ஞாயிறு, 20 அக்டோபர், 2013

வீரப்பன்.3."பொண்ணை கொடு "!

பசுச் சாணம் கொண்டு மெழுகப்பட்டிருந்த மண் தரை.சொளகில் அரிசி பரப்பி கல் தேடிக்கொண்டிருந்தாள் பாப்பம்மா.பக்கத்தில் அய்யன்.வெங்கல கும்பா நிறைய பழைய சோறு.!நீரும் மோரும் கலந்திருந்த பழைய சோற்றில் இரண்டு வெங்காயமும் ஒரு பச்சை மிளகாயும் கிடந்தன. கும்பாவிலிருந்ததை 'விர்ர்...விர்ர்'என்ற ஓசையுடன் உறிஞ்சிக் கொண்டிருந்தார்.அவ்வப்போது வெங்காயம் கொஞ்சம் ,பச்சை மிளகாய் கொஞ்சம் என செல்லமாக ஒரு கடி .பழைய சோறு தேவாமிர்தமாக இரைப்பைக்குள் இறங்கிக் கொண்டிருந்தது.!

         "பாப்பு....நெத்திலிக் கருவாடு சுட்டு வச்சிருக்கலாம்ல?"

அய்யன் கடும் உ ழைப்பாளி.வாய்க்கு வஞ்சகம் செய்யமாட்டார்.ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பது மாதிரி,காலையிலும் மத்தியானமும் கஞ்சியோ ,கூழோ எதுவானாலும் சரி கவலை இல்லை.ஆனால் தொட்டுக் கொள்ளமட்டும் 'சுள்'னு உப்புக்கண்டமோ, கருவாடோ இருக்க வேண்டும்

        "ஆயிப் போயிருச்சி.வீட்ல எதுவும் இல்ல. கடைப்பக்கமா  போனிங்கன்னா  வாங்கியாந்திருங்க" சொளகில் கிடந்த அரிசியை அப்படியும் இப்படியுமாக தள்ளிவிட்டு ஒரு புடை புடைத்தாள் பாப்பு.

      "தீந்து போச்சுங்கிறத நேத்தே சொல்லிருக்கலாம்ல.?"

     "மறந்து போயிட்டேன்.மாயன் பொண்டாட்டி பஞ்சவர்ணம் நேத்து தலை குளிச்சான்னு  இருந்த கருவாட்டையும் ,உப்புக் கண்டத்தையும் கொடுத்துவுட்டுட்டேன்.அவளுக்கு யாரு இருக்கா நம்மள விட்டா?"

     "அதுவும் சரிதான்."

காலியான கும்பாவை ஓரமாக தள்ளி வைத்தார்.மீசையிலிருந்த பருக்கையை துடைத்துக் கொண்ட பெரிசு கொல்லை பக்கமாக ஒதுங்கியது.அங்கு கிடந்த பட்டியல் கல்லில்  உட்கார்ந்து கொண்டு வெத்திலை செல்லத்தை மெள்ளவில்லை என்றால் அன்றைய 'போஜனம்'முழுமை அடையாது.அய்யனின் சிம்மாசனம் அந்த பட்டியல் கல்தான்.கோடை காலத்தில் அந்த பட்டியல் கல்தான் அம்சதுளிகா மஞ்சம்.!

     "கும்பிடறேண்... ண்...ணே  !"என்றபடி உள்ளே வந்தாள்  பஞ்சவர்ணம்.அய்யனின் பக்கமாக உட்கார்ந்தாள் .அவளைத் தொடர்ந்து வந்த பாப்பம்மாள்  அரிசியில் பொறுக்கிய கற்களை சுரைக்காய் கோடி பக்கமாக கொட்டினாள் !

       "இப்பதான் வழி தெரிஞ்ச்சிதாக்கும்.அண்ணன்காரனை மறந்திட்டியோன்னு மருகிப் போயிட்டேன் தாயி."என்றார் அய்யன்.

       "அட நீங்க ஒண்ணு !புதுசா கண்ணாலம் கட்டிக்கிட்டவ புருஷனை விட்டு வர்றதுக்கு மனசு வேணும்ல!ஊட்டுக்குள்ளேயே புருசனை பொத்தி வச்சு அழகு பாக்குராலாக்கும் உம்மோட தங்காச்சி!"

அடுத்தவர்களை கேலி செய்வது என்றால் பாப்பமாவுக்கு அவ்வளவு இஷ்டம்.அதிலும் பஞ்சு என்றால் அவளுக்கு தொக்குதான்.!

பஞ்சவர்ணம் விடுவாளா என்ன!அய்யனின் கையைப் பிடித்துக் கொண்டாள் ."ஏண்ணே ,மதினி மனசுக்குள்ள எதோ வெசனத்த வச்சுக்கிட்டு சடச்சிக்கிற மாதிரி இருக்கு.உங்கிட்ட நேரா சொல்றதுக்கு வெக்கம் போல.அதான் என்ன சாக்கா வச்சுக்கிட்டு  சாடை  பேசுறாக"!என்றவள் பாப்பம்மாவை பார்த்து "மதினி நான் வேணும்னா முத்துலட்சுமியை கூட்டிக்கிட்டு எம் ஊட்டுக்குபோயிடுறேன்.எங்கண்ணனை நல்லா கவனிச்சு வுடு .பொத்தி பொத்தி அழகு பாத்து வுடு மதினி!"என்று கேலி பேச மூவருக்கும் ஒரே சிரிப்பு.பாப்பு பொய்க்கோபத்துடன் அவளை எட்டிப் பிடித்தாள் ,"வாயப்பாரேன் சிறுக்கிக்கி வானம் வரை நீளுது"!

          அங்கே ஒரே கலகலப்பு.அடைவதற்கு முன்னர் சிட்டுக்குருவிகள் கீச்சிடுமே அது மாதிரி!

இன்னும் வருகிறது,


கருத்துகள் இல்லை: