செவ்வாய், 29 மார்ச், 2016

அன்புள்ள வலைப்பூ தோழர்களே,

வணக்கம்.

                      முதுமை என்பது ஒரு வரப்பிரசாதம்தான்.பேரன்,பேத்திகள் இவர்களுடன் வாழ்வது மகிழ்வான வலி நிவாரணி. எத்தகைய  மன அழுத்தமாக இருந்தாலும் அவர்களுடன் பேசும்போது காணாது போய்விடும். ஆனால் அது துணை இழந்தவர்க்கு கிடைப்பதில்லை.பணம் இல்லாதவர்க்கும்  கிட்டுவதில்லை என்பது  முக்கியம்.

                  தாயை அவர்கள் மட்டும்தானா இழக்கிறார்கள்.மனைவியை தந்தை  இழக்கிறானே..தாயின் பாசத்தை மட்டுமே  பெற்ற பிள்ளைகள் தந்தையின்  அருமையை அறிவதில்லை.இப்படி வாழக்கூடியவர்கள்  தத்தமது நிலைப்பாடுக்கு ஆயிரம் காரணம் வைத்திருப்பார்கள்..அது நியாயமாகவும்  இருக்கக்கூடும்.ஆனால் முதுமை அதனது வலிமையைக் காட்டும்போது  அந்த முதியவனால் தாங்க முடியாது போனால்...?

                 இன்று அதிகாலையில்  எனக்கே  ஒரு நிகழ்வு!

                 குளியலறையில்  அமர்ந்து எழுந்த எனக்கு வழக்கமான தலை சுற்றல். எனக்கு கழுத்து வலி கொடுத்திருக்கிற அருட் கொடை! ஸ்பாண்டலைட்டிஸ்  என்பார்கள்.அதற்கு மாத்திரை மருந்துகள் என்பது பயிற்சி மட்டுமே! அலுவலகம் செல்லும் அவசரகதியில் சில நாட்களில் பயிற்சி சாத்தியமாவதில்லை

.டு-வீலரில் பயணிக்காதே. சென்னை மாநகர சாலைகளில் மேடும் பள்ளமும் குண்டும் குழியும் எலும்பு தேய்வை அதிகமாக்கிவிடும். கூடவே இடுப்பு எலும்பும் தேயும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. நமது ஏழ்மைக்கு அதெல்லாம் தெரியுமா?

                    சரி விஷயத்துக்கு வருவோம்.

                    தலை சுற்றிய நான் தரையில் விழுந்துவிட்டேன்.இது இரண்டாம் முறை.தடால் என்ற சத்தம் கேட்டு எனது துணைவி காப்பாற்றிவிட்டாள். தகவல் அறிந்து கடைசிமகள் இல்லம் வந்து விட்டாள்.மருமகன் பேத்தியுடன் வந்துவிட்டார்.மருத்துவமனையில் இருந்து மகளின் பதட்டக்குரல்.மூத்த பெண்  கவலையில்!இன்னும் யார் கஷ்டப்படுவார்களோ தெரியவில்லை.

                 அவர்களுக்கு நான்  கொடுக்கிற தண்டனைதானே இது.?! எனது மகன்களுக்கு தெரியாது.அவர்களை கஷ்டப்படுத்தக்கூடாது என்பது எனது விருப்பம்

                    .போனஸ் வாழ்க்கைதானே நான் வாழ்வது,

                     எனக்கு சுகம் ,சுயமாக வாழ்வதுதான்!  வாழ்ந்து காட்டுவேன்.

                       

வியாழன், 24 மார்ச், 2016

அன்புள்ள வைகோ அவர்களுக்கு,.....

மதிப்பிற்குரிய வைகோ அவர்களுக்கு,
                                                                அரைகுறையாக அரசியல் தெரிந்த ஓர் அரை வேக்காடு எழுதுவது....... முதலிலேயே என்னைப்பற்றி சொல்லிக் கொள்வது நல்லதுதானே! நீங்கள்  மாவீரன் பிரபாகரனை பற்றி ரொம்பவும் அக்கறையுடன் பேசி வந்ததால் அது உண்மையாக இருக்கும் என்று நம்பி  ஏமாந்த தம்பிகளில் அடியேனும் ஒருவன்..உங்கள் பேச்சின் வேகத்தை நம்பி ஏமாந்த எண்ணற்றவர்களில் நானும் ஒருவனாக இருந்ததற்காக வெட்கப்படாமல் இருக்க முடியுமா?

                                                         ஒரு தலைவராக இருந்தீர்கள்.மக்கள் நலக் கூட்டணியை அமைத்தீர்கள்.எவ்வளவு பெரிய காரியம்.ஆனால் விஜயகாந்தை  சேர்த்ததுடன் நில்லாமல்  கேப்டன் விஜயகாந்த் அணி  என்பதாக மாற்றினீர்களே , பெற்ற குழந்தையை  நொடி நேரத்தில்..... எப்படி கம்சனாக  மாறினீர்கள்? மக்கள் நலக்கூட்டணியின் மற்ற தலைவர்களும்  கை தட்டி வரவேற்ற கேவலத்தை டி.வி.யில் பார்த்து நொந்து போய்விட்டேன்.ஒரு வேளை உங்களின்  தந்திரமாக இருக்குமோ? எதிர்பாராத விதமாக வெற்றி வாய்ப்பு வேறு விதமாக இருந்துவிட்டால் ஊடகங்களில் விஜயகாந்தின் அணி என்பதாகத்தானே வரும்...எதற்கு அப்படி நினைப்பானேன்  அ.திமுக, திமுக இரண்டு பெரிய கட்சிகளையும் மீறி உங்கள் அணிதான் வெற்றி பெறப்போகிறது.!!!

                                       ஆனால் தேர்தல் முடிவில் விஜயகாந்த் அணியில் உள்ள கட்சிகளின்  ஒவ்வொரு கட்சியின் செல்வாக்கும் தெரிந்துவிடும் .ஒவ்வொரு கட்சியின்  ஓட்டு சதவிகிதமும் மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை  கொண்டுவரும்.தனித்து நின்றே ஆட்சியை பிடிக்கும் அன்புமணியின்  முதல்வர் பதவி பிரகாசமாக தெரிகிறது என்று கேலிடாஸ் கோப்பில் படம் பார்த்துக் கொண்டிருக்கிற டாக்டர் ராமதாஸ் அவர்களின் கனவும் கலையும். உங்கள் கூட்டணியை முந்துவாரா பிந்துவாரா என்பதுதான் தெரியவில்லை.

                          உங்களுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி என்று தைரியமாக  சொல்லிவருகிறீர்கள் .அது உண்மைதானா? மனசாட்சி பதில் சொல்லுமா?
உங்கள் விஜயகாந்த் கூட்டணியில்  முதல்வர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டி ருக்கும் அவர் தொகுதிப் பங்கீட்டுக்கு பிறகு  செலவு செய்வாரா? அல்லது நீங்கள் அவருக்கு செலவு செய்வீர்களா? அதிமுகவின் வெற்றிக்கு  உதவுகிற வகையில் உங்கள் கூட்டணி அமையப்போவதாக சொல்வதையும் புறம் தள்ள முடியாது. அது சரி பணப்பிரச்னை,உங்களுடையது. பிரதான பெரிய கட்சியாக இருக்கிற தேமுதிக.தான் செலவு செய்யவேண்டும்.

                        பெரியவர் நல்லகண்ணு ஐயா அவர்கள் சொன்னது இன்னமும்  நினைவில் இருக்கிறது. முதல்வர் வேட்பாளராக  முன்னதாகவே அறிவிப்பது ஜனநாயகம் இல்லை என்று சொன்ன அந்த பெரியவர்  உங்களின் அறிவிப்பை எப்படி ஏற்றார் என்பது தெரியவில்லை. அரசியல் சாணக்கியர் ,மாக்கியவல்லி  விஜயகாந்த் நாளைய முதல்வர் என்பதை மக்கள் ஏற்பார்களா?

                 தமிழ்நாடு முழுவதும் காலே தேய்ந்து கட்டையாகிப் போனதாமே..
அதுதான் வைகோ கண்ட பலன்!

                                                                      அன்புள்ள,
                                                        உங்களின் மாஜி தம்பி
                                                           நன்மாறன்.

செவ்வாய், 15 மார்ச், 2016

காமக் கிழத்தி வைத்திருப்பது தவறில்லை!

வலைப்பூ  வாசிப்பாளர்களே,

                          தலைப்பூ  தடுமாறச்செய்கிறதா? அச்சம்  தேவையில்லை.கற்பனையை  பண்டைய  ரோமாபுரிக்கு திருப்புங்கள்.

அவை  கூடியிருக்கிறது. குற்றவாளியாக  அகாப்யா நிற்கிறான்.அவனது பெயருக்கு நல்ல மனது என பொருள்.

'இவன் செய்த குற்றம் என்ன?'

'கொலை பிரபோ!'

'கொலையா, யாரை கொன்றான்.?'

அகாப்யா இடை மறிக்கிறான்.' அதை நானே சொல்கிறேன் எஜமானே! அனுமதியுங்கள்."

'எனது  ஆசைநாயகியுடன் அவன்  காம சுகம் அனுபவித்தான். அவள்  மூலம்  குழந்தை பெறுவதற்கு முயற்சித்தான். அதனால்  அவனைக் கொன்றேன். இது நமது  நாட்டில்  குற்றமா?'

"இல்லை  அகாப்யா.. இல்லவே ..இல்லை. அப்படி பிறக்கிற குழந்தைகளுக்கு  இங்கு  குடியுரிமை இல்லை என்பது தெரிந்தும்  அவன் உனது காமக்கிழத்தியுடன்  சுகித்திருக்கிறான் என்றால் அவன் கொல்லப்பட வேண்டியவனே!.நீ கொலை செய்தது சரியே!"

என்ன தீர்ப்பு  தலை சுற்ற வைக்கிறதா?

பண்டைய ரோமாபுரியில் இப்படி ஒரு சட்டம் இருந்திருக்கிறது.

மனைவியைத் தவிர ஆணுக்கு ஆசைநாயகிகள் வைத்துக் கொள்ள அனுமதி உண்டு..இதற்கு  காரணமும் உண்டு, வறிய நிலையில்  உள்ள பெண்களுக்கு  மணமகன்கள்  கிடைப்பதில்லை. அதனால் அத்தகைய பெண்கள் வைப்பாட்டிகளாக வாழ நேர்ந்தது. இது ஒரு வித ஆணாதிக்கம் என்றாலும்  அதையும் பெருமையாக  கருதினார்கள்  அத்தகைய பெண்களின் சமாதியில் இவள் ஆசை நாயகி என குறிப்பிட்டார்கள்.

ஆணாதிக்கம் யுகம் யுகமாக  வாழ்ந்து கொண்டிருக்கிறது.இதிகாசத்திலும் இருக்கிறது.இலக்கியத்திலும் இருக்கிறது.சரித்திரத்திலும் இருக்கிறது.

முதல் படம்  சாலமன் மன்னனும் மனைவிகளும்.இவனுக்கு ஆயிரம் மனைவிகள்.

திங்கள், 14 மார்ச், 2016

வலைப்பூ வாசிப்போர்களுக்கு...

சகோதரர்களே....
                     நானும்  எழுதித்தான் தள்ளுகிறேன். உங்களிடமிருந்து  எவ்வித ரியாக்ஷனையும்  பார்க்க முடியவில்லை.இதனால் தவறாக  எழுதுகிறோமோ  என்கிற  அச்சமும்  ஏற்படுகிறது.

ஆனாலும் நான் எழுதுவதை நிறுத்தப்போவதில்லை.எனது கருத்துகளை  பதிவு செய்வேன்.அண்மையில்  பாம்புகளுக்கு என்று  ஒரு கோவில் இருப்பதாக கேள்விப்பட்டேன். இதனால்தான்  வெளிநாட்டான் நம்மை பாம்பாட்டியாக சித்தரிக்கிறானோ என்கிற ஐயமும் ஏற்பட்டது..

அந்த கோவில் கேரளத்தில் இருக்கிறது. எனக்கு அந்த நாட்டின் மீது காதல்  இருக்கிறது. பாரதிக்கு இருக்கவில்லையா? அவன் படகோட்டி எனக்கு வழிகாட்டியாக  இருந்திருக்கிறான்,அதனால் பாரதி மீது நேசமும்  இருக்கிறது.

கேரளத்தை கடவுளின் தேசம் என்பார்கள்.பரசுராமன் அவனது கோடலியை  கடலில் வீசி சிவன் அருளால் கேரளத்தை அமைத்ததாக் சொல்வார்கள். அவன் சத்திரியர்களை கொன்ற பாவத்தை  கழுவுவதற்காக  அவன் பெற்ற அந்த நிலத்தின் பகுதியை பிராமணர்களுக்கு  கொடுக்க வேண்டுமாம்.ஏன் வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாதா  என்று குதர்க்கமுடன் கேட்கக்கூடாது.அது பாவம்.

கடவுள் கொடுத்த நிலமானது  உப்புத்தன்மையாக  இருந்ததால்  மனித வாழ்வுக்கு  தகுதியற்றதாகி  விட்டது. பிராமணர்கள் வேறு இடம் நோக்கி  நகர்ந்தனர். பரசுராமனுக்கு கவலை.

தானமாக கொடுத்த நிலம் இப்படி தகுதியற்றதாகிவிட்டதே என பரசுராமன் கவலைப்பட்டான். மறுபடியும் சிவனை நோக்கி தவமிருந்தான்.நாமெல்லாம் தலையை அறுத்து தவம் செய்தாலும் வராத சிவன் பரசுராமனுக்கு  காட்சி அளித்தான்.
'இப்போது என்ன பிரச்னை பரசுராமா?'

'நிலமெல்லாம் உவர்ப்பு நிலமாக இருக்கிறது. எப்படி வாழ முடியும்,பிரபோ!'

'கடலோரம் அமையப்பெற்ற  இந்த நிலத்திற்கு  நாகராஜாவின் அருள் வேண்டும் ,சர்ப்பங்களின் நச்சு நிலத்தில் பரவினால் நல்லவையாக  மாறும். போ, நாகராஜனை வழிபாடு. நோக்கம் நிறைவேறும்." என்கிறார் சிவன்.

அப்படி நாகராஜனின் அருள் பெற்றதுதான் மன்னார் சாலா.நிலத்தின் வெப்பம் தணிக்க தண்ணீர்  தெளித்ததால்  இதற்கு மண் ஆறிய சாலை என்றும் பெயர். இப்படியும் ஒரு கதை இருக்கிறது.

கிட்டத்தட்ட முப்பதாயிரம் பாம்பு சிற்பங்கள் இந்த கோவிலில் இருக்கிறது. பிரார்த்தனை நிறைவேறியவர்கள் வைத்தவைதான் அவைகள்.

செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதற்கு தங்கத்திலான பானையில் தங்க நாணயங்களை நிரப்பி வழிபடவேண்டும்.

உடல் நலமுடன் வாழ  உப்பு

நச்சு அணுகாமல் இருக்கியா மஞ்சள்.

குழந்தை பேறு பெற பித்தளை அல்லது தாமிரத்திலான பாத்திரம்.

இந்த ஆலயத்தின் பூசாரியாக திருமணம் ஆகாத பெண்கள்தான்  வழிவழியாக  இருக்கிறார்கள்.

இந்த ஆலயம் ஹரிபாட் அருகில் இருக்கிறது.


சனி, 12 மார்ச், 2016

அன்புள்ள கேப்டன் அவர்களுக்கு,

தே.மு.தி.க.வுடைய  முடிவினை  ஒரு வலியாக சொல்லி ..சாரி , ஒரு வழியாக  முடித்து விட்டீர்கள். பழம் கனிந்து வருகிறது விழும் என்று எதிர்பார்த்த  மூளைக்காரரையே  ஏமாற்றிவிட்டீர்கள், இந்த முடிவு இன்றைய முதல்வர்  ஜெ.வுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என நம்பலாம். அவரது ஆட்சியை கடுமையாக விமர்சிப்பது போல விமர்சித்து விட்டு அவருக்கு  அணில் ராமனுக்கு  உதவியது போல உதவிய உங்க ராஜ தந்திரம் வேறு  யாருக்கு வரும்? சத்தியமாக நீங்கள்  உங்கள் குலசாமி கோவிலுக்குப் போய்  கிடா வெட்டி பொங்கல் வைக்கவேண்டும்.

இந்த முடிவு எடுப்பதற்கு உங்களுக்கு பெரிய  ஆதாயம்  கிடைத்திருக்கும். நான் பணத்தை சொல்லவில்லை. தனித்து  நிற்கும் முடிவினால் கூடுதல் தொகுதிகளில் பொட்டி ...சாரி ...வாய் வழுக்கி விட்டது. அதிக தொகுதி   கிடைக்குமே ! அதை சொன்னேன்.

கடந்த முறை கூட்டு சேர்ந்ததால் எதிர்க்கட்சி தலைவராகும் தகுதி கிடைத்தது.எட்டுப் பேர் கட்சி மாறினாலும் கடைசி வரை பதவியை அனுமதிக்க அந்தம்மாவின்  கருணை உதவியது. இம்முறை அமோக  வளர்ச்சி உங்க கட்சிக்கு, அதனால்  முதல்வர் அல்லது  துணை முதல்வர்  நீங்கள்தான். டில்லியிலும்  ஒரு எம்.பி .சீட்  உறுதி. உங்கள்  மைத்துனர்  சுதிஷ்தான் ராஜ்ய சபா மெம்பர்.எவனாவது  குடும்ப கட்சின்னு சொன்னால்  வாய் அழுகிடும். அப்படி சொன்னால்  ராமதாசை  கை காட்டிவிடுங்கள். ஒரு பய வாயை  திறக்க மாட்டான்.

எனக்கு ஒரு யோசனை.  வைகோவுடன்  கூட்டணி வைக்கலாமே!

நடந்தால் நல்லது.

இப்படிக்கு,
அபிமானமுள்ள
கொன்னவாயன்.
---------------------

வெள்ளி, 11 மார்ச், 2016

பூசனம் பூத்துப்போச்சு......

வலைப்பூ  வாசிக்கும்  வாசக நண்பர்களே..

                          அண்மையில்  மதுரைக்கு போயிருந்தேன்.பொறந்த ஊராச்சே
.போயி ரொம்ப நாளாச்சு அதான்  ஒரு விசிட் கொடுத்தேன்.ரொம்பவே  மாறிப்  போயிருக்குங்க.குடியிருந்த வீடு இப்ப கடையா மாறிப் போயிருக்கு.சுத்தமா டவுனுக்குள்ள யாரும் குடியிருக்கல்ல.ஊருக்கு  வெளியே வீடு கட்டி அங்க போயி இருக்காங்க பழகுன  மூஞ்சியை  பார்க்க முடியலியேன்னு கவலையோடு கீழப்பெருமாள் மேஸ்திரி  வீதி வழியா நடந்து போயிகிட்டிருந்தேன்.

திடீர்னு ' என்னப்பு . இங்கிட்டு என்ன சங்கதி?'ன்னு ஒரு குரல் .என் பழைய  சேக்காளி.வெங்கிட்டு.கல்லாவ்ள உக்காந்திருந்தான்.

'என்னடா வீட்டை வெங்கல சாமான் விக்கிற கடையா  மாத்திட்டியே ஏன் என்னாச்சு?'

'மாப்ள.ஊரோடு ஒத்துப்போயிருன்னு முன்னோர்கள் சொல்லிருக்காங்கன்னா  அர்த்தம் இல்லாம இல்ல. எல்லாப் பயலும் வித்துப்புட்டு மணலூரு செலைமான் உத்தங்குடி ஒத்தக்கடைன்னு  குடி போயிட்டாய்ங்க. இங்கிட்டு எல்லாம் கடையா போச்சு. இதில நாமட்டும் உக்காந்திருந்தா பொண்டு  புள்ளைகள் கடைத்தெருக்குள்ள நடமாடமுடியும் னு நெனக்கிறியா?,.அதான் அழகரு கோவில் பக்கமா  இடத்தை வாங்கி வீடு கட்டிட்டேன்."

'சரி, ஊட்டுல  கொழுந்தியா  சவுக்கியமா. இப்ப எத்தனை  புள்ளைங்க.?"

'ரெண்டும் ஆம்பளைப்பசங்கதான். ஒருத்தனுக்கு கல்யாணம் ஆயிருச்சி! சின்னப்பயலுக்கு  பொண்ணு பாக்கிறேன்.' என்றவன் கடைப்பையனை  கூப்பிட்டான்.'காப்பி கிளப்ல ரெண்டு காப்பி  வாங்கிட்டு வா..சீனிய  கொஞ்சமா போடச்சொல்லு" என்று காசும் கொடுத்தனுப்பினான். 'மாப்ள  மெட்ராஸ்ல என்ன பண்றே .எத்தனை புள்ளைங்க?'என்னை  விசாரிக்க  ஆரம்பிச்சான்.

'அதே  நிருபர் தாண்டா! பசங்க எல்லாம் செட்டில் ஆயாச்சு! ஏதோ போவுது.! வண்டி மக்கர் பண்ணாம போகுது. சரி..நம்மகூட  குண்டு விளையாடிட்டு  இருப்பானே  கொன்னவாயன் இப்ப என்ன பண்றான்?'

'அந்த பிசினாரிய கேக்கிரியா...ஒரு வலுசாரிய கட்டிக்கிட்டு  குடும்பம் நடத்துனான். அவ பக்கத்து வீட்டுக்காரி . என்ன மை போட்டாளோ அவ  காலடியிலேயே  கிடந்தான்.ஒரு நா லோட்டாவை எடுத்து நெத்திப்பொட்டுல  போட்டு அவனை  காலி பண்ணிட்டா. போலிஸ் கேஸ் ஆச்சு. எஸ்.ஐ.க்கு  என்ன மந்திரம் போட்டாளோ  அவனுக்கே வப்பாட்டியா  ஆயிட்டா.! இப்ப சென்ட்ரல் மார்க்கெட்ல  கர்மம் புடுச்சவதான் சண்டியர்..... வெவகாரம் பண்ணா வெளக்குத்தூண் போலிஸ்  லாக் அப்தான் ! ஒரு காலத்தில  ஒரு பய கூட  சீந்த மாட்டான். இப்ப அது  சண்டியர்த்தனம் பண்ணுது. அது கிடக்கட்டும். மத்தியானம் நம்ம ஊட்டுலதான் சாப்புடனும். வெஞ்சனம்  என்ன வைக்க சொல்ல.?"

'குட்டிப்பை  வைக்க சொல்லு. மெட்ராஸ்ல  ஆட்டுக்குட்டியின்  பை  கெடைக்கிறது  ரொம்பவும் கஷ்டம். சிலாட்டர்  ஆபீஸ்தான் போகணும்."

'மாப்ள. அது  இடுப்பு வலிக்கு நல்ல மருந்துப்பா! சரி...இப்ப எந்த கட்சிக்கு மெட்ராஸ்ல மெஜாரிட்டி?'

'சரியா சொல்ல முடியாது. ஜெயலலிதாவுக்கு  அவ்வளவா நல்ல பேரு இல்ல. வெள்ள நிவாரண உதவி சென்ட்ரல் கவர்மெண்டு கொடுத்தது.அதை சரியா கொடுக்கல. நானே நாலு நாளா  தண்ணிக்குள்ள கெடந்து கஷ்டப்பட்டேன்.எங்க ஏரியாவ்ள யாருக்கும் கிடைக்கல்.ரோடெல்லாம் நாஸ்தியா கெடக்கு.! மதுரை எப்படி?'

'இங்கேயும்  அம்மாவுக்கு  சரியில்ல. நம்ம விசயராசுக்கு அதான்பா  விசயகாந்து பேரும்  கெட்டுப்போயி  கெடக்கு. நரிமேடு.கரிமேடு,கீரத்துரை  அவனியாபுரம் இங்கெல்லாம் செங்கொடிக்கு நல்ல மரியாதை. ஆனா ஓட்டா மாறனுமே...கேடிகே தங்கமணி பி.ராமமூர்த்தி ,ஜானகியம்மா அளவுக்கு இப்ப யாருக்கும்  செல்வாக்கு இல்லப்பா.. '

'வைகோவுக்கு ?'

'விசயகாந்தை  அவர்  நம்பிட்டிருக்காரு! எனக்கென்னமோ  அதெல்லாம் பூசனம் புடுச்ச ஊறுகா  மாதிரி தெரியிது. சரி..சரி..!வா ஊட்டுக்கு  போலாம். சாப்பிட்டிட்டு  தூக்கம் போட்டுட்டு  அழகரையும் கும்பிட்டிட்டு  கோவில் வடை வாங்கிட்டு  ஊருக்கு கெளம்புறேன். முன்ன மாதிரி வடை  நல்லா இருக்குமா?'

'தெரியலடா  மாப்ள.!'
  

செவ்வாய், 8 மார்ச், 2016

பெருமைக்குரிய சாதனை....இங்கல்ல! கேரளத்தில்!!

மனிதன்  நினைத்தால்  சாதிப்பான். அவன்  அரசியல்,சாதியம், வர்ணம் இவைகளை  கடந்து  இருந்தால் மட்டுமே  அது சாத்தியம்.  ஆசியாவிலேயே  பெரிதான  சிறந்த  நூலகம்  சென்னையில்  அமைந்தது. வள்ளுவனின்  புகழ்  சிறக்க  கோட்டம் அமைக்கப்பட்டது. திமுக ஆட்சியில்  அதுவும்  கலைஞர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில்  அமைக்கப்பட்டது என்பதால்  அதிமுக  ஆட்சியில்  செல்வி .ஜெ.யினால்  சீர்  அழிக்கப்பட்டதே !

நல்லவேளை  கேரளத்தில்  இத்தகைய  அநாகரீகம்  இருக்கவில்லை. அரசியல்  அங்கு ஆரோக்கியமாக  இருப்பதால்.!

ஜடயமங்கலம் அருகே  ஜடாயு  நேச்சுரல்  பார்க்  என்று  கானகத்தின்  அருகில்  உருவாகி  இருக்கிறது. இங்குதான்  உலகிலேயே  மிகப் பெரிய  ஜடாயு  சிலை   இருக்கிறது. பதினையாயிரம்  சதுர அடியில்  எழுபத்தி ஐந்து  அடி உயரம், ௨௦௦ அடி  நீளம், நூற்றி ஐம்பது  அடி  அகலம்  என  ராட்சத  அளவில்  அமைந்துள்ள இந்த சிலையை  பட அதிபர்  ராஜீவ்  அன்சல் அமைத்திருக்கிறார். 

இந்த பூங்காவில்  ரோப்கார் ,சிக்ஸ் டி  தியேட்டர்,சித்தா, ஆயுர்வேத கேவ்  ரிசார்ட் ,மற்றும் இதர பொழுது போக்கு  அமசங்களும்  இடம் பெறுகின்றன.

ராவணன்  வெட்டி  வீழ்த்திய  ஜடாயு  வானில் இருந்து  இந்த பகுதியில்தான் வீழ்ந்ததாம். ஆனால்  ஆந்திராவில் விழுந்ததாகவும் ஒரு சேதி  உண்டு.    

ஞாயிறு, 6 மார்ச், 2016

காத்துக் கிடந்த புகைப்படக்காரர்கள்...

கசந்த  மருந்து சாப்பிட்டு  பத்து நாள்  காய்ச்சலில்  படுத்துக் கிடந்தவனிடம்   ஜெயமாலினி  படத்தை  காட்டியதும்  சட்டென  எழுந்து  உட்கார்ந்திட்டானாம். கவர்ச்சிக்கு  அந்த காலத்தில்  மட்டுமல்ல  எல்லாக் காலங்களிலும்  மரியாதை  அதிகம். ஆணான  அந்த விசுவாமித்திர  முனிவரே  அங்கதானே  அடங்கிப் போனாரு. ஏன் இந்திரனே  அடுத்தவன்  பெண்டாட்டி மேல  ஆசைப்பட்டுதானே  உடம்பெல்லாம்  பெண்குறி   சாபம்  வாங்கினான். 

 மரியாதைக்குரியவர்கள் எல்லாம்  இப்படித்தான்  எங்கேயாவது  பலவீனப்பட்டு  கிடக்கிறார்கள். அவர்களுடைய  இன்னொரு முகம்  அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்டவர்களின் அந்தரங்கம் புனிதமானதாக  இருக்கமுடியாது. சரி, நமக்கு எதுக்கு அந்த அசிங்கமெல்லாம். கிட்டப் போனாலே  கெட்ட நாத்தம்  அடிக்கும்.!

நான்  சொல்லவந்ததே  வேறு.  கவர்ச்சியை  பற்றி சொல்லவந்தேன்.

அண்மையில்  ஒரு திரைப்படத்தின்  பாடல்  குறுந்தகடு  வெளியிட்டு  விழாவுக்கு  சென்றிருந்தேன். அதுதான்  எனது வேலையும் கூட ! படத்தில் நடித்திருந்த ஒரு நடிகை  குட்டைப்பாவாடையிலும்  குட்டையாக ஒரு  கீழாடையை  அணிந்திருந்தார். செழுமையான  தொடைகளின்  தர்ம தரிசனத்தில்  மொத்தக் கூட்டமும்  தேன் குடித்த நரிகளாக  மாறி இருந்தது. மேடையில்  எப்போது  அமர்வார் ,படங்களை கிளிக்  தள்ளலாம்  என்கிற  கடமை உணர்வோடு  காத்திருக்கிறார்கள்  புகைப்படக்காரர்கள்.

அந்த நேரமும் வந்தது. நடிகை  மேடை ஏறினார். வீடியோ கேமராக்களும்  இன்ன பிற கேமராக்களும்  அவர் மீதே குறி வைத்து  படமெடுத்தன. கதாநாயகனுக்கு சற்று வருத்தம் இருந்திருக்கலாம். தன்னை அப்படி குறி வைக்கவில்லையே என்கிற கோபம் கூட வந்திருக்கலாம். நாயகிக்கு  தன்னை சுற்றி  கேமராக்களின்  பார்வை  பாய்வதில்  பெருமை.தனது அழகை  படம் பிடிப்பதாக  நினைத்திருப்பார் போலும்! கையை  ஆட்டியபடியே   ஆசனத்தில்  அமர்ந்தவர்  கால் மேல் கால்  போட்டபடி  அமர்ந்தார். 

தற்போது  கேமராக்களின் பார்வை  இறக்கக்கோணத்தில் ! அப்போதுதான்  நடிகைக்கு புரிகிறது  எதற்காக  கேமராக்களின்  பார்வை  தனது  மீது  பாய்கிறது என்பது.!

அவர் அமர்ந்த  போஸில்  அவரது உள்ளாடை  தெளிவாக  தெரிய  அது படமாகி  இணையதளங்களில்  வைரலாக பரவப்போகிறது  என்பது  புரிய  ,கஷ்டப்பட்டு  போனார்  நடிகை.

 

புதன், 2 மார்ச், 2016

யாரடா ஆண் சிங்கம்?

யாரடா  ஆண் சிங்கம்?
எதிரில்  வந்து  நில்!
வயதழிந்து போனவளின்
வாக்குமூலம்  கேள்!

               வகை,தொகையுடன்  பேசி  
               வாய்  கிழிந்தவன் எங்கே?

வேரில்  பழுத்த பலா,
விரும்புவார்  இல்லை.

               காரில்  போகிறவன் 
              கடைச்சரக்கு  என்கிறான்.

உடல்  வற்றிப்  போனதால் 
உணர்வும் இற்றுப்  போகுமா?

               என்னடா  இது?
               பெண்ணுக்கு  ஏனிந்த  சோதனை?

தங்கமும்,ரொக்கமும் தான் 
ஆண்மைக்கு  திறவு கோலா?

          சீச்சி...!பெட்டையன்!

கற்பு..---அது கனல் 
எரிதழல் என்பர்.
என்னை  எரித்துக் கொள்ளட்டும்.
சக்தி இருந்தால்.!!