
கடந்த தேர்தலின் போது எனது மனைவி கேட்டதற்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை .அவளும் உயிருடன் இல்லை.!
''ஓட்டு போட்டா நம்ப வாழ்க்கை நெலமை ஒசந்திருமா? "
இது அவளின் அறிவுக்கு எட்டிய கேள்வியாக இருந்தாலும் நியாயம் இல்லை என ஒதுக்கமுடியாது.
நாம் ஓட்டுப்போட்டு ஜெயித்தவர்களின் வாழ்க்கை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து விடுகிறது.சொத்து நிலவரம் ,அந்தஸ்து கூடிவிடு கிறது.எம்.பி.நம்மை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
குறையை சொன்னால் அதை எம்.எல்.ஏ.விடம் சொல்லுங்க.நாங்க டெல்லி மேட்டரை பார்க்கிறவங்க என சொல்லிவிடுகிறார்கள்.
நமது நிலைதான் என்ன?
அரசு ஊழியராக இருந்தால் சம்பள உயர்வுடன் கிம்பளமும் கிடைக்கிறது.அவர் நம்மில் ஒருவராக இருந்தாலும் அரசு ஊழியர் என்கிற தகுதி பிரித்து வைத்து விடுகிறது.
நம்மை புழுவாகவே பார்க்கிறார்.அவருடைய அலுவலில் பிரச்னை என்றால் கொடி பிடித்து போராட சங்கம் இருக்கிறது.
தனியாரிடம் வேலை பார்க்கிறவனுக்கு வேலை உத்திரவாதம் இருக்கிறதா? எம்.பி,.எம்.எல்.ஏ..இவர்களால் அவனுக்கு என்ன உதவி கிடைக்கிறது?அவர்கள் அந்த பதவியில் அமர்ந்ததுமே முதலாளிகளின் 'நண்பர்கள்'ஆகி விடுகிறார்கள்.
அரசு அறிவித்தாலும் ஆட்டோ வாடகையில் மாற்றம் இருப்பதில்லை.கூடுதலாக கொடுத்தால் ஏறு.இல்லாவிட்டால் நடையை கட்டு என்கிறார்கள்.
போலீஸ் சான்றிதழ் என்கிற ஏமாற்று அட்டையை ஒட்டிக்கொண்டு நடக்கிற அராஜகங்களை யாரும் கேட்பதில்லை.தொழில் சங்கங்கள் மக்களுக்காக பேசுவதில்லை.ஆனால் ஓட்டு கேட்டு வருவது மக்களிடம்தான்.!
ஆட்டோ விவகாரத்தை ஒரு உதாரணமாகதான் சொன்னேன்.
வணிகர்களுக்கு இருக்கிற சங்கம் அவர்களிடம் வேலை பார்க்கிறவர்களுக்கு நல்லவை செய்வதில்லை.கசக்கி பிழிவதை அங்காடி சினிமா அழுத்தமாக சொல்லியும் என்ன மாற்றம் வந்தது?
சொல்லுங்கள் பார்க்கலாம்.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் நிலையை உயர்த்த நம் பெயரில் திட்டங்களை போட்டுக்கொள்கிறார்கள்.
நாம் உயர வழி இல்லை.ஓட்டுப் போட்டும் மாற்றம் இல்லை.
ஆம் ஆத்மி என்று டெல்லியில் மாற்றம் வந்தும் மக்களுக்கு பயன் இல்லை.
இதற்கு தீர்வுதான் என்ன?
அரசியல் வியாபாரிகளை அடையாளம் கண்டு அவர்களை தோற்கடிப்பதுதான் ஒரே வழி !
கட்சி ரீதியாக பார்க்காமல் நல்லவனுக்கு மட்டுமே ஓட்டு என முடிவு எடுப்போம்.
கட்சிகளை மறந்து நல்லவர்கள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கட்டும் !