனுக்கு போட  மாட்டே?''

                            ''அதிலென்ன உனக்கு சந்தேகம்?''

                         இதுவரை படிச்சது கற்பனையாக இருந்தாலும் அதில உண்மை இருக்கா, இல்லையா?

                             சொல்லுங்க..கருத்துகளைப் பதிவு பண்ணுங்க..!

      
             
    

ஞாயிறு, 6 ஜூன், 2010

கோடீஸ்வரனாக வேண்டுமா?

'' அரசியலுக்கு போ ,கோடி , கோடியாக அள்ளலாம்.எதற்காக மெடிக்கல் ,அதுஇதுன்னு அலையணும்,ஆட்சிக்கு வரக் கூடிய கட்சியா பார்த்து தலைவருக்கு பெரிய அன்பளிப்பா கொடுத்து ஒரு பொறுப்பை வாங்கிட்டினா நாளைக்கு பெருசா அறுவடை பண்ணீறலாம் ,இந்த காலத்தில படிக்க வைக்கிறது வேஸ்டுப்பா ''என்று சொல்கிற நிலை இருக்கிறதா,இல்லையா?

முதல் போட்டு வியாபாரம் பண்றதை விட ,முதல் இல்லாம பெரிய கட்சியா பார்த்து அதில் பொறுப்பு வாங்கிறதுக்கு செலவு பண்ணினால் போதும் ,பின்னாடி பல,பல மடங்கு சம்பாதிச்சிடலாம் என்கிற நிலை உண்மையா,பொய்யா?

பொறுப்பு கிடைக்கவில்லையா ,பரவாஇல்லை .பொறுப்பில் இருக்கிற ஆளுக்கு நம்பிக்கையான கைத்தடியாக ஆவதற்கு ஆவன செய். அந்த ஆளின் பலம் ,பலவீனம் தெரிந்து அதற்கு தகுந்த ''ஏற்பாடுகளை''செய்து கொடு. அடுத்த பொறுப்பு நீ தான்.கைத்தடியாக இருப்பது கேவலம் என நினைக்க கூடாது . இதிலும் ஆயிரம் ,ஆயிரமாய் சம்பாதிக்கலாம்.இதுதான் இன்றைய அரசியலுக்கு பால பாடம் .நிஜமா,பொய்யா?

கைத்தடியாக இருந்தும் பொறுப்பு கிடைக்க தாமதமாகிறதா,கவலைப் படக் கூடாது .ஆயுதம் தாங்கிகளின் தலைமை பொறுப்பு உன் கையில்தான் இருக்கிறது. இதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும்.ஒரு கும்பலை சேர்த்துக் கொண்டுவிட்டால் பொறுப்பே தேடிவந்துவிடும்.இப்படிப்பட்டவர்கள் பங்களாவும் காருமாக வாழ்கிறார்கள் என்பது நிசமா,இல்லையா?

திறமையாக பேசக் கற்றுக்கொண்டுவிட்டால் ,திறமையான பேச்சினால் ,தலைமையின் அன்பை பெற்றுவிடலாம்.திறமையான பேச்சு நல்ல முதலீடு.இந்த திறமையினால் நாளைக்கு தலைமையை மிரட்ட முடியும்.அவசியம் வந்தால் புதிய கட்சியை ஆரம்பிக்கலாம். இது சாத்தியமா, இல்லையா?

எதுவுமே இல்லையா,கவலைப்படக் கூடாது.வட்டமோ ,மாவட்டமோ இவர்களின் கைத்தடியாக இருக்கிறபோதே சின்ன சின்ன காண்ட்ராக்டு கள் கிடைக்கிறமாதிரி ஏற்பாடுகளை செய்து கொண்டுவிடவேண்டும் .இது பிற்கால அரசியல் விளையாடலுக்கு உதவியாக இருக்கும் என்பது உண்மையா,இல்லையா?

இப்படியெல்லாம் நினைப்பதும் ,எழுதுவதும் மிகப் பெரிய தப்பு என்றாலும் நாட்டு நடப்பு அப்படியெல்லாம் நினைக்கவைக்கிறதா,இல்லையா?

கோடீஸ்வரனாக வேண்டும் என்றால் அரசியல்தான் சரியான இடம் என்கிற எண்ணம் அப்பாவி மக்கள் மனதில் இருக்கிறதா இல்லையா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?