ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

உங்க ஓட்டு யாருக்கு?

எல்லா வீடுகளிலும் இருப்பதைப் போல எனது வீட்டிலும் எலக்சன் ஜூரம் !
கடந்த தேர்தலின் போது எனது மனைவி கேட்டதற்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை .அவளும் உயிருடன் இல்லை.!
''ஓட்டு   போட்டா நம்ப வாழ்க்கை நெலமை ஒசந்திருமா? "
இது அவளின் அறிவுக்கு எட்டிய கேள்வியாக இருந்தாலும் நியாயம் இல்லை என ஒதுக்கமுடியாது.
நாம் ஓட்டுப்போட்டு  ஜெயித்தவர்களின் வாழ்க்கை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து விடுகிறது.சொத்து நிலவரம் ,அந்தஸ்து கூடிவிடு கிறது.எம்.பி.நம்மை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
குறையை சொன்னால் அதை எம்.எல்.ஏ.விடம் சொல்லுங்க.நாங்க டெல்லி மேட்டரை பார்க்கிறவங்க என சொல்லிவிடுகிறார்கள்.
நமது நிலைதான் என்ன?
அரசு ஊழியராக இருந்தால் சம்பள உயர்வுடன் கிம்பளமும் கிடைக்கிறது.அவர் நம்மில் ஒருவராக இருந்தாலும் அரசு ஊழியர் என்கிற தகுதி பிரித்து வைத்து விடுகிறது.
நம்மை புழுவாகவே பார்க்கிறார்.அவருடைய அலுவலில் பிரச்னை என்றால் கொடி பிடித்து போராட சங்கம் இருக்கிறது.
தனியாரிடம் வேலை பார்க்கிறவனுக்கு வேலை உத்திரவாதம் இருக்கிறதா? எம்.பி,.எம்.எல்.ஏ..இவர்களால் அவனுக்கு என்ன உதவி கிடைக்கிறது?அவர்கள் அந்த பதவியில் அமர்ந்ததுமே முதலாளிகளின் 'நண்பர்கள்'ஆகி விடுகிறார்கள்.
அரசு அறிவித்தாலும் ஆட்டோ வாடகையில் மாற்றம் இருப்பதில்லை.கூடுதலாக கொடுத்தால்  ஏறு.இல்லாவிட்டால் நடையை கட்டு என்கிறார்கள்.
போலீஸ் சான்றிதழ் என்கிற ஏமாற்று அட்டையை ஒட்டிக்கொண்டு நடக்கிற அராஜகங்களை யாரும் கேட்பதில்லை.தொழில் சங்கங்கள் மக்களுக்காக பேசுவதில்லை.ஆனால் ஓட்டு கேட்டு வருவது மக்களிடம்தான்.!
ஆட்டோ விவகாரத்தை ஒரு உதாரணமாகதான் சொன்னேன்.
வணிகர்களுக்கு இருக்கிற சங்கம் அவர்களிடம் வேலை பார்க்கிறவர்களுக்கு நல்லவை செய்வதில்லை.கசக்கி பிழிவதை அங்காடி சினிமா அழுத்தமாக சொல்லியும் என்ன மாற்றம் வந்தது?
சொல்லுங்கள் பார்க்கலாம்.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் நிலையை உயர்த்த  நம் பெயரில்   திட்டங்களை போட்டுக்கொள்கிறார்கள்.
நாம் உயர வழி  இல்லை.ஓட்டுப் போட்டும் மாற்றம் இல்லை.
ஆம் ஆத்மி என்று டெல்லியில் மாற்றம் வந்தும் மக்களுக்கு பயன் இல்லை.
இதற்கு தீர்வுதான் என்ன?
 அரசியல் வியாபாரிகளை அடையாளம் கண்டு அவர்களை தோற்கடிப்பதுதான் ஒரே வழி !
கட்சி ரீதியாக பார்க்காமல் நல்லவனுக்கு மட்டுமே ஓட்டு என முடிவு எடுப்போம்.
கட்சிகளை மறந்து நல்லவர்கள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கட்டும் !

வடபழனி கோவிலில் ஒரு மணி நேரம்.....

நான் பக்திப் பழம் இல்லை.
நாத்திகனும் இல்லை.நாத்திகம் பேசலாம்.அது எதிராளியைப் பொருத்து.!
பேசவேண்டுமே என்பதற்காக வீம்புக்கு பேசுகிறவன் என சொல்லிக்கொள்ளலாம்.
எனக்கு குல தெய்வம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியன் சுவாமி.
சோழவந்தான் சு.சாமி இல்லை.அந்த மனிதனை எனக்குப் பிடிக்காது !மனதில் துயரம் படர்ந்தால்  நான் யாரிடமும் சொல்வதில்லை .அதனால் எந்த பயனும்  இல்லை என்பதால் கோவிலில் போய் உட்கார்ந்து விடுவேன்.
பலவிதமான மனிதர்களைப் பார்ப்பதால் துயரம் திசை மாறி சென்று விடுகிறது.
அன்று திருமண நாள் என்பதால் வடபழநி  கோவிலில் கூட்டம் அதிகம்.
மணமகனுக்கு எப்படியும் 45 வயது இருக்கும்.மணமகள் பெருத்த உடம்பு.  காமடி நடிகை ஆர்த்தி மாதிரி.சற்றே மாறு கண்.வயது 40 ஐ கடந்து இருக்கலாம்.நரை அதிகம்.
இருவருக்கும் அதிகமான உறவினர்கள் இல்லை போலும்.புகைப்படக்காரர் விதம் விதமாக படம் எடுத்தார் .தொழில் நேர்த்தி.காசு வாங்கிவிட்டதால் கடமை.
இத்தனை வயது கடந்து கலியாணம் செய்கிறோமே ,பார்ப்பவர்கள் கேலி செய்யமாட்டார்களா என்கிற எண்ணம் அவர்களுக்கு இருந்ததாக தெரியவில்லை.இருவரும் நாணமுடன் பேசிக்கொண்டார்கள்.
ஆனால் சிலர் அவர்களை கேலியாக பார்த்தனர்.முணுமுணுத்தனர்.
வயதாகிவிட்டது என தெரிந்தும் கேலி செய்வர் என அறிந்திருந்தும் கடவுள் சந்நிதியில் கலியாணம் செய்துகொண்ட அவர்கள் மனிதம் நிறைந்தவர்கள்.
உடல் சுகத்துக்காகவோ,குழந்தை வேண்டும் என்பதற்காகவோ கலியாணம் செய்து கொள்ளவில்லை.
அவரிடம் கேட்டேன் பத்திரிகையாளன் புத்தியாச்சே.!
''நான் கூலி வேலை செய்பவன்.ஒரு நாளைக்கு 400 வரை கிடைக்கும்.கட்டிடத் தொழிலாளி.அவளும் அதே வேலைதான்.வெளியில் சாப்பிட்டால் அதிக செலவாகிறது.அதனால்தான் கலியாணம் செய்து கொண்டோம்.எங்களுக்கு இருக்கிற சுகமே போதும்.யாருக்காக சம்பாதிக்கிறோம்.அதை அனுபவிக்கலாமே ,அதை விட வேற என்ன வேண்டும்..மேஸ்திரிதான் எல்லா செலவும்.எங்களை மாதிரி வயசு போனவங்க நிறைய இருப்பாங்க.கூச்சப்பட்டுகொண்டு அப்படியே தனியாக வாழ்கிறார்கள்.தப்பான வழியில் போகிறார்கள்.டாஸ்மாக்கில் காசை கொடுத்து உடம்பை கெடுத்துக் கொள்கிறார்கள்..நான் அப்பட்ப்பட்டவன் இல்லை" என்றார்.
கரெக்ட்.அடுத்தவனை  பற்றி ஏன் நினைக்கவேண்டும்?
நமக்காக வாழ்வோம் நல்லவிதமாக்! ஆடி காரில் போகிறவனுக்கு கூட இத்தகைய மன நிம்மதி இருக்காது.
முருகா..!காப்பாற்று !
என்னையும்தான்.!



வீரப்பனுக்கே அல்வாவா? [வீரப்பன்.10.]

இடுப்பில் ரிவால்வாரை சொருகிக்கொண்டு கிளம்பிய வீரப்பனை தடுத்து நிறுத்தினான் அருச்சுனன்.
       ''அண்ணே...கொஞ்சம் நில்லு.! உங்கிட்ட முக்கியமான சங்கதி பேசணும்.!"
சேத்துகுளிக்கு பயம். வீரப்பனை யாரும் இப்படி தடுத்து நிறுத்துவதில்லை.!வீரப்பன் வெளியில் புறப்படுவதாக இருந்தால் அருச்சுனன் தான் சகுனம் பார்த்து சொல்வான். வேறு வேலையாக எங்கேயாவது போவதாக இருந்தால்  வீரப்பனே சகுனம் பார்த்து கிளம்பி விடுவான்.

      இன்று அருச்சுனனே சகுனத்தடை மாதிரி...!
      சேத்துக்குளிக்கு இறுக்கமாக இருந்தது.அருச்சுனனுக்கு அந்த கிளைமேட்டிலும் வியர்ப்பது மாதிரியான உணர்வு...அவன் கொண்டு வந்த செய்தியே அப்படித்தான்.!
       வீரப்பன் கோபத்தை வெளிக்காட்டவில்லை.கரகரப்பான குரலில் "அம்மா...வனதேவதை!எல்லாம் உஞ்செயல்!" என்று மேலே பார்த்து விட்டு பாறையில் 'நச்'சென்று உட்கார்ந்தான்.
       ''ம்...சொல்லு..என்ன சங்கதி?"
      "நம்ம லோடை அய்யனும் ...அய்யந்தொரை  ஆளுங்களும் கடத்திட்டுப் போயிட்டானுக.!"
       "என்னடா ...சொ ...ல்...ற ?"
       "கொள்ளேகால் பார்ட்டிக்கு நாம்ப அனுப்பிய சந்தனக்கட்டை லோடை வண்ணாத்திப் பாறைக்கு பக்கத்தில வச்சு கடத்திட்டாணுக,!"
ஏறிட்டுப்பார்த்த வீரப்பன் கோபத்துடன் ''நம்ம ஆளுங்க அபப  என்ன பண்ணிட்டிருந்தாணுக.மந்திக்கு மசுரு புடுங்குனானுங்க்களா?"
         பதில் இல்லை.
        "கேக்கிறனில்ல. மசுரு புடுங்குனானுங்களா?....என்னடா நடந்திருக்கு..சொல்லுடா?"
         "கிட்டக்க செக் போஸ்ட்டு இருந்துச்சு.அதனால் நம்ம ஆளுங்க துப்பாக்கியை  சும்மா வச்சிட்டாணுக.அருவாள வச்சு புரட்டிருக்காணுக.சேதம் நமக்கு இல்ல,"
         "சேதம் நமக்கில்லையா?லோடை லாவிட்டுப் போயிட்டானுகளே!"
         '' நா ..உசிர பத்தி சொன்னேன்.அவனுங்கள்ள ரெண்டு பேர  போட்டாச்சு..அவனுங்க தலைய சாக்குல சுத்தி கொண்டாந்திருக்கானுங்க.!"
        ''எதுக்கு? தீயில வாட்டி திங்கிறதுக்கா......லோடை  லாவிட்டு போயிட்டானுகளே?அதுக்கு எவன்டா  ஜவாப்பு?"
         "எம்மேல ஏன்ணே  காயுரே?பாலவனத்தான் சொல்லியனுப்பிச்ச சேதி இம்புட்டுதான்.!தலையோடு ரெண்டு பேரு வந்தாச்சு.மத்த பேரு அந்த ஊர்ல மறஞ்சு கிடக்குராணுங்க.அய்யன போட்டுத்தள்ளமா  இங்க வரமாட்டணுங்க.இம்புட்டுதான் சேதி."! என அருச்சுனன் சொல்லி முடித்தான்.
      ''தலைவரே!இப்ப நேத்திள்ள.அஞ்சாறு மாசமா அவனுங்க நம்மோட தான்  மோதிட்டிருக்காணுக.புன்னாச்சிக்கு பக்கத்தில இருக்கிற ஊர்க்காணுக அவனுகளுக்கு புல்  சப்போர்ட்டு.!ஊர்க்கார பயலுகளுக்கு டெய்லி சாராயமும்  கறியும் சப்ளை பண்ணி  வசியம் பண்ணிருக்கானுக ."என்றான் சேத்துக்குளி .
       "அவனுங்க எந்த ஏரியாவ்ள டேரா அடிப்பானுங்க?"
       "மேக்காடு,முத்தட்டி இங்கிட்டுதான் சந்தனக்கட்டை வெட்டுவானுகண்ணே "!
         ''சரி...நா பாத்துக்கிறேன்"!
சேத்துக்குளியை கூட்டிக்கொண்டு வடக்கு பக்கமாக இருந்த குகைக்குள் புகுந்தான் வீரப்பன்.

அடுத்து என்ன நடக்குமோ?


  

வியாழன், 10 ஏப்ரல், 2014

பாஞ்சாலியா,வா மகளே வா!

திருத்தி எழுதிய தீர்ப்புகள்  கவிதை தொகுப்பு .
நான் அவ்வப்போது வாசிப்பது பழக்கம்.வழக்கம் .
மது அருந்திய போதை யை வரிகள் தரும்.
வலி இருக்கும்.சமுதாயச் சாடல் நெரி கட்டும்.
பொய்மை சுடப்படும்.போலிகள் தோலுரியும் !
விலக்கி வைக்கப்பட்டவர்கள் என்பது தலைப்பு
எத்தனை முறை வாசித்தாலும்
சுவாசம் சூடாகிவிடும்.நீங்களும் படியுங்கள்.
''பாஞ்சாலியா?
வா  மகளே வா!

துச்சாதனன் உன்னைத்
தொட்டிழுக்க வரும்போது --
மாதவிலக்காதனால் ...

ஓராடை கட்டி நீ
உள்ளே இருந்தாயாம்?
இங்கே--
நான் வாழும் தேசத்தின்
நடைபாதை ஓரத்தில்
உடுத்தத் துணியில்லா
ஒரு கோடி சோதரியர் ....
ஓராடை மட்டும்தான்
உடுத்திருகின்றாரே!
மாதமெலாம்  அவர்களுக்கு
மாதவிலக்கா மகளே?

சகோதரிகாள்!
நீங்கள் ஜவுளிக்கடைப் பொம்மைகளாய்
ஜனித்திருக்கக் கூடாதா?"

கவிப்பேரரசு வைரமுத்து  எழுதியதில்
இன்றும் உயிர் வாழும் உண்மை.
கொலுபொம்மைக்கு  கூட
புதுத் துணி கிடைக்கிறது.
குடிசை வாழ் பெண்ணுக்கு
அதற்கும் வழி இல்லை.


தேர்தலில் போட்டியிடும் கிரிமினல்கள் .

பக்கா ரவுடி,கொலைகாரன்,அவன் மீது டஜன் கணக்கில் கிரிமினல் வழக்கு இருக்கு.கைக்கு விலங்கு போட்டு வீதி,வீதியா இழுத்துக் கொண்டுபோய் ஜனங்களிடம் காட்டப்படவேண்டியவன் .அப்படிப்பட்ட கிரிமினல் எலக்சனில் ஜெயிச்சிட்டான்,மந்திரியும் ஆகிட்டான் என்பதற்காக அவனுக்கு மாலை,மரியாதை போடலாமா?கைது செய்யவேண்டிய காவல்துறை அவனுக்கு சலாம் வைக்கலாமா?
      இதுதான் ஜனநாயகம்னா அந்த வெங்காயம் வேணவே வேணாம்.!
     சட்டங்கள் செய்யப்பட வேண்டிய பார்லிமெண்டுக்கு நடக்கிற தேர்தலில் போட்டியிடுகிறவர்களில் 557 பேர் கிரிமினல்கள்.சீரியஸ் கிரிமினல்கள் 328 பேர். எல்லா கட்சிகளும்  கிரிமினல்களை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கின்றன என்பதுதான் உலக மகா கேவலம்,
     கோடீஸ்வரன்கள் 921.
    பட்டதாரிகள்.1664.
    பெண்கள்.241.
    'பான் 'கார்டு இல்லாதவன் 922.
    வருமானவரி கணக்கு காட்டாதவன் 1527.
இவர்களில் எத்தனை பேர் ஜெயிப்பார்கள் என்பதல்ல எனது கேள்வி .இத்தகையவர்களுக்கு அரசியல் கட்சிகள் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பது ஏன்?
     ஏன் அவர்கள் திருந்தமாட்டார்களா என கேட்கலாம்.
நல்லா திருந்தட்டும்.திருந்த வேண்டும் என்பதுதானே ஆசை.
திருந்துவான் என நம்பி ஒரு நாள் அவனை உனது வீட்டில் தங்க வைப்பாயா?
உத்தமனாகிவிடுவான் என உனது மகளுடன் பழக விட்டுப்பாரேன்?
அரசியல் காரணங்களுக்காக யாரையாவது போட்டுத்தள்ளவோ .கை காலை முறித்து எச்சரிப்பதற்காகவோ வைத்திருக்கும் அவர்களை தேர்தலில் நிறுத்தி 
அந்தஸ்து வாங்கிகொடுப்பது அயோக்கியத்தனம்.
சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு இத்தகைய கிரிமினல்கள்தான் காரணம்.
ஜனநாயகம் என்கிற பெயரில் அவர்களை அனுமதிப்பதும்,அரசியலைப் பயன்படுத்தி மக்களின் சொத்தை கொள்ளை அடித்தவர்களை கொண்டாடுவதும் இழிவானது.
நீதிமான்களே பயப்படுவார்கள் கிரிமினல்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு.!
பதவியை பயன்படுத்தி பழி வாங்கலாம்.அல்லது கிரிமினல்களை அனுப்பி போட்டுத்தள்ளலாம் என அஞ்சுவார்கள்.
       கிரிமினல்களை அரசியல்கட்சிகள் ஊக்கப் படுத்துகின்றன.
       இதை தடுக்கவோ,எதிர்க்கவோ வழி தெரியவில்லை.
       பெருந்தலைவர் சொன்னதைப் போல 'நாடு கெட்டுப் போச்சு.!'
 

புதன், 9 ஏப்ரல், 2014

தேர்தல் பிரசாரத்தில் ஏடாகூட செயல்கள்.

தேர்தல் பிரசாரத்தில் அடிப்பது ,பிராண்டுவது,தவறாக நடப்பது இவையெல்லாம் புதியவை இல்லை என்றாலும் அவை நடக்காமல் தடுப்பது என்பது அவசியமாகும்.
மக்கள் திலகம் ,நடிகர் திலகம் இவர்களுடன் தேர்தல் பயணம் சென்ற அனுபவம் எனக்கு !
வழியெல்லாம்  கை கொடுக்க முயலுவோரை தவிர்க்க இயலாது .
அவர்களுக்கு கை கொடுத்தபடியே கார் செல்கிறபோது நகக்கீறல்கள் பட்டு விடும்.இதனால் இரு திலகமும் சாமர்த்தியமாக கையை முழுமையாக கொடுத்து மாட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமலும் விரல்களால் தொட்டபடி சென்று விடுவார்கள்.
ஆனால் தற்போது பிரசார வேன்களில்  செல்கிறவர்களை யாரும் தொட முயற்சிப்பது இல்லை.அவர்களை வேடிக்கை பார்ப்பதுடன் சரி,
இருந்தாலும் நடந்து செல்லும்போது மாட்டிக்கொள்ளாமல் இருக்க முடியாது. மீரட் தொகுதியில் நடிகை  நக்மாவை காங்.கட்சி எம்.எல்.ஏ.முத்தமிட்டிருக்கிறார்.தொண்டர்கள்[?] தவறாக தொட்டிருக்கிறார்கள்.இவைகளை சகஜம் என கருதுவது அவர்களின் மனதை பொருத்த விசயமாகும். ஆனால் அநாகரீகம் என்பது எனது கருத்து.
தொண்டனை அடித்துவிட்டு 'அவன் என் கட்சிக்காரன்.அவனை நான் அடிப்பேன் 'என்று விஜயகாந்த் கடந்த சட்டசபை தேர்தலின் போது சொன்னது ஒரு தலைவனுக்கு அழகல்ல.அடிப்பதை  உள் கட்சி ஜனநாயகம் என நினைத்துவிடக்கூடாது .
சொன்னதை செய்யவில்லை என்று கேஜ்ரிவாலை ஒரு ஆட்டோ டிரைவர் அறைந்தது அநாகரீகம்.அடிக்கும்படி தூண்டுவது காட்டுமிராண்டித்தனம்.இவை எல்லாம் தவிர்க்கமுடியாது ஒன்றிரண்டு சம்பவங்கள் நடக்கலாம் என  அலட்சியமாக இருப்பது எதிர்மறைவு நிகழ்வுகளுக்கு காரணமாகிவிடும்.வன்முறைகள் தலை தூக்கலாம்.
அதிமுக,தி .மு.க,பா.ம.க. ஆகிய கட்சிகளின் சில பேச்சாளர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்கமுடியவில்லை.ஆபாசமாக இருக்கிறது.
காமடியாக பேசலாம் விஜயகாந்தைப்போல.ஆனால் யாரும் அப்படி பேசுவதில்லை.அவர் மட்டும்தான் அப்படி பேசுகிறார்.
'நான் போன தேர்தலில் பேசியதைதானே அவர்கள் இப்போது பேசுகிறார்கள்" என வடிவேலு யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும் எல்லா மேடைகளிலும் காமடிதான் நடக்கிறது.
கலை நிகழ்ச்சி என்கிற பெயரால் வசை பாடுவதும் அசிங்கமாக ஆடுவதும் அதிகமாகிவிட்டது.கூட்டத்தை சேர்ப்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள்.
 .

சனி, 5 ஏப்ரல், 2014

இழிவான அரசியல் தேவையா?

மலத்தில் புழுத்தவைகளை எடுத்து அது பட்டுப் புழு என சொன்னாலும் நம்பித் தொலைக்கிற மக்கள் வாழ்கிற புண்ணிய பூமி.!
அவர்களுக்கு மயக்கமே வாழ்க்கை.கன்னத்தில் நாலு அப்பு அப்பிவிட்டு 'இந்தா காசு.குவாட்டரை அடிச்சிட்டு ,குஸ்காவை தின்னிட்டு மல்லாந்து படுத்துக்கோ 'என சொன்னாலும் கவலைப்படுவதில்லை.'தலைவா நீ வாழ்க' என அடிமையாகிவிடுவார்கள்.
அடிமை வாழ்வு பழகிப்போனது.சுரணை இல்லாமல் வாழ்கிறோமே என்கிற  உணர்வினை  தொலைத்து விட்டார்கள்.
கொத்துக் கொத்தாக சொந்தங்களை கொல்வதற்கு நம்மவர்களே கத்தி அருவாள் கொடுத்தார்கள் என்று சொன்னால் 'அப்படியா,ஒழிக ஒழிக 'என சொல்லிவிட்டு  மறுநாளே மண்டியிட்டு கிடப்பார்கள்.
'என் குடும்பமோ உறவுகளோ யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் 'என சத்தியம் பண்ணிவிட்டு மகனுக்கும் மச்சானுக்கும் மனைவிக்கும் பதவிகளை ரிசர்வ் பண்ணுகிறவர்களை பற்றி கவலைப்படுவதில்லை.
பிள்ளையா குட்டியா எனக்கெதுக்கு சொத்து என சுருட்டுகிரவர்களைப் பற்றி கோபப்படுவதில்லை.
இனத்தின் பெயரால் மொழியின் பெயரால் வியாபாரம் செய்பவர்களை புனிதர்கள் என நம்புவார்கள்.
இத்தகைய அருங்குணத்தார் வாழ்கிற மண்ணில்தான் தமக்குரிய மன்னர்களை தேர்ந்தெடுப்பதற்காக போட்டி நடக்கப்போகிறது.
நல்லவர் யார்,வல்லவர் யார் என யாருக்கும் தெரியாது.
பணத்தில் வலுவானவன் ஜெயிக்கப்போகிறான்.
நாமும் கோஷம் போடப்போகிறோம்.

த்து...இதென்ன கேவலம்.வெட்கம்.!

தொலைக்காட்சிகளில் கேவலமான விளம்பரம் ஓடிக்கொண்டிருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டு தொடர்பானது.
ஏற்கனவே சூதாட்ட ஊழலில் மாட்டிக்கொண்டு பெரிய பெரிய தலைகளெல்லாம் தரையில் உருண்டு கொண்டு இருக்கின்றன.உலகம் முழுவதும் ரசிக்கப்படுகிற விளையாட்டுக்காக செய்யப்படுகிற விளம்பரங்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பது நியாயம்தான்.
அதற்காக சாணியில் சிலை செய்து சந்தியில் நிறுத்தலாமா?
ஒரு தாய் படுத்த படுக்கையில் கிடக்கிறாள்.
அருகில் மகன்.கவலையுடன் பார்க்கிறான்.சுவரில் மாட்டியிருக்கும் ஒருவரின் படத்தைக்காட்டி 'அவர் உன் அப்பா இல்லை 'என சொல்கிறாள்.
அவனின் ரியாக்ஷன் என்னவாக இருக்கவேண்டும்?
அது தெரிவதற்கு முன்னதாகவே அம்மா[?] ஜர்தா பாக்குப்பொட்டல சரம் மாதிரி போட்டோ சரத்தை காட்டி 'இதில யாரோ ஒருத்தர்தான் உன்னோட அப்பா 'என சொல்ல கிரிக்கெட் விளையாட்டுக்கான இசை கேட்கிறது..
மகனின் முகத்தில் மலர்ச்சி .ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிகிறது.
'நீயே யார்னு முடிவு பண்ணு' என சொல்லிவிட்டு வெளியில் ஓடி விடுகிறான்.
 புருஷன் யார் என்பது அம்மாவுக்கு டவுட்டு.சாகும் நிலையில் வந்து தொலைக்கிறது.
அப்பன் எவன் என்கிற கவலை மகனுக்கும் இல்லை.எவனா இருந்தா எனக்கென்ன அவனை முடிவு பண்ணி நீயே சொல்லு என ஓடுகிறான்.
இப்படி ஒரு விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஓடுகிறது.
இது தான்யா தற்போதைய 'இந்திய'கலாசாரம் என்கிறார்களா?
சத்தியமாக சொல்வேன் அது தமிழர் கலாசாரம் இல்லை.

கண்டம் துண்டமாக ஐவரை வெட்டி வீசு! [9]

வீரப்பன் வந்தான்.
அவனுக்காகவே காத்திருந்தவர்கள் ஆவேசத்தை கொட்டி தீர்த்தார்கள்.
''எதிரிகளை விட துப்பு சொல்றவனுங்களைதான் ஈவு இரக்கம் பாக்காம போடனும்.தேங்கா கொம்பு பள்ளத்தில கூடுறானுகலாம்.குளோஸ் பண்ணிடவேண்டியதுதான்.யோசனையே பண்ணாதே.!''
வீரப்பனின் கூட்டாளிகள் ஒரே குரலில் சொல்ல...
இரு பிரிவாக வியூகம் அமைகிறது.
ஒரு பிரிவுக்கு வீரப்பன் தலைமை.!
அடுத்த பிரிவுக்கு சேத்துக்குளி தலைமை.!
காவேரியில் நெஞ்சளவு வெள்ளம்.பள்ளமான பகுதி என்பதால் இழுவை அதிகம் .
அடர்ந்த புதர் ஓரமாக அய்யன்தொரை காலைக்கடனுக்காக உட்கார்ந்திருக்கிறான்.வாயில் சுருட்டு..குணசேகரன்,முத்துக்குமரன் இருவரும் கரை ஓரமாக குளிக்கிறார்கள்.கோட்டையூர் அய்யணனும் தனபாலனும் கருங்குரங்கை நெருப்பில் வாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.ஐந்து பேருக்கும் அன்றைய காலை நாஸ்டா கருங்குரங்கு ப்ரை
குணசேகரன்,முத்துக்குமரன் இருவரும் தலையை துவட்டியபடி கரை ஏற ...
அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்த சத்தத்துடன் 'ஐயோ' என்ற அலறலும் எதிரொலித்தது.
பயந்து அலறிய அய்யன்தொரை எழுந்து காலை தூக்கி வைத்து ஓடுவதற்குள் தலை சிதறி விழுகிறான்.குறி வைத்து அடிப்பதில் சேத்துக்குளியான் கில்லாடி.!
கோட்டையூர் அய்யணன்,தனபாலன் இருவரும் வெவ்வேறு திசையில் பாய மறு நொடியே அலறி விழுந்தார்கள்.
இரண்டு நிமிடங்களில் ஐந்து பேர் காலி.!
''என்னப்பா இப்ப சந்தோசமா?" சகாக்களை பார்த்துக் கேட்கிறான் வீரப்பன்.
"இவனுங்களை இப்படி கொன்னதால எதிரிகளும் போலிசும் பயந்திடப்போறதில்ல.நம்மள பத்தி நினைச்சுப் பார்க்கிறதுக்கே அவனுங்க பயப்படனும்னா அஞ்சு பயலுகளையும் கண்ட துண்டமா வெட்டி காவேரியில் வீசிப்புடனும்.எந்த எடத்தில,எந்த ஊர்ல,எவனோட காலு கை ஒதுங்குமோ தெரியாது.போலீசுக்காரங்க மண்டைய பிச்சுக்கணும்.இதுதான் அவனுகளுக்கு பாடம்." என்று வீரப்பன் சொல்ல  மறு நிமிடமே ஆளுக்காள் ஆயுதங்களுடன் செத்துக்கிடந்தவர்களை சூழ்ந்து கொண்டார்கள்.
ஒருவன் கைய துண்டாக்கினான்.இன்னொருவன் கரகரவென கழுத்தை அறுத்தான்.அவர்களுக்கு அருவருப்போ சங்கடமா ஏற்பட்டதாக தெரியவில்லை.ஆடு வதை செய்யும் இடத்தில் எப்படி தோல் உரித்து தொங்க விடுவார்களோ ,அதைப்போல வீரப்பனின் ஆட்களும் கூறு போட்டார்கள்.
அரை மணி நேரத்தில் துண்டு போடும் வேலை முடிந்தது.
காவேரியில் அவைகளை வீசி எறிந்து விட்டு ஆவேசம் அடங்கும்வரை குளியல் போட்டார்கள்.
வெந்தும்,வேகாமலும் கிடந்த கருங்குரங்கை மீண்டும் நெருப்பில் வாட்டி ஆளுக்கு கொஞ்சமாக பிய்த்துக்கொண்டு கிளம்பினார்கள்..