வியாழன், 17 செப்டம்பர், 2015

தந்தை பெரியாருடன்.....!

மதுரையில் தமிழ்நாடு  நாளிதழில்  செய்தியாளர் பணி!

1970 என நினைவு. செய்தி ஆசிரியர்  எஸ்.டி,ராய்  அழைத்தார்.

'பெரியார்  மதுரை டி.பி.யில் தங்கியிருக்காராம் ..போய் ஒரு பேட்டி  எடுத்திட்டு வாங்க" என்றார்.

பேருந்து  நிலையத்திலிருந்து  அரசரடி செல்லும் வழியில் மதுரை நகராட்சி  கட்டியிருந்த  ட்ராவலர்ஸ் பங்களாவில்தான்  அய்யா தங்கியிருந்தார்.

காலை பதினோரு மணி இருக்கும்..அறைக்கு  வெளியில்  கருஞ்சட்டை தொண்டரிடம்  நான்  இன்னார்  என்பதை சொன்னேன்..உள்ளே  சென்றவர்  உடனே திரும்பிவிட்டார் .அய்யா வரச்சொன்னதாக சொன்னார்.

ஒரு வித அச்சத்துடன்தான்  சென்றேன்.அந்த காலத்தில் கருப்புச்சட்டைக்காரர்கள்  என்றால் பயங்கரவாதிகள் என்கிற அளவுக்கு  காங்கிரஸ்காரர்கள் அச்சுறுத்தி வைத்திருந்தனர்.'கரிமேட்டில் காங்கிரஸ்காரனை குத்திவிட்டார்கள்.வடக்கு மாசி வீதியில்  வெட்டிவிட்டார்கள்' என்பது போன்ற பல செய்திகள்!.  அந்த காலத்தில்  காங். கட்சியினருக்கும்  கருப்புச்சட்டையினருக்கும்  அடிக்கடி மோதல் வரும்.. கம்யூனிஸ்ட் கட்சியினரும்  அவ்வப்போது  மோதிக்கொள்வார்கள். இரண்டு கட்சியினருக்கும்  காங். கட்சி  ஈடு கொடுத்து வந்த காலம்.

அய்யா  என்னை  சிறியவன் என்று  நினைக்காமல் '' வாங்க. தம்பி! நீங்க  பாப்பாரப் பிள்ளையா?" என்று  மரியாதையுடன்  கேட்டார். அருகில்  போடப்பட்டிருந்த  மர நாற்காலியில்  அமர்ந்தேன்.

''அய்யா ,நான் 'நான்-பிராமின்"

''நல்லாருங்க!  நல்லாருங்க. மட்டன்லாம்  சாப்பிடுவிங்களா ?.என் கிட்ட என்ன கேட்கப் போறிங்க?'

  ஏன் அப்படி  கேட்டார்  என்பது  உடனடியாக புரியவில்லை..நான்  நெத்தியில்  பூசியிருந்த  திருநீறு  அவரது  சந்தேகத்துக்கு  காரணமாக  இருக்கலாம்  என  பின்னர்  அறிந்து கொண்டேன்..ஆனாலும்  நான்  கேட்ட எல்லா கேள்விகளுக்கும் தயங்காமல்  பதில் சொன்னார்.

அந்த  நாளினை  என்னால்  மறக்க  இயலாது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

சிக்கலில் சிவாஜி சிலை.

எதிர்பார்த்ததுதான்! ஆனாலும் ஒரு நம்பிக்கை! சிவாஜிக்கு  மணிமண்டபம்  அரசே அமைக்கும் என  முதல்வர்  அறிவித்தபோது  அதன் விதி  சிவாஜி  சிலையின் தலையில் விடியும் என எதிர்பார்க்கவில்லை.

கலைஞர்   தொடங்கிய  பெயர் சொல்லும் திட்டங்கள்  எதையும் புரட்சி தலைவி செயல்பட விட்டதில்லை என்பது  உலகம்  அறிந்தவைதான். வள்ளுவர் கோட்டம்  அழகும்  எழிலும்  இழந்து  நிற்பதன் காரணம்  தெரியாதா?
அற்புதமான  அண்ணா நூலகம் ,ஓமந்தூரார்  கட்டிடம்  இவையெல்லாம்  என்ன நிலையில்  இருக்கிறது  என்பது  தெரியாதா?
இதைப் போலதான் நடிகர் திலகத்தின் சிலையின் நிலையும்!

முன்னொரு தடவை  கண்ணகியின்  சிலை  அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர்  அதே இடத்துக்கு வந்து  சேர்ந்தது. அதைப் போல  சிவாஜியின்  சிலைக்கும் நடக்கலாம்..நடக்காமலும் போகலாம்.

சிவாஜி சிலை மணி மண்டபத்தில்  வைக்கப்படலாம் என்பதே  பெருத்த சந்தேகத்தை  எழுப்பியிருக்கிறது.

மணி மண்டபமாவது வருமா என்பதுதான்!

மணிமண்டப  அறிக்கை  வந்த போது  இருந்த  மகிழ்ச்சி  தற்போது இல்லை.
ஆதரித்து  அறிக்கை  வாசித்தவர்களால் முதல்வரை  கண்டித்து  வாய் திறக்க முடியாது..திறந்தால் எத்தகைய  சிக்கலுக்கு  ஆளாக வேண்டியதிருக்கும் என்பதற்கு  ஈ.வி.கே .எஸ்.இளங்கோவனே  சாட்சியாக இருக்கிறார்.!

அரசு அறிவித்த மக்கள் நலத்திட்டங்களே  நிலுவையில் கிடப்பதாக  எதிர்க்கட்சியினர்  சொல்கிறபோது  மணிமண்டபம் மட்டும் எழுந்துவிடுமா?

சந்தேகம்  வரத்தான்  செய்கிறது.