ஞாயிறு, 11 ஜூலை, 2010

காதல் ...காமம் ..மறுபார்வை!

பெண்களில் வீணைகளும் உண்டு.
 மத்தளங்களும் உண்டு.
ஆண்களில் பெரும்பாலோர் சிட்டுக் குருவிகள்.
 நின்று,நிதானமாக ஆட வேண்டும் என்கிற எண்ணம் இல்லாதவர்கள்.
 வெகு சிலரே விளையாட்டு வீரர்கள்.
 நாட்டுப் புற பாடல் ஒன்று உண்டு.
 ''பொட்டலிலே கிணறு வெட்டி,
 போர்க் காளை ரெண்டும் கட்டி ,
 காப்புப் போட்ட கறுத்த மச்சான்
 கமலைக் கட்ட தெரியலியே!''
 எவ்வளவு ஏகடியம் !எகத்தாளம்!!
 காதலனுக்கு தொழில் அனுபவம் இல்லையாம்!
 எப்படி அழுத்தம் கொடுத்து சொல்கிறாள் பாருங்கள்!
 இப்படிப் பாடுகிறவள் நிச்சயம் மத்தளமாக தான் இருப்பாள்.
 இன்னொருத்தி-
 ''கடகெம்பு நொறுங்குது ,
 கண்ணாமுழி பிதுங்குது ,விட்டு,விட்டு புடிச்சாலாகாதா,-ஆ பூனை மாமா,
 விட்டு,விட்டு புடிச்சாலாகாதா?''என்கிறாள்.
 இந்த கொங்கு நாட்டுப்புறப் பாடலில் வல்லவனின் 'தொழில்'திறமை தெரிகிறது.
 அவளது நிறைவும் தெரிகிறது.
 சிற்றின்பம் தான் பேரின்பம் என்பது எனது கருத்து.
 வாழும் காலத்திலேயே சொர்க்கத்தைப் பார்த்து விடலாம் .
 திருவில்லிபுத்தூர் ஆண்டாளே அந்த சொர்க்கத்திற்காகத்தானே ஏங்கியிருக்கிறாள்
''பருத்து வளர்ந்திருக்கிற எனது மார்பகங்களின் துன்பம் போகவேண்டும்.
அதற்காக அந்த கோவிந்தனுக்கு'அந்தரங்க தொண்டு'செய்ய வேண்டும்.இப்பிறவியில் செய்யாமல் அதன் பின்னர் கிடைக்கும் பரமபதத்தில் என்ன தவம் வேண்டிக்கிடக்குது?'
''கொம்மை முலைகள் இடர் தீரக்
கோவிந்தற்கு .ஓர் குற்றேவல்
 இம்மைப் பிறவி செய்யாதே
 இனி போல் செய்யும் தவம்தான் ஏன்?''என்று கேட்கிறாள்.
ஏக்கமும் இருக்கிறது,கோபமும் கூடவே இருக்கிறது.
 ஆதங்கமும் தெரிகிறது.
 இத்துடன் நின்றாளா?
 இல்லை!
 ''அவனிடம் என்னை இழந்து விட்டேன்.ஆனால் அவனுக்கு என்னைப் பற்றிய கவலை இல்லை.இங்கே ஒருவள் ஏங்கிப் போய் கிடக்கிறாள் என்பது தெரியாதா அவனுக்கு?
 நேரில் வந்தால் அவனுக்குப் பயன்படாத எனதிரு மார்பகங்களை வேருடன் பிடுங்கி  அவனது மார்பில் எறிவேன் ''என்கிறாள்.
 ''கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
 கொங்கை தன்னைக் கிழங்கோடும்
 அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்து என் அழலைத் தீர்வனே''
 இந்த பாடலில் இருப்பது காதலா, காமமா?
 இரண்டும்தான் என்றாலும் உச்சம் தொடுவது காமம்தான்!
 ''இன்பம் தருபவைகளை இந்திரியங்களால் நுகர்வதால் ,கேட்பதால்,அல்லது எண்ணுவதால்  காமம் தலை எடுக்கிறது ''என்கிறது கீதை!
காதல் என்பது வேறு
 காமம் என்பது வேறு.
 இவை தியரி.
 செக்ஸ் என்பது பிராக்டிகல் .
 மனது ,வயது சார்ந்ததுதான் செக்ஸ் .
 மறுக்கவில்லை
ஆனால் உடம்பு முற்றி தளர்ந்து விட்டால் 'பிராக்டிகல்'பெரும் பிரச்னை!
 என்ன சொல்கிறீர்கள்?

வெள்ளி, 9 ஜூலை, 2010

காதலா..காமமா...!


காதலா..காமமா...! 
எதை தேர்வு செய்வது? 
காதல் உயர்வு. காமம் அரிது.
வாழ்க்கையின் இறுதி வரை காதல் இருக்கும்.
ஆனால் காமம் இருக்குமா?  
இருக்கும் , இருந்தும் இல்லாமலும்!

கல்லுக்கு ஆடை அணிவிப்பதால் என்ன பயன்?
கட்டை சாயும் வரை காதல் இருக்கும் .
ஆனால் கட்டையுடன் காமமும் சாய்ந்து விடும்.
காதலின் உச்சமே காமம்.
காமம் இல்லாத காதல் சவம்.
உச்சம் தொடாத காதலால்  யாருக்கு என்ன பயன்?
காதல் உயர்வு;காமம் அரிது.
உயர்வா,அரிதா,எது தேவை என்றால் 
நான் அரிதையே    விரும்புவேன்.

ஆனால் அரிதுக்கு ஆயுள் குறைவு.
ஆயுள் குறைவு என்கிற போது 
அதை முழுமையாக அனுபவிக்க  முடியவில்லை என்றால் 
ஆண் -பெண் என்று வாழ்வது வீண்!
காதல்  ,காமம்  இரட்டைக் குழந்தைகளே!
இரண்டும் வேண்டாம் ,பிரம்மச்சரியமே புனிதம் என்று 
வாழ்வது மானிடப் பிறவியின் பயனை 
வீணாக்கியதாகவே கருதப் படவேண்டும்.

மயிர் உதிரும் காலத்தில் 
என்னதான் வாசனை தைலங்களைத் தடவினாலும் 
மண்டையில் மயிர் வளரப் போவதில்லை.
வழுக்கைதான் வளரும்.
ஆகவே கட்டை தளர்ந்த பிறகு எவ்வளவு பீமபுஷ்டி அல்வாக்களை  விழுங்கினாலும் கட்டை நிமிரப் போவதில்லை.

காமம் என்பது கொடை
அரிதிலும் அரிது.
கடவுளே காமனுக்கு அடிமை.புராணங்களில் படிக்கலாம்.
வயது உயரும்போது காமமும் வளர்வதில்லை.
வயது ஏற ,ஏற காதல் ஏறுமுகம்.காமம் இறங்கு முகம் .
வாலிபம் இருக்கும்வரைதான் காமத்தை அனுபவிக்க முடியும். 

ஆகவே கொண்ட மனையாளுடன் காமத்தின் உச்சம் தொடுவது தவறில்லை.
இந்த கருத்துக்கு ஆதரவு -எதிர்ப்பு  எதாக இருந்தாலும்  பதிவு செய்யுங்கள்.