சனி, 31 ஆகஸ்ட், 2013

இராஜாஜி-அருப்புக்கோட்டை இடைத் தேர்தல்

பசும்பொன் தேவர் அவர்கள் இயற்கை எய்திய பிறகு 1964 ல் அருப்புக்கோட்டை தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.தேவரின் மரணத்துக்கு முன்னர் இலை மறை காய் மறையாக இருந்து வந்த உட்கட்சி பூசல் பகிரங்கமாக வெளிப்பட்டது.
டி .எல்.சசிவர்ணத்தேவரும் ,பி.கே.மூக்கையாத் தேவரும் எதிர் எதிராக செயல் படத்தொடங்கினார்கள்
நான் இருவருக்கும் பொதுவான பத்திரிகையாளனாக இருந்தேன்.இதனால் இருவருமே என்னை வெகுவாக விரும்பினார்கள்.
பசும்பொன் தேவர் இருந்த போதுகோஷ்டிகள் இருந்தாலும் அதை காட்டிக் கொண்டதில்லை.தேவருக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள்.தேவர் என்ன சொன்னாலும் அதை தெய்வத்தின் வாக்கு என்பதாகவே தென்பாண்டி சீமை மக்கள் கருதினார்கள்.அதனால் சசிவர்ணத்தேவரும் மூக்கையாத் தேவரும் இணைந்து கட்சிப் பணி யாற்றினார்கள் .
அந்த காலத்தில் பார்வர்டு பிளாக் கட்சியின் பத்திரிகையாக 'கண்ணகி' இருந்தது.டேபிலாய்டு சைஸ்.அதன் ஆசிரியர் சக்திமோகன்.
நேதாஜி என்கிற பெயரில் சசிவர்ணத் தேவரும் ஒரு பத்திரிக்கை நடத்தினார்.பசும்பொன் தேவர் மறைந்ததும் 1964 -ல் அருப்புக்கோட்டை பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டது.
யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் கட்சிக்குள் சிக்கல்
ஏ.ஆர்.பெருமாள் தேவருக்கு  ஆசை.ஆனால் அவர் சசியின் ஆதரவாளர் என்பதாக சிலர் சொல்லவே வழக்கறிஞர் பி.கே.வேலாயுதன் நாயரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
இவர் பா.பி.கட்சியினருக்காக நிறைய வழக்குகளில் வாதாடியவர் .தேவருக்கும் தெரிந்தவர். இவரை சுதந்திரா  ,திமுக ஆதரித்தது.
சுதந்திரா கட்சியின் நிறுவனர் மூதறிஞர் ராஜாஜி, கோவை தொழிலதிபர் ஜி.கே.சுந்தரம்  ஆகிய இருவரும் பிரசாரத்திற்காக மதுரை வந்தனர்.
டி வி.எஸ்.நிறுவனம் கார் அனுப்பியது.
அந்த காரில் ராஜாஜி,சுந்தரம் இருவரும் பின்பக்க ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.
நானும் வேட்பாளரும் முன் ஆசனத்தில் டிரைவர் பக்கமாக அமர்ந்தோம்.
தொகுதி நிலவரம் பற்றி வேட்பாளர் வேலாயுதன் நாயரிடம் மூதறிஞர் பல கேள்விகளை கேட்க அதற்கு நாயரும் நம்பிக்கையான பதில்களை சொல்லி வந்தார்.
சசியின் ஆதரவு இல்லாத நிலை பற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
முக்குலத்தோர் அதிகமாக வாழ்கின்ற தொகுதியில் நாயர் வேட்பாளருக்கு  ஆதரவு கிடைக்குமா என்கிற சந்தேகம் அந்த இரு தலைவர்களுக்கும் இருந்தது.
ஏனென்றால் காங்கிரஸ் கட்சி முக்குலத்து சமுதாயத்தை சேர்ந்த ராமநாதபுரம் ராஜாவின் சகோதரரை நிறுத்தி இருந்ததுமுடிவில் காங்கிரஸ் வேட்பாளர் காசி நாத துரை வெற்றி பெற்றார்.எட்டாயிரம் வாக்குகளில் தோற்றதாக நினைவு. 
பார்வர்டு பிளாக்கின் கோட்டையாக திகழ்ந்த அருப்புக்கோட்டையை காங்கிரஸ் கைப் பற்றியது.
பா.பி.கட்சியில் அன்று தொடங்கிய பிளவு இன்று வளர்ந்திருக்கிறதே தவிர ஒற்றுமை என்பது கானல் நீராகவே இருக்கிறது.


வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

எம்.ஜி.ஆரின்.நேர்மை-கடுமை.

மதுரை.முகவை,நெல்லை என மூன்று மாவட்டங்களிலும் அதிமுக வளர்ச்சிக்காக மறுமுறையும்  பயணம் மேற்கொண்டார்.எம்.ஜி.ஆர்
.வழக்கம் போல் மதுரை பாண்டியன் ஹோட்டலில் இருந்து திக் விஜயம் தொடங்கியது .
மாவட்ட நிர்வாகிகள்,எம்.ஜி.ஆர். மன்ற பிரமுகர்கள் என பத்துக்கும் மேற்பட்ட கார்களில் தலைவரைப் பின் தொடர்ந்தனர்
எப்போதுமே தலைவரின் காரிலிருந்து நான்காவது கார் பத்திரிகையாளர்கள் இருக்கிற கார்கள்.
எப்படியும் மூன்று கார்கள் இடம் பெறும் !
அந்த மூன்றில் நானும் மதுரை தினமலர் நிருபர்,சென்னையில் இருந்து தலைவரை தொடரும் கார்க்கி,மக்கள் குரல் நிருபர் மதுரை சண்முகம் என சிலர் இருப்போம்.
அன்று ஒரு காரில்  ,கார்க்கி,தினமலர் நிருபர் என இன்னும் சிலருடன் நானும் இருந்தேன்.தினமலர் நிருபரின் பெயர் நினைவில் இல்லை.
மதுரையில் சில பகுதிகள் ,முகவையில் சில பகுதிகள்,நெல்லையில் சில.பகுதிகள் என சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தலைவர் பழனிக்கு பயணத்தை தொடங்கினார்.
வழியில் தலைவரின் காரை மக்கள் வழி  மறித்து மனுக் கொடுத்தனர்.
சில இடங்களில் நள்ளிரவு எனப் பார்க்காமல் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை வைத்துக் கொண்டு காத்திருந்தனர்
.அவர்களில் பெண்கள் கைக்குழந்தைகளுடன் இருந்தனர்.
ஓரிடத்தில் தலைவர் காரை விட்டு இறங்கி காத்திருந்த மக்களிடம் குறைகளை கேட்கத் தொடங்கவே நானும் தினமலர் நிருபரும் அந்த இடத்திற்கு ஓடினோம்.
"எப்படி இருக்கீங்க "-இது தலைவர்.
"அந்த கட்சிக்காரங்க[திமுக.]போலீசை வச்சு எங்க மீது பொய்க் கேசு கொடுக்குறாங்க.ஆக்கிரமிப்பு செஞ்சு குடிசை போட்டிருக்கிறதா சொல்றாங்க.."என்று சொன்னதும் "அன்பு "என அன்பழகனை கூப்பிட்டார்
பொ அன்பழகன் அப்போது முகவை மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்றத்தின் செயலாளர்.அவர் வந்ததும் மனுக்களை அவரிடம் கொடுத்து விசாரிக்கும்படி சொன்னார். 
பிறகு காரில் ஏறியதும் கார்கள் பின் தொடர்ந்தன.
பத்திரிகையாளர்களை வந்த கார்கள்  எங்கள் இருவரையும் விட்டு விட்டு பறந்து விட்டன,
நள்ளிரவு .என்ன செய்வதெனப் புரியவில்லை.
களைந்து சென்ற மக்களில் ஒரு இளைஞர் ஆறுதல் சொன்னார்.
"கவலைப் படாதிங்க.நெல்லையிலிருந்து ஏதாவது ஒரு டாக்சி வரும் ,உங்களை ஏத்திவிட்டபிறகு நாங்க போறோம் "என  சொல்லிஎங்களுடன் இருந்தார்.அவருடன் மேலும் சிலர் இருந்தனர்.
இருட்டில் எங்களுக்கு துணை வண்டுகளின் சப்தம்.குளிர்.பயம்.செலவுக்கென பணம் எதுவும் கொண்டுவரவில்லை. 
எம்.ஜி.ஆரின் டூர் என்றால் எதற்கும் கவலை இல்லை.பத்திரிகையாளர்கள் சாப்பிட்டு விட்டார்களா,தனக்கு வைக்கப்படும் பதார்த்தங்கள் அவர்களுக்கும் வைக்கப் படுகிறதா என்பதை கேட்டறிந்த பின்னர்தான் அவர் சாப்பிட செல்வார்.
அவரே அந்த அளவுக்கு கவனிக்கும்போது மற்ற தலைகளை பற்றி சொல்லவேண்டியதில்லை.இத்தகைய கவனிப்பு இருக்கும்போது எதற்காக பணம் எடுத்து செல்லவேண்டும் என்பதால் யாரும் அவ்வளவாக எடுத்துக் கொண்டு வரமாட்டார்கள்.
எங்கள் இருவரிடமும் மொத்தம் நூற்றி இருபது ரூபாய் இருந்தது..அதை வைத்துக்கொண்டு அதிகாலை பஸ்ஸில் மதுரை சென்று விடலாம் என்கிற முடிவுடன் இருந்த போதுதான் ஒரு டாக்சி வந்தது,
மதுரை செல்லும் முடிவு மாறியது.எங்களுக்காக நள்ளிரவு என பாராமலும் உதவியாக நின்ற இளைஞர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு பழனிக்குப் பறந்தோம்.
நாங்கள் இருவரும் பழனிக்கு சென்றபோது காலை பத்து மணி.எங்களைப் பற்றி ஜேப்பியாரிடம் தலைவர் கேட்டிருக்கிறார் "பாதியிலேயே மதுரைக்கு திரும்பிவிட்டார்களோ "என கேட்டிருக்கிறார்.யாரும் பதில் சொல்லவில்லை!எங்களைப் பார்த்ததும் பதறிப்போனார் ஜேப்பியார்."என்னடா மாப்ளைகளா என்னாச்சு'?"என்றார்.அவரிடம் நடந்ததை சொன்னோம்.
அவர் எங்களை தலைவரிடம் அழைத்து சென்றார்.
நாங்கள் பயணித்த காரின் டிரைவரை அழைத்து வரச் சொன்னார்.தலைவர்.!
அவரிடம் விசாரணை நடத்தினார்,
"கார்க்கிதான் அவங்க எப்படியும் வந்திருவாங்க.லோக்கல் பேப்பர் என்பதால் கட்சிக்காரங்க காரில் வந்திருவாங்க "ன்னு சொல்லி என்னை காரை எடுக்கச் சொன்னார்" என சொல்லவே..தலைவர் சில

நிமிடம் பேசவில்லை
,பாலகுருவா ரெட்டியார் அந்த டிரைவரை வெளியில் அனுப்பிவிட்டார்
.தலைவருடன் ஜேப்பியார்,பாலகுருவா ரெட்டியார் ,காளிமுத்து நாங்கள் இருவர் என ஆறு பேர் மட்டும் இருந்தோம்.நாங்கள் பயணித்த டாக்சியின் காருக்கான வாடகையை ரெட்டியார் கொடுத்துவிட்டார்.
தலைவர் சென்னைக்கு திரும்பியதும் கார்க்கி இனிமேல் தன்னுடன்வரக்கூடாது என சொல்லிவிட்டார் என்பதாக எங்களுக்கு சொல்லப்பட்டது.தலைவர் எம்.ஜி.ஆர். அடுத்து மதுரை வந்த போது  கார்க்கி வரவில்லை.