செவ்வாய், 15 ஜனவரி, 2013

மீரா ஜாஸ்மினின் கருத்து சரியா?

கல்யாணம் என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு இந்த சமுதாயம்  கொடுக்கிற அங்கீகாரம்.
எல்லா மதங்களிலும் -சில  இனங்கள் தவிர -எல்லா இனங்களும் ஏற்றுக் கொண்ட 'பழக்கம்'.
நாகரீகம் 'வளர்ந்து' வருகிற இன்றைய விஞ்ஞான உலகத்தில் சில பழக்க,வழக்கங்கள்,மரபுகள் காணாமல் போகின்றன.
மணமாகாத ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு என சொன்ன இந்த சமுதாயத்தில் இன்று  சேர்ந்தே வேலை பார்க்கிறார்கள்.'பழகுகிறார்கள்'.
உள்ளத்தளவில் ஒன்றாகிப் போனவர்கள் உடலளவில் கலந்தும் போகிறார்கள் .பிறகு பிரிந்தும் போகிறார்கள்.
இதைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை.
"மலஜலம் பிரிவதைப் போல உடலுறவும்!!கங்கையில் குளித்தால் எல்லா பாவங்களும் கரைந்து போகிறது என்கிற போது ...நாங்கள் சந்தோசமாக இருப்பதும் பின்னர் பிரிந்துபோவதும் சரிதானே...ஒரு சொம்பு தண்ணீரை கங்கை நீராக நினைத்து பாவத்தைப் போக்கிக் கொள்கிறோம்".என்கிறார்கள்.
"பாவம் எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது என்கிறபோது அந்த பாவத்தை செய்வதில் எங்களுக்கு தயக்கமில்லை "என பேசுகிறார்கள்.
எல்லாமே அவர்கள் வருவாய் ஈட்டும் வரைதான்!
அதன் பின்னர்தான் வருந்தத் தொடங்குகிறார்கள்.
நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்யவில்லை.
செய்துகொண்டால் என்ன எல்லாம் கிடைக்குமோ அவையெல்லாம் அவரால் அனுபவிக்க முடிகிறது.
அவர் கேட்கிறார்.
"மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு கல்யாணம் 'கியாரண்டி'கொடுக்கிறதா?உறுதி கொடுக்கிறதா?
அப்படி உறுதி கொடுக்காத சம்பிரதாயத்தை ஏற்காமல் வாழ்கிற எங்களால் சந்தோஷமாக வாழ முடிகிறது,எனக்கு கல்யாணம் என்பதில் நம்பிக்கை இல்லை. அதனால் நானும் மாண்டலின் ராஜேசும் சேர்ந்து வாழ்கிறோம்.வழக்கு மன்றம்,விவாகரத்து என்கிற அவஸ்தைகள் இல்லை" என  சொல்கிறார்..
அது உண்மைதானே?
கல்யாணம் செய்து கொண்டபின்னர்  ஆண் வேறு துணை நாடி சென்றதில்லையா?செல்வதில்லையா?
"டி .ஜி.வீட்டுக்குப்  போகிறேன்"எனப் பெருமையாக சொல்கிறான்
ப்ராஸ்ட் டியூட் என சொன்னால் கவரவம் குறைகிறது என நினைத்து 'டெம்பரவரி கேர்ள்  'என்பதை சுருக்கி டி ஜி.என்கிறான்.
ஆக இன,மான உணர்வு பேசுகிற நம்முடைய  மறு பக்கம் நமக்கு தெரியாமல்  வேறு பக்கத்தை எழுதிக் கொண்டிருக்கிறதே.

ஞானியும் பேரரசும்.....!


தலைப்பினை பார்த்ததும் சிலருக்கு இயக்குனர் பேரரசு நினைவுக்கு வரலாம்.இங்கு நான் குறிப்பிடுவது வைரமுத்துவை!
ஞானி என்றதும் இளையராஜாவை என நினைக்க வேண்டாம்..அவரைப் பற்றி  எழுதுவதற்கு எனக்கு போதிய இசை ஞானமோ, அறிவோ இல்லை.இனிமையான பாடல் என்றால் கேட்க பிடிக்கும்.
அது எந்த ராகம் ,என்னன்ன இசைக் கருவிகள் இசைக்கப்பட்டிருக்கின்றன .அதுவும் தெரியாது.
ஆர்மோனியம் தெரியும்.மிருதங்கம் தெரியும்,வயலின் தெரியும் ,நாதசுரம் தெரியும்.தமுக்கு தெரியும்.இப்படி என்னைப் போன்ற பாமரனுக்கு என்ன தெரியுமோ புரியுமோ அவை மட்டுமே தெரியும்.
"காற்றே எந்தன் கீதம்' ஜானியில் ஜானகியின் மயக்கும் குரலில் மயங்கியது உண்டு.
'மன்மத லீலையை 'ரசித்த அந்த காலத்து ரசிகன் ராகம் தெரிந்தா மயங்கினான்?வார்த்தை புரிந்தது, ராகம் நின்றது.அவனவன் பாடினான்.அவனுக்கு ஏற்ற குரல் வளத்தில்!
அந்த ரசிகன் இப்போது இல்லை.
ரசனை மாறி இருக்கிறது,மாறினாலும் அவனுக்கு பாடலின் ராகம் புரியாது.'நானொரு சிந்து  காவடி சிந்து'  பாடலை இன்ன ராகம் என தெரிந்து பாடவில்லை.அது சித்ரா பாடிய பாடல் என்றாலும் எத்த னை  ஆண்கள் பாடிக் கொண்டு திரிந்தார்கள்!
வரிகள் நின்றன ,ராகம் மனதில் பதிந்தது.
இன்றைய கடல் பட விழாவில் வைரமுத்து பேசியது ஒரு ஞானியின் பதிவாக தெரிந்தது.
"வேம்பினை யுலகிலூட்டாதே ,-உன்றன்
வீராப்புதன்னை விளங்க நாட்டாதே ,
போற்றும் சடங்கை நண்ணாதே -உன்னைப்
புகழ்ந்து பலரில் புகலவொண் ணாதே
சாற்றுமுன்வாழ் வை எண்ணாதே -பிறர்
தாழும் படிக்கு நீ தாழ்வாகப் பண்ணாதே "
இது கடுவெளி சித்தர் பாடியது.

எத்துனை அர்த்தம் பொதிந்த பாடல்!

பயப்படலாமா,திரை உலகப் பிரபலங்கள்?

கடல் திரைப்படத்தின் நட்சத்திர அறிமுக விழா...சென்னையில்!
ஹைதராபாத்தில் எப்படி நிகழ்ந்ததோ ,அப்படியே சென்னையிலும்!
ஆந்திர தலைநகரில் மகள் துளசியை முன்னாள் கதாநாயகி ராதா அறிமுகம் செய்தார்.
சென்னைக்கு ஏனோ ராதா வரவில்லை.
தமிழ்ப் புத்தாண்டின் இரண்டாம் நாள் இந்த விழா நடந்தது.
எனக்கும் கார்த்திக்கிற்கும் சிறு கோபம்.
அதை இருவருமே காட்டிக் கொண்டோம்.
"உங்கள் மீது எனக்கு கோபம் அதனால் பேசவில்லை."என சொன்னாலும் ஆரத் தழுவிக் கொண்டார்.
நானும்"எனக்கும் கோபம்தான் ,ஏன் போன் எடுப்பதில்லை?எத்தனை நாள்,எத்தனை தடவைகள் பேச முயன்றிருக்கிறேன் "என கோபம் காட்டிக் கொண்டேன்.
உலக இசை நாயகன் ஏ.ஆர்.ரகுமானிடம் "எப்போது நாம் பேசலாம்?" எனக் கேட்டதற்கு "யூ எஸ்.போய் திரும்பியதும் விரிவாகப் பேசலாம் "என கை குலுக்கினார்.
"மிக்சிங் முடியட்டும்  பேசுவோம்"என அளந்து பேசி கை குலுக்கினார் மணிரத்தினம்.
நிகழ்ச்சிகள் வழக்கம் போல இருந்தன.
பேசிய அனைவரும் "புத்தாண்டுக்கும் பொங்கலுக்கும் "வாழ்த்துகள் சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.
எந்த புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்வது ,ஆங்கில ஜனவரிக்கா,தமிழ்' தை' க்கா என பகிரங்கமாக சொல்வதில் சிலருக்கு அச்சம்.
அது சரியே!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என சொல்லி இன்றைய ஆட்சியாளர்களின்
கோபத்திற்கோ,சாபத்திற்கோ ஏன் ஆளாக வேண்டும்?
ஆனால் துணிந்து "தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து" சொன்னவர் கவிப் பேரரசு வைரமுத்துதான்!
தமிழனுக்கு தனது புத்தாண்டு தையில்தான் தொடங்குகிறது என பகிரங்கமாக சொல்ல முடியவில்லை.ஒரு அரசு திருவள்ளுவன் நாளை பெருமையுடன் கொண்டாடி 'வள்ளுவர் ஆண்டு 'என்பதாக அறிவித்தால் மற்றொரு அரசு 'இல்லை' என மறுதலித்து சித்திரையை புத்தாண்டாக அறிவிக்கிறது.
தை யில் கொண்டாடப்பட்டுவந்த மதுரை தேரோட்ட விழாவை மன்னன் திருமலை சித்திரைக்கு மாற்றியதில் வந்த பிழை !
சித்திரையை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடியவர்கள் தை யில் பொங்கல் வைத்து மூன்று நாட்கள் கொண்டாடிவருகிறார்கள்.
ஆன்றோரும் சான்றோரும் ஆய்ந்து தெளிந்து தை தான் தமிழனின் புத்தாண்டு என் அறிவித்தால் அதிகார பலம் கொண்டு அதை மாற்றுவது ,அதை தமிழன் தாங்குவது தமிழ் நாட்டில் மட்டுமே நடக்கும்.
ஆம்..உணர்வு அற்றுப் போனவன் இவன் மட்டுமே!

அதுவும் இற்றுப் போகும் நாள் எதுவோ?











'

வெள்ளி, 4 ஜனவரி, 2013

இயக்குநருக்கு நேர்ந்தது பாலியல் வன்முறையா ?

ஆணோ.பெண்ணோ எவர் மீது பாலியல் ரீதியான கொடுமை நிகழ்ந்தாலும் அது கண்டிக்கத்தக்கதுதான்!
மன்னிக்கத் தக்கதல்ல!
சென்னையில் நடந்ததாக சொல்லப் படும் ஒரு" இழிவான நிகழ்ச்சி!"
திரைத்துறை சார்ந்தவர்கள் -குறிப்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட 'பார்ட்டி'
இயக்குநரும் ,  கவர்ச்சியான  நடிகையும் அந்த விருந்தில் நெருக்கமாகி விட்டார்கள்.
இந்த நெருக்கம் என்கிற வார்த்தைக்கு திரை உலகில் பல அருத்தங்கள் இருக்கின்றன.
நீங்கள் எந்தவகை அருத்தம் கொண்டாலும் சரியாகவே இருக்கும்.
எல்லாவற்றுக்கும் உச்சம் உண்டல்லவா?அந்த உச்சம் சென்றதும்.......
"உன்னோட ரூம் எங்க இருக்கு?"
"வாங்க,போகலாம்!" என அழைத்து சென்றார்  அந்த நடிகை.
இயக்குநரும் மகிழ்ச்சியுடன் சென்றார்.
அறை தாழிடப் பட்டது.
இயக்குநரின் ஆடைகளை நடிகையே களைகிறார் !அதுவரை அவர் கற்பனை செய்திராத காட்சி,பெண்ணே ஆணின் ஆடைகளை களை  எடுத்தது எந்தப் படத்தில் வந்திருக்கிறது?
இப்போது ஜட்டி மட்டுமே பாக்கி!கட்டி அணைத்தபடி கதவருகே சென்ற நடிகை கதவை திறந்து அவரை முழு மூச்சாக வெளியே தள்ளி விட்டு கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொள்கிறார்.
எத்தனை நாட்களாக காத்திருந்தாரோ நடிகை?அந்த இரவிலும் அந்த கோலத்தில் அவரைப் பார்த்தவர்கள் என்ன நினைத்திருப்பர்?
இது எந்தவகையை சேர்ந்த பழி வாங்கல்?
யார் மீது குற்றம்?
பெண் மீதா?
ஆண் மீதா?
சொல்லுங்கள்?
சிவனின் பெயருள்ள இயக்குநர் பாவமா?
அழகான அமுல் பாப்பா பாவமா?
சரி,இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் என்கிறீர்களா?
ஆந்திர தேசத்து நண்பர்கள் சொன்னது.
ஆக உண்மையின் சதவீதம் பற்றிய சந்தேகம் வருவது இயற்கையே!
ஆனால் சம்பவம் பற்றி வேறு விதமாக சம்பந்தப்பட்டவர்களே சொன்னதாக பத்திரிக்கை செய்தி உண்டு.

செவ்வாய், 1 ஜனவரி, 2013

இசைஞானியும் நானும்.....!

இசைஞானியும் நானும்.....!
சில ஆண்டுகளுக்கு முன்னர்....
"இளையராஜாவிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும் சிறப்பு மலருக்கு !அதனால் பத்து கேள்விகள் எழுதிக் கொடுங்கள்"என நண்பர் டைமன்ட் பாபு கேட்டார்.
நானும் எழுதிக் கொடுத்துவிட்டு மதுரைக்கு சென்று விட்டேன்.
மதுரையில் இருந்த போது பாபுவிடம் இருந்து போன்!
"சார் பேசணுமாம்"என சொன்னார்.
சார் என்றதும் நான் இளையதிலகம் பிரபுதான் பேசப் போகிறார் என நினைத்தேன்.
ஆனால் பேசியது இளையராஜா.
"என்ன கேள்வி கேட்டிருக்கீங்க?"
வழக்கமான எள்ளல்!
"எந்த கேள்வியை சொல்றீங்கண்ணே?"
"ராவணன் பற்றி ஏதோ கேட்டிருக்கிங்களே?"
"ஆமாண்ணே! சிவனை தனது கானத்தினால் மயக்கியவன் ராவண மாமன்னன் என்கிறார்களே,அவன் எந்த ராகம் பாடி மயக்கி இருப்பான் என கேட்டிருக்கிறேன்."
"உங்களுக்கு ராகத்தைப் பற்றி என்ன தெரியும்"?
"ஒண்ணுமே தெரியாது.ரசிப்பேன்.கேட்க இனிமையாக இருந்தால் பலதடவை கேட்பேன்.உங்கள் பாடல்களால் ரசிகனாகிவிட்டவன்.நீங்கள் இசைஞானி என்பதால் அந்த கேள்வியக் கேட்டேன்"
"ராவணன் எந்த ராகத்தில் பாடினால் என்ன"என சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார்.
அமரர் ஏ.பி. நாகராஜன் இயக்கி இருந்த திரைப் படத்தில் மாமன்னன் ராவணனிடம் [டி.கே.பகவதி.] துணைவியாராக நடித்தவர் 'கயிலை மன்னனை கானத்தால் மயக்கியது எந்த ராகம்' என கேட்பார்.அதற்கு அவர் காம்போதி என சொல்வார்.சிதம்பரம் ஜெயராமனின் கம்பீரக் குரல் நிமிர்ந்து நிற்க செய்யும்.
இது தொடர்பாக எனது கேள்வியை வைத்திருந்தேன் .
அதற்கு தான் இளையராஜா சினந்து கொண்டார்.
இன்று வரை ஏ.பி.என்.சொன்னது சரிதானா என்பதற்கு பதில் இல்லை.

புத்தாண்டு விழாவும் போதையும்...!

மது அருந்தினால் ஆயுள் சுருங்கும் எனத் தெரிந்தாலும் குடிப்பதை நிறுத்துவதில்லை.
கல்யாணம் வீடாக இருந்தாலும் ,எழவு வீடாக இருந்தாலும் மது குடிப்பது ஒரு மரபாகிவிட்டது.
"மச்சான்,கல்யாணம் ஆகிடுச்சுடா ஜாலியா இருக்கனும் "என்று உல்லாசத்துக்கும் ,"என்னடா வாழ்க்கை ,இப்பதான் பேசிட்டிருந்தான் ,திரும்பிவந்து  பார்த்தா  செத்துட்டாங்கிராங்க"என்று துக்கத்துக்கும் மருந்தாக மது குடிக்கிறார்கள்.
முடிந்து போன புத்தாண்டு கொண்டாட்டத்தில் மதுவின் ஆட்சிதான்,!ஆண் பெண் என்கிற பேதம் இல்லாமல் பள்ளி சிறுவர்கள் சிறுமியர் வரை குடித்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியிலும் குடிப்பவர்கள் இருக்கிறார்கள்.திராவிட கட்சிகளில் அதிகமாக இருக்கிறார்கள்.பா.ம.க.விலும் இருக்கிறார்கள். குடிப்பதில் மட்டும் கட்சி பார்ப்பதில்லை.இதில் என்ன கொடுமை என்றால் அவர்களுக்கு கட்சியின் கொள்கை என்பது என்னவென தெரியாது.
"அவரைப் பிடிக்கும்.அதனால் அந்த கட்சி" என்பார்கள்! நாடு உருப்படுமா?
தமிழ்நாட்டில் சாலை ஓரங்களில் மட்டையாகி கிடப்பார்கள்.மேலை நாடுகளில் போலீஸ் பிடித்துப் போகும்.இங்கு படத்தில் பார்ப்பது இங்கிலாந்தில் மட்டையாகியவர்களும் ,மகிழ்ச்சியின் வெளிப்பாடும்,
இன்னொரு செய்தியும் படித்தேன்
பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி கில்லட்டினால் படு கொலை செய்யப் பட்டதையும் ,அவனுடைய தலைதான் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதையும் டி.என்.ஏ.சோதனை வழியாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.இது அறிவியலின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது.


மது குடிப்பு அறிவியலின் அழிவைக் குறிக்கிறது,