வெள்ளி, 29 செப்டம்பர், 2017

தினகரன் குடும்பத்து இருபது ஆயிரம் கோடி சொத்து!

"அம்மாவுக்கு ( ஜெ.) தெரியாமல் ( !!! ) தமிழ்நாட்டையே  கொள்ளை அடித்து சேர்த்த சொத்து எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட  இருபதாயிரம்  கோடி! 1991-க்கு முன்பாக தினகரன் குடும்பத்து சொத்து எவ்வளவு?"என்று  புள்ளி விவரம் கொடுத்துப் பேசி இருக்கிறார்  அதிமுக அமைச்சர் ஜெயகுமார்.

இருபது ஆயிரம்  வரை கொள்ளை அடிக்க வசதி வாய்ப்பு செய்து  கொடுத்த புண்ணியவான் அல்லது புனிதவதி  யார் என்பதை சொல்லும் கடமை அமைச்சருக்கும் எடப்பாடி அண்ட் ஓபிஎஸ் கம்பெனிக்கும் இருக்கிறதா இல்லையா? இவ்வளவு பகிரங்கமாக தினகரன் குடும்பத்தின்  சொத்து விவரம் கொடுத்திருக்கிற போது வருமானவரி துறை என்ன செய்ய வேண்டும்? மொட்டைக்கடுதாசிகளையும்  நம்பி நடவடிக்கை எடுக்கிற  புலனாய்வு துறை என்ன செய்யப்போகிறது?  பொறுப்பு ,கடமை, சத்தியம் தவறாத அமைச்சரின் தகவலை கப்சா என்று சொல்லிவிடுமோ? தெரியவில்லை.நாம் எத்தகைய நியாயவாதி நேர்மையாளர்களிடம் மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதை அறிகிறபோது அடிவயிறு கலங்குகிறது.

"எப்படியும் இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் " என்று எடப்பாடி ஓபிஎஸ் அணியினர் நம்புகிறார்கள்.பாஜகவும் அவர்களுக்கு உதவியாக  இருக்கிறது. எனது நம்பிக்கையும் அதுதான்.இரட்டை இலை கிடைத்த பிறகுதான் இரண்டாவது இன்னிங்க்சை ஆரம்பிப்பார்கள். ஸ்லீப்பர் செல்கள் யார் யார் என்பதும் அப்போதுதான் தெரியவரும். 

"ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று சொன்னதெல்லாம் பொய் "என்று அமைச்சர் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததை மத்திய அரசு மாநில அரசு இரண்டுமே  கண்டு கொள்ளவில்லை. ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு   505 என்கிற தகவலே அதிர்ச்சி அளிக்கிறது. அந்த அளவுக்கு உயர்ந்திருந்தும்  உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் அது சதியாகவும் இருக்கலாம் அல்லவா? திட்டமிட்டுத்தான்  நடந்திருக்கிறது என்று சந்தேகம் வருகிறது.

உண்மை வெளிவரும் வரை நாம் இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கப் போகிறோம் .

திங்கள், 25 செப்டம்பர், 2017

ஈழம்தான் அற்று விட்டதா? ஐந்தாம் விடுதலைப் போர்?

ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் வைகோ எடுத்து வைத்த உண்மைகள்  குற்றமுள்ள சிங்களர்களின் தடித்த தோலில் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

"சிங்கள வெறியர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் மூத்த இனம், இந்து சமவெளி நாகரீகம் கண்ட இனம், தெய்வப்புலமைத் திருவள்ளுவனைப்  பெற்றெடுத்த இனம் நாதியற்றுப்  போக இயற்கை அனுமதிக்காது. ஈழம்தான் அற்றுப் போய்விட்டதா அல்லது காலம்தான் அற்றுப்போய்விட்டதா? நான்காம் விடுதலைப்போர் முடிவுற்றது என்றால் அதன் பொருள் ஐந்தாம் விடுதலைப்போர் அடுத்துத் தொடங்கும் என்பதே"  


என தமிழர்களின் நினைவுக்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார்  அருமைச்  சகோதரர்  பழ.கருப்பையா,  ஒரு நாளிதழில் எழுதிய அவரது எழுத்துகள்  இன்னமும்  உயிரோட்டமாகவே இருக்கிறது. அது நீர்த்துப் போவதில்லை.

இனமான உணர்வு இயற்கையிலேயே குருதியில் கலந்து விட்ட வைகோவின்  பேச்சுக்கு சிங்கள வெறியர்கள் காட்டிய வெறுப்பும் காட்டமும் அவர்கள்  இன்னமும் காட்டுமிராண்டித்தனமான கொள்கையிலிருந்து வெளியில் வரவில்லை என்பதையே காட்டுகிறது.

ஐ.நா.மனித உரிமைக்கவுன்சில் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு வெளியே புறப்பட்ட வைகோவை சிங்களர்கள் பலர் வழி மறுக்கிறார்கள்.

"சிங்கள பிரஜை அல்லாத நீ எப்படி எங்கள் பிரச்னையைப் பற்றி பேசலாம்?"--கேட்டவள் ஒரு சிங்களப்பெண்.

"நான்  தமிழ்நாடு. எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள்கொடி ரத்த உறவு இருக்கிறது. எனக்கு பேச உரிமை இருக்கிறது." என செவிட்டில் அறியாத குறையாக  வைகோவின் பதில் அமைகிறது.

"விடுதலைப்புலிகள் கொலைகாரர்கள் கொடியவர்கள்" என்கிறான் இன்னொரு சிங்களன். தமிழர்கள் எப்படியெல்லாம் வேட்டையாடப்பட்டார்கள் என்பதை  மறந்திருப்பார்கள் என நினைத்தானோ என்னவோ!

வைகோ இடிகளாக இறக்குகிறார்.

"லட்சக்கணக்கான தமிழர்களை நீங்கள் கொன்றீர்கள்.எங்கள் தாய்மார்கள்,சகோதரிகளை பாலியல் வன்முறை செய்து கொன்றீர்கள் .பச்சிளம் குழந்தைகளையும் படுகொலை செய்தீர்களே பாவிகளே"என்று உண்மையை பதிவு செய்திருக்கிறார்.

வைகோவை சுற்றி வளைத்து இப்படி வாயாடியவர்கள் போர்க்குற்றம் செய்தவர்கள் என்கிறார்கள். அப்படியானால் அவர்கள் வந்த நோக்கம்  வைகோவை தாக்குவதாகவும் இருக்கலாம்.

சிங்கள வெறியர்களே...எரிமலை உறக்கத்தில் இருக்கிறது. அதன் மீது  நெருப்பைக்கொட்டாதீர்கள். குமுறத் தொடங்கிவிடும்,

வாழ்க வைகோ.வளர்க தமிழினம். தமிழீழம் மலரும்.

 
  

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

ஜெ. எதனால், ஏன் செத்தார்?வருகிறது கமிஷன்?

திண்டுக்கல் சீனிவாசன் தேய்த்தது எந்த விளக்காக இருந்தாலும் சரி, படுத்துக்  கிடக்கும் உண்மை வெளிவந்தால் போதும்.

அடிமை,விசுவாசி என இரண்டு ரகங்களை ஜெ. தீனி போட்டு வளர்த்திருந்தார். ஜெ.உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவரைப் பாராட்டி, வாழ்த்தி வெளிவந்த  விளம்பரங்களில்  அந்த இரண்டு ரகத்தினரும் வார்த்தைகளில் போட்டியிட்டு  நன்றியை கொட்டினார்கள். இன்று அமைச்சராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் அடிமை, விசுவாசி  இந்த இரண்டையும்  விஞ்சியவராக வாழ்ந்தார். இவரைப்போல பலர் இருந்தனர். அதனால் சீனிக்கு  கட்சியில் முக்கியப் பொறுப்பு  அதைத்தொ டர்ந்து  ஆட்சியில் பொறுப்பு இரண்டும் கையில் சிக்கின.

மூல விக்ரகத்தின்  கருணை காரணமா,  அல்லது  விக்ரகத்துக்கு அபிசேக ஆராதனை செய்து  வந்த அர்ச்சகர் காரணமா என்பது சீனியின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். " சசிகலா குடும்பம் சொல்லச்சொன்னதைத்தான் சொன்னேன் .இட்லி சாப்பிட்டார், சுவீட் கொடுத்தார் என்றெல்லாம் சொல்லச்சொன்னார்கள் "  என்கிறார்.

அவர் ஜெ.யை பார்க்காமலேயே  கிளிப்பிள்ளையைப் போல சொன்னதற்கு  என்ன காரணம்? சசி குடும்பத்தினருக்கு அவர்  வேலைக்காரர் போல இருந்ததற்கு என்ன காரணம்? இவர் மட்டுமல்ல  பொய்யான புனைந்துரைகளை சொன்ன அனைவருமே பதில் சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறார்கள்.

விசாரணைக்கமிஷன் அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். அது  மாநில அரசு அமைப்பதாகவே இருக்கும் என்கிறார்கள். ஆனால் அது சுய  அதிகாரம் உள்ளதாக இருக்கவேண்டும் என்பதே எல்லோரது விருப்பம். தி.மு.க. செயல்தலைவர் தலைவர்  மு.க.ஸ்டாலின் கேட்கிற சி.பி.ஐ. விசாரணை அமைந்தால் மிகச்சிறப்பு.

ஜெயாவின் மரணத்தில் இருக்கிற மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என்பதற்கு சீனியின் வெளிப்படையான  'இட்லி' பேச்சு முக்கிய காரணியாக இருக்கிறது .

விசாரணைக்கமிஷன் வந்தால்தான்  அதிமுகவின்  அம்மா மீது  ஆதிக்கம் செலுத்தபட்டதா, எவர்க்கும் அஞ்சாத அம்மா சிலர்  மீது மட்டும் அக்கறை  கொண்டதற்கான காரணங்கள் வெளிப்படும். மரணத்தில் மறைக்கப்பட்ட  மர்மங்கள் ,மருத்துவமனையின் அணுகுமுறை எல்லாமே வெளியில் வந்தாக வேண்டும்.

மத்தியில் ஆட்சி செய்கிற பிஜேபி.யின்  அட்வைஸ்படி கமிஷன் அமையுமானால் அது  யாருக்கோ ஆதாயம் தருவதாக இருக்கக்கூடும். தினகரனின் பிடியின் இறுக்கம் குறைந்து  குளிர் சுரத்தினால்  நடுங்குகிற  நிலைக்கு வந்து விட்டது. ஆட்சியும் கட்சியும் இல்லாத காரணத்தால்  அவர்  சரணம் அடைந்தாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள்.

சனி, 23 செப்டம்பர், 2017

நொய்யல் ஆற்றில் வருவது சோப்பு நுரையாம் !

அடடா   அடடா.. நம்மை ஆள்கிற அதிமுக அமைச்சர்களில் செல்லூர் ராசு  ஒருவர்தான் அறிவியல் விஞ்ஞானி  என நினைத்திருந்தோம்..."மகா தப்புப்பா"  என்று  நடு மண்டையில்  நச்சென குட்டி விட்டார்  கருப்பன். இவரும் மாண்புமிகு அமைச்சர்தான்..

நொய்யல் ஆற்றில் நுரைத்து பொங்கி  ஓடுகிற வெள்ளம்சாயப்பட்டறை கழிவு கலந்தது. அது  குடிக்கவும் விவசாயம் செய்யவும் பயன்தராது  என  பகுதி மக்கள் புகார் மனு வாசித்திருக்கிறார்கள்.

அதற்கு மாண்புமிகு கருப்பன் கொடுத்திருக்கும் விளக்கம்தான்  "என்ன தவம்  செய்தோம் இவரை மந்திரியாக அடைந்ததற்கு" என புல்லரிக்க வைத்திருக்கிறது.

"நொய்யல்ஆற்றில்  கடந்த வரட்சிகாலத்தில்  தேங்கிக்கிடந்த சாக்கடைக் கழிவுகள் தற்போதைய மழை  வெள்ளத்தில் அடித்து வருகிறது..கோவை மக்கள் பயன்படுத்திய சோப்பு  நுரையும் கலந்து   பொங்குகிறது. சாயப்பட்டறை கழிவுகளால் இல்லை." என்பதாக சொல்லி இருக்கிறார் என்பதாக ஊடகங்கள் சொல்கின்றன.

ஊடகங்கள் பொய் சொல்லுமா?

படத்தைப்பார்த்துவிட்டு தீர்ப்பு சொல்லுங்கள் வலைப்பூ நண்பர்களே!


ஜெயலலிதாவை பார்க்க சசியை அனுமதிக்கவில்லை !!!!

"ஜெ. இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்" என்று  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்னதற்கு டி.டி.வி.தினகரன் பதில் சொல்லி  இருக்கிறார்.

"ஜெயலலிதாவை பார்ப்பதற்கு  சசியையே அனுமதிக்க வில்லை" என்று  அணுகுண்டு  வீசி இருக்கிறார் சசியின் நெருங்கிய உறவுக்காரர். 

இது  ஒரு வகையில் மிகவும் சாமர்த்தியமான பதில் என்பதாகவே  பார்க்க முடிகிறது.

"பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு  அப்பல்லோ மருத்துவமனைக்கு  இருக்கிறது. ஏன் அனுமதிக்கவில்லை என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும் .நாங்களும் உங்களைப்போலத்தான் "என்பதாக பழியை கடத்தி விடுகிறார் தினகரன் என்பதாகவே கருத முடிகிறது..

சசிகலாவின் கண்ட்ரோலில்தான் அன்று அப்பல்லோ மருத்துவமனை  இருந்தது .சி.சி.டி.வி.கேமராக்கள் அகற்றப்பட்டதற்கு சசிதான் காரணம் என  அன்றே குற்றச்சாட்டு எழுந்தன. பலர் பேசினார்கள். தற்போது கூட  "தங்களிடம் புகைப்பட ஆதாரங்கள் இருப்பதாக" சசியின் நெருங்கிய உறவுகள் சொன்னதாக பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். அப்போதெல்லாம்  தினகரன் ஏதும் சொல்லவில்லை..

தற்போது  தினகரன் சொல்லி இருக்கிற பதிலுக்கு விளக்கம் சொல்லவேண்டிய  கடமை  பன்னீர்செல்வத்துக்கு  இருக்கிறது. அவர்தான் அன்றைய அரசுப்   பொறுப்பில்  இருந்தவர்.

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

ஜெயலலிதா சாவு மர்மம் அம்பலமாகிறது?

"மானம் சிறிதென்றெண்ணி 
வாழ்வு பெரிதென்றென்னும்
ஈனர்க் குலகந்தனில் --கிளியே 
இருக்க நிலமையுண்டோ?"

பாடியவன் பாரதி..நடிப்புச்சுதேசிகளைப் பற்றி சினம் கொண்டு சீறி உமிழ்ந்த  வார்த்தைகள். அவன் பாடிச்சென்று பல காலம் பறந்து போய்விட்டது. விஞ்ஞானம் மேலோங்கி வளர்ந்து செல்லும் காலத்தில் வாழ்ந்தாலும்  முண்டாசுக்கவி பாரதி சொல்லிச்சென்றது இன்றைக்கும் பொருந்துவது  எப்படி? "அச்சமும் பேடிமையும் அடிமைச்சிறுமதியும் " வாழ்வாங்கும் வரம்  பெற்றவையா?

புரியவில்லை சோதரர்களே!

"பொய் சொன்னோம்.ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட  நேரத்தில் எங்களை சசிகலா சந்திக்கவிடவில்லை. இட்லி சாப்பிட்டதாக  பொய் சொன்னோம்.அதற்காக மன்னிப்புக்கேட்கிறோம்."  என்பதாக அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருக்கிறார்.

அப்படியானால் "சிரிக்கிறார்.நர்சுகளிடம் கேட்டார்.டி.வி.பார்த்தார்" என்று  அமைச்சர்களில் இருந்து  கட்சிப் பெரிசுகள் வரை சொன்னதெல்லாம் அத்தனையும் பொய்யா? அதற்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி மருத்துவர்களும்  நிர்வாகமும் துணை போனதற்கு என்ன காரணம்.?

மத்தியில் இருந்து வந்த பிரதமர் முதல் கட்சித்தலைவர்கள் வரை யாரையும்  பார்க்க விடாமல் தடுத்ததற்கு சசிகலாதான் காரணம் என்பதை  அதிமுக  அமைச்சர் சீனிவாசன் பேச்சிலிருந்து அறியமுடிகிறது.,டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை  சேர்ந்தவர்களும் உடந்தையாக இருந்தனர் என்றுதானே  என்னைப்போன்ற பாமரன் நினைப்பான்....நினைக்கிறான்.

பிரதமர் மோடிஜிக்கு தெரியாமல் நடந்திருக்க சத்தியமாக வாய்ப்பு இல்லை. அதிமுக அமைச்சர் சீனிவாசன்தான் இதற்கும் விளக்கம் சொல்லவேண்டும். துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதாவின் மர்ம மரணம் பற்றி அறிந்திருந்ததால், தெரிந்திருந்ததால்தான் விசாரணைக்கமிஷன் வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார்.அதில் அவர் அழுத்தமுடன் இல்லை என்பது தற்போது தெரிகிறது.

ஒரு முதல்வரின் மரணம் சந்தேகத்துக்குரியதாகலாமா? சதி நடக்காமல் மரணத்தை மறைக்க வாய்ப்பு இல்லை.

உண்மை வெளிவந்தாக வேண்டும்.

"நாடு காப்பதற்கே ---உனக்கு 
ஞானஞ் சிறிதுமுண்டோ?
வீடு காக்கப்போடா---அடிமைவேலை செய்யப்போடா!"
பாடியவன்  முண்டாசுக்கவி  வரகவி பாரதி.

திங்கள், 18 செப்டம்பர், 2017

குடித்து கும்மாளம், புறம் பேசுவது இது சினிமா பார்ட்டி!

மழை வெளுத்து வாங்கியது .வட பழனி ஏரியாவில் கொட்டினால் வேப்பேரி ஏரியாவில் தூறல் கூட இருக்காது.இது சென்னை வாசிகளின் அனுபவம். மொத்த பெருநகர ஏரியாவிலும் எப்போதாவதுதான் கொட்டித் தீர்க்கும்..

"சுக்குக்காப்பி போடு. குளிருக்கு சொகம்.ஒடம்புக்கும் நல்லது. கருப்பட்டியை  தட்டிப்போடு.சீனி வேணாம்."

கொஞ்ச நேரத்தில்  வந்தது.. சூடு குறையாமல் சப்பி சப்பி குடிப்பதிலும் ஒரு ரசனை. உறைப்பு ,இனிப்பு அனுபவிக்கலாம்.

அப்படியே இங்கிலீஷ் பேப்பரை ஒரு புரட்டு. காலையில் படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. வாக்கிங் போய்விட்டு திரும்பினால் பாத்ரூம். எப்படியும் மூன்று வாட்டி.போகணும். இந்தியன் டாய்லட்டில் .பேப்பர் படிக்க முடியாது.  அவஸ்தை..அப்படியே குளித்து விட்டு சாமி தரிசனம் முடிந்தால் எட்டே முக்கால் மணி. அவசரமுடன் இட்லியை விழுங்கி, மாத்திரைகளையும் துணைக்கு அனுப்பிவிட்டு ஆபீசுக்கு புறப்படணும். இந்த அன்றாட அவதியில்  பேப்பர் படிப்பது ஒரு கேடா?

சாயங்காலம்தான் செய்திகளை வாசிக்க முடிகிறது.

தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல் பொங்கி இருந்தார்.

"பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த போது எனக்கு இண்டஸ்ட்ரியில் ரொம்பவும் நல்ல பேர்.!அரகன்ட்,ஆட்டிடியூட் னு ஆளுக்காள் சொன்னாங்க. சொல்றவன் சொல்லிட்டுப்போகட்டும்னு என் வேலையில் கவனமா இருப்பேன்.

என்னை அப்படி கொடூரமா சொல்றதுக்கு காரணம் இருந்தது. அவங்க கூப்பிடும் சினிமா பார்ட்டிகளுக்கு நான் போக மாட்டேன். இனிப்பா பேசி அவங்களிடம் நல்ல பேர் வாங்கனும்கிற அவசியம் இல்ல. அங்க போனா  குடிக்கணும்.அடுத்தவங்களை பத்தி கிசுகிசு பேசுவாங்க. அதை கேக்கணும். எதுக்கு நமக்கு அந்த வேலை?

இதனால என்னை பத்தி தப்பா பேசுனாங்க.அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா? கூப்பிட்டா வரமாட்டேன்கிறான்னு சொல்றானேன்னு சொன்னங்க. அட போங்கய்யான்னு கவலைப்படல. பாலிவுட்ல சினிமா பார்ட்டின்னா இதான்  நடக்கிது" என்று  சொல்லிருந்தார்.

கோலிவுட்டிலும் அதான் நடக்கிது. சன்னி தியோல் மாதிரி தில்லா சொல்றதுக்குத்தான் யாருமில்ல.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

பெரியார் பிறந்த நாளிது.பெருமை கொள்ளும் காலமிது..

நான் மனிதன்.யாருக்கும் அடிமை அல்லன்.என்னை அடக்கி ஆள்கிற உரிமை எவனுக்கும் இல்லை என்பதை எனக்குச்சொல்லிக் கொடுத்த பெருந்தகை தந்தை பெரியார்.

யாருக்கெல்லாம் அடிமைப்பட்டுக்கிடந்தோம் என்கிற சீரழிவுப் படலத்தை ஊருக்கு சொல்லி திருத்தப்பார்த்த பகுத்தறிவுப்பகலவன் .இரவுகளில் நமக்கு சுயமரியாதைப் பாடம் நடத்திய அந்த பெருங்கிழவன் பிறந்த நாள்தான் செப்டம்பர் பதினேழு.

மறக்கலாமா? 

"ஒரு ஜோடி செருப்பு பதினாலு வருஷம் இந்த நாட்டை ஆண்டதாக ஒரு கதை. இதை விசுவாசத்தோடு படிக்கிறவனுக்கு மனிதனே இல்லாமல் நாய்,கழுதை ஆண்டால் கூட அவமானம் இல்லை என்றோ குறை என்றோ சொல்ல வரவில்லை.ஆனால் மனிதனானாலும் கழுதையானாலும் எந்த கொள்கையோடு, எந்த முறையோடு ஆட்சி செய்கிறது? அதனால் மக்களுக்கு என்ன நன்மை? இதுதான் என் கவலை" என்று நாட்டைப்பற்றி  கவலைப்பட்டவர் தந்தை பெரியார்.

"எந்த ஆட்சியாக இருந்தாலும் நம் நாட்டார்களே ஆள வேண்டும். அந்த ஆட்சியும் மான உணர்வு உள்ளதாக, ஏழைகளை வஞ்சிக்காத முறையில் இருக்க வேண்டும்" என்று சொன்னதில் என்ன பிழை காண முடியும்?

94 வருஷம் 3 மாதம், 7 நாட்கள் அந்த  அறிவுச்சுடர் வாழ்ந்திருக்கிறது. ஏறத்தாழ பத்தாயிரத்து ஏழு நூறு நிகழ்ச்சிகள். மொத்தம் எட்டு லட்சத்து இருபது ஆயிரம் மைல்கள் பயணம். கிட்டத்தட்ட முப்பத்தி மூன்று முறை உலகைச்சுற்றி வருவதற்கு சமம் என்கிறார்கள்.மூன்று முறை நிலவுக்கு சென்று வருவதற்கு ஒப்பான தொலைவு என்கிறார்கள்.

அவரது நெடும்பயணம் பயணம் நமக்காக!

அடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்பதற்காக.

சுயமரியாதை வேண்டும்  என்பதற்காக.

அய்யா ..உங்கள் நினைவு  தமிழர்களின் மனதில் நீக்கமற நிலைத்திருக்கும்.

மறந்துவிட்டான் என்கிற நிலை ஏற்படுமேயானால்  அவன் அடிமையாகிறான் என்று பொருள்.

சனி, 16 செப்டம்பர், 2017

ஜெ. கொலை செய்யப்பட்டாரா?

"ஜெயலலிதாவுக்கு  உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. எங்களை பார்க்கவும் அனுமதிக்கவில்லை.மரணத்தில் சந்தேகம்" என்று தற்போதுதான்  அதிமுக அமைச்சர்கள் வாக்குமூலம் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

செங்கல்பட்டில்  சசிகலா இருக்கிறார் என்றால் தாம்பரத்தில்  பம்மி பதுங்கு குழியில் படுத்துக் கிடந்தவர்கள்தான் இன்றைய முதல்வரும் ஏனைய அமைச்சர்களும்.!  அவர்கள்தான் குற்றம் சாட்டுகிறார்கள்.

 "சின்னம்மா சின்னம்மா" என்று குனிந்து குழைந்து கும்பிடு போட்ட இவர்கள்   சொந்த அம்மாவிடம் கூட  அத்தகைய மரியாதை காட்டி இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

 ஜெயலலிதாவின்  கவனத்துக்கு எதையுமே கொண்டு செல்லாமல் தடுப்புச்சுவராக இருந்தவர் சசிகலா என்பதை நாடறியும்.இவர்களுக்கும் தெரியும். அன்று இதை அவர்களால்  பகிரங்கமாக சொல்ல முடியவில்லை.

 எவரையுமே ஜெயலலிதாவின் அருகில் செல்ல முடியாத அளவுக்கு  தீர்மானிக்கிற சக்தியாக இருந்தார்  சசிகலா.

அதற்கு காரணம்ஜெ .யின் தவறுகளே! .அதுவே   சசிக்கு சாதகமாக இருந்தது என்று  கூட சொன்னார்கள்.

சசியின் மீது  நடவடிக்கை எடுத்து வெளியில் விரட்டிய ஜெயலலிதாவினால்  அந்த கோபத்தை ஏன்   தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை?. திரும்பவும் கார்டனுக்குள் ஏன்அ னுமதித்தார். அதுதானே  சசிக்கு மிகவும் சாதகமாகி இருக்கிறது.

 ஜெயலலிதாவுக்கு  தெரியாமலேயே கட்சிக்குள் இஷ்டப்படி விளையாட முடிந்திருக்கிறது. அதனால்  பாதிக்கப்பட்டவர்கள் வெளியில்  சொல்ல இயலாது போயிருக்கலாம்..

 இதனால்தான் ஜெ.க்கு தோட்டத்தில் எத்தகைய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்பது இன்று வரை தெரியவில்லை.

மர்மம் இருக்கிறது அம்மாவின் மரணத்தில் என்று  முதலில்கு ண்டு வீசிய ஓ.பி.எஸ்.தான் 'உண்மையைச்சொல்வதற்கு ' கடமைப்பட்டவர். ஆனால்  துணை முதல்வர் பதவியுடன் அவர்  அமைதியாகிவிட்டாரோ என்னவோ?

இப்படியும் நினைக்கவேண்டும் !

இதே நேரத்தில் ....

"ஆட்சி கலைக்கப்படும்" என்று தினகரன்  திகில் கிளப்பிய பின்னர்தான்   'அம்மா கொலை' செய்யப்பட்டிருக்கலாம் என்கிற அஸ்திரத்தை அமைச்சர்கள்  கையில் எடுத்திருக்கிறார்கள். பகிரங்கமாக  மேடைகளிலும் பேசுகிறார்கள்
.என்பதையும் மறந்துவிடக்கூடாது.

இதை நீதித்துறை  புகாராக எடுத்துக்கொள்ள முடியாதா?

கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறவர் யாரோ ஒருவர் அல்லர். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர்.

 குற்றம் சொல்கிறவர்களும்  அரசியல் சாசனப்படி  உறுதி மொழி எடுத்துக்கொண்ட அமைச்சர்கள்.

அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். எனவே  சக அமைச்சர்களே குற்றம் சாட்டுவதால் நடவடிக்கை எடுக்கவேண்டிய  கடமை முதல்வர் எடப்பாடியாருக்கும்  இருக்கிறது.

என்ன நடக்கப்போகிறதோ?

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

தளவாயின் கடிதத்தை கிழித்து எறிந்த எடப்பாடியார்.!

தமிழக அரசியலில் எப்போது என்ன  நடக்கும் என்பது தெரியவில்லை,ஒரே  குழப்பம்தான்! தீர்மானிக்கும் சக்தி கட்சிக்குள்ளேயே இருந்தபோது அதிமுகவினர் பயந்து கிடந்தார்கள். 'தலைமை' டெல்லிக்கு 'ட்ரான்ஸ்பர்' ஆகியதும் நிலைமை படு கேவலமாகிவிட்டது.

பொந்துக்குள் பதுங்கி இருந்த எலிகளுக்கெல்லாம் மீசை துடிக்கிது.

பெருச்சாளியா .எலியா என்கிற பலப் பரீட்சை!

"என்னிடமா மோதுகிறாய். ஸ்லிப்பர் செல்களை அனுப்பியிருக்கிறேன்" என்று  திகில் கிளப்பிய தினகரனுக்கு தன் பக்கத்திலும் ஸ்லீப்பர் செல் இருப்பது  தளவாய் சுந்தரம் வெடித்துக்கிளம்பிய பிறகுதான் உறைத்திருக்கிறது.. ''அடடா  வடை போச்சே!"

இன்னும் எத்தனை வடைகளோ!

"நான் கொடுத்த பதவிதானே, சிறப்புப் பிரதிநிதி பதவி? காலி பண்ணு " என்று  தினகரன் ஆர்டர் போட  தளவாய்க்கு  உச்சியில் ஆணி அடித்த வேதனை.

"இந்தாங்க எனது ராஜினாமா" என்று முறைப்படி முதல்வர் எடப்பாடியாரிடம்  ராஜினாமா கடிதத்தை கடாசி இருக்கிறார்.

தினகரனுக்கு ராஜகுருவாக இருந்தவர் தன்னிடம் கடுதாசியை கடாசுகிறார்  என்றால் யூகிக்க முடியாத பரமார்த்த குரு அல்லர் எடப்பாடியார்.

"என்ன இப்படி பண்றீங்க ?"என்று அவர் கண்ணெதிரிலேயே கடிதம் சுக்கு நூறாக கிழிபட்டது என்றால் விசுவாசம் எடை போடப்படாமல் இருந்திருக்குமா?  ஐந்து மணி நேரம் எடப்பாடியாருடன்  தளவாய்  ஆலோசனை கலந்திருக்கிறார்.

அடடா ..ஒரு வெள்ளாடுதானே என்று சும்மா இருந்து விட்டால் எல்லா ஆடுகளும் இடம் மாறி விடும்.அப்புறம் கிடை போட முடியாது என்கிற பயம்  இடையனுக்கு வருமா வராதா? ஐந்து மணி நேர ஆலோசனையில் எந்தெந்த  ரகசியங்கள் எடப்பாடிக்கு போனதோ? கவலைப்படாமல் இருக்க முடியுமா?

"இன்னும் ஒரே வாரத்தில் எடப்பாடி அண்ட் ஓபிஎஸ் கம்பெனி கலைக்கப்படும். என்கிற பைனல் வார்னிங் (  ? ) விடவேண்டிய அவசியம் தினகரனுக்கு  வந்து விட்டது.. .விட்டவர் தினகரன் என்பதால் அலட்சியமாக இருந்து விட முடியாது என்பதால் எடப்பாடி அணியினர்  டில்லி தலைமைக்கழகத்தில் ஆலோசனை கலந்து இருக்கிறார்கள்.

தினகரனை பலவீனப்படுத்த தளவாய் கொடுத்திருக்கிற ஆலோசனைகள் பலன் அளிக்குமா என்கிற சந்தேகம் அவர்களுக்கு வந்திருக்கலாம். உளறுவாயனுக்கு ஊமையனே மேல் என்று சும்மா இருப்பதற்கும் பயம். சபாநாயகர்  எச்சரித்தும் எதுவும் நடக்கவில்லையே என்கிற கலக்கமும்  எடப்பாடியாருக்கு இருக்கிறது.

எப்படியும் வரப்போவது  குடியரசுத் தலைவர் ஆட்சிதான் என சில கட்சித் தலைகள் நம்புகின்றன.

புதன், 13 செப்டம்பர், 2017

இதுதானா காதல் பேச்சு?


காதலைப் பற்றி பாடாதவர்கள் யாருமில்லை. 

தமிழனுக்கு வேதம் தந்த வள்ளுவரும் பாடி இருக்கிறார்.  

வடக்கின் வால்மீகியை புரட்டிப் போட்ட கம்பனும் பாடி இருக்கிறார்.

இவருக்கு இணையாக எவருமில்லை என்று சொல்லப்படும் பாரதியும் பாடியிருக்கிறார். அவரது தாசனும் பாடியிருக்கிறார்.


வழித்தோன்றலான வைரமுத்துவும் பாடியிருக்கிறார்.


ஆனால் ''காதல் பேச்சு'' என்பது என்ன?


எப்போது பேசுவது ,எப்படிப் பேசுவது 'காதல் பேச்சு '?

'கண்ணே மணியே ,கற்கண்டே ,கனியமுதே' என்று பேசுவதுதான் காதல் பேச்சா?

கடற்கரை, கோவில் ,சினிமா கொட்டைகள் என்று ஓரம் கட்டிப்
பேசுகிறோமே அதுவா 'காதல் பேச்சு '?


''இல்லை '' என்று அழுத்தம் கொடுத்து சொல்கிறான் பாரதி!


படித்தவரோ ,படிக்காதவரோ , பட்டிக்காடோ ,பட்டணமோ ,
பேசத் தெரிந்தவரோ ,தெரியாதவரோ ,எவராக இருந்தாலும் தன்னை மறந்து
''காதல் பேச்சில்' கலந்து விடவேண்டும்.


அதுதான் ''காதல் பேச்சு'' என்கிறான் எக்ஸ்பெர்ட் பாரதி!


அது எப்போது எங்கே என்பதில் தான் வில்லங்கமே !
'
'பாதி நடுக்கலவியிலே காதல் பேசி'' என்கிறானய்யா! 


என்ன கொடுமைங்க இது? முடியுமா?


முடியும் அதுதான் காதல் பேச்சு !


மஞ்சத்தில் கணவன்-மனைவி இருவரும் தங்களை மறந்து
துன்பம் மறந்து ,அக்கம் பக்கம் மறந்து ,யாரைக் காயப் படுத்துகிறோம் ,என்ன 
செய்கிறோம் என்பது அறியாமல் ,எப்படி சொல்வது , எதை சொல்வது என்பது 
புரியாமல் ,இன்பத்தின் எல்லையில் ,சுகத்தின் உச்சம் தொட்டு , தங்களை மறந்த 
நிலையில்'புதுப்புது வார்த்தைகளை' சொல்வதுதான் ''காதல் பேச்சு'' என்கிறான்
பாரதி!
'
'பாதி நடுக்கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போல 
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத் தலைவர் போர்த் தொழிலை கருதுவரோ''


இதுதான் பாரதியின் கருத்து!


வள்ளுவன் ,கம்பனை விட பாரதி அனுபவித்து சொல்லி இருக்கிறான்.

இது சரியானதுதானா ,இல்லையா?


முரண்படுகிறீர்களா?

( இது மறு பதிப்பு.)

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

சசிகலா--தினகரனை சூழ்ந்திருக்கும் பயங்கரம்..

எதிர்பார்த்தது இன்று நடந்து விட்டது.

சசிகலாவும் தினகரனும் சுனாமி பேரிடர் அலையில் சிக்கி தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் மீட்பர் யாரென தெரியாத  காரிருளுக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர்.என்ற மாமனிதரால் வளர்க்கப்பட்ட பேரியக்கம் இன்று  தொலை நோக்குப்பார்வையை இழந்து  பிஜேபி என்கிற மதவாத கட்சியின் வழிநடத்துதலுக்கு இரையாகி இருப்பது பரிதாபம்.

எடப்பாடியாரும் ஓபிஎஸ்.சும் இணைந்து சொன்னதை சாதித்துக்காட்டிவிட்டனர்.

தந்தை பெரியாருக்காக தலைமைப் பதவியை நிரப்பாமல் திமுக.பிரிந்து வந்து எப்படி  பொதுச்செயலாளர் பதவியை செயல்படுத்தியதோ  அதே பாணியில் இன்று வானகரம் அதிமுக ( இணைந்த) பொதுக்குழுவில் தீர்மானித்திருக்கிறது.

"ஜெ.தான் நிரந்தரப் பொதுச்செயலாளர்.அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.ஆகவே அவரின்றி வேறு யாரும் அந்த பதவிக்கு வர இயலாது. அதனால் வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுகிறது." என்று சொல்லி  சசியை  தூக்கி வீசி விட்டனர்.

"கட்சியில்  உறுப்பினரே இல்லை.நீ யார் ?"எனக் கேட்டு டி.டி.வி.தினகரனுக்கும்  அத்தி மரத்து ஆப்பு அடித்து விட்டார்கள்.

"எங்களிடம் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் " என்று இருபத்திஒன்று  எம்.எல்.ஏ.க்களுடன் உல்லாசப்பயணம் நடத்திய தினகரன் என்ன செய்யப்போகிறார்? அவரது கட்டுக்குள் கிடப்பவர்கள் தளை அறுத்து  வெளி வருவார்களா அல்லது அவரது கட்டளைப்படி ஆட்சியை  கவிழ்ப்பார்களா? ஆட்சி கவிழ்க்கப்படுவதை பிஜேபி விரும்புமா? சட்டமும் ஒழுங்கும் கேலிக்கிடமாகி இருக்கும் தமிழகம் இன்னும் என்னென்ன அவலங்களை சந்திக்கப்போகிறதோ  தெரியவில்லை.

கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்களை  அடைத்து வைக்கப்பட்ட காலத்தில் மவுனராகம் வாசித்த காவல்துறை  தற்போது கன்னட மாநிலம் சென்று அடைத்து வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை  நடத்துவது எவரது வழிகாட்டலால்?

"நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்" என்று முருகன் என்கிற எம்.எல்.ஏ. கூறி இருக்கிறார்.  

சசிகலா தினகரன் நீக்கத்துக்கு பல இடங்களில் வெடி வெடித்து வரவேற்பு  தெரிவித்திருக்கிறார்கள்.சில இடங்களில் எடப்பாடியின் உருவ பொம்மையை எரித்திருக்கிறார்கள்.

தினகரன், சசி இருவரது அரசியல் எதிர்காலம் இருள் சூழ்ந்து  இருக்கிறது. மன்னார்குடியின் ஆதிக்கம் உடைக்கப்பட்டுவிட்டது என்றே அரசியல்  ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

"நடப்பது சசிகலா அமைத்து தந்த ஆட்சிதான். ( ஜெ.அமைக்கவில்லை.) ஆகவே  ஆட்சியை விட்டு வெளியேறுங்கள் "என்கிறார் தினகரன். இதை  எந்த அளவுக்கு மக்கள் ஏற்பார்கள் என்பது தெரியவில்லை.பிஜேபி.யின் துணையுடன் நடந்து கொண்டிருக்கிற எடப்பாடி அரசை  தினகரன் உறுதியுடன் எதிர்கொள்வாரா என்பது கேள்விக்குறிதான்? அவர் எதிர்கொள்ளவிருக்கிற வழக்குகளின் முடிவுகள் எப்படி இருக்கும் ,விடுவிக்குமா, உள்ளே தள்ளுமா என்பதையும் அவர் சிந்திக்க  வேண்டியிருக்கிறது.

ஆனால் மக்களுக்கு இன்னமும் தெரியாமல்  இருப்பது ஜெ.யின் மர்ம மரணம் தான்! 

எனக்கென்னமோ அதற்கான விடை யை  எப்பவோ புதை குழியில் தள்ளிவிட்டதாகவே தோன்றுகிறது. 


  

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

சினிமா நடிகர்களின் விசித்திரமான பழக்கம்.

"அண்ணே...என் புள்ள எப்பவுமே விரல் சூப்பிட்டே  இருக்கான். என்ன பண்றதுன்னு  தெரியல.? வேப்பெண்ண தடவியாச்சு..சாணியையும்  வெச்சுப் பார்த்திட்டேன்.எதுவும் பலிக்கல.என்னண்ணே பண்றது?"

                     என் தங்கச்சி ரொம்பவும் வருத்தப்பட்டா. என்ன பண்ண முடியும்.எதுக்குமே மசியலேங்கிறபோது  அவனா எப்ப அசிங்கம்னு  நினைக்கிறானோ அப்ப விட்டுறட்டும்னு விட்றவேண்டியதுதான். தங்கச்சிக்கு ஆறுதலா சில உதாரணங்களை சொன்னேன்.

                  "நடிகர் ஷாருக்கான் இருக்காரே...அவருக்கு ஒரு பழக்கம். காலில்  போடுற ஷூவை கழட்டுறதே இல்ல. ஒருவாட்டி கழட்டுனாவே ஆச்சரியம். தூங்கிறபோது காலில் ஷூ கிடக்கும். ஒய்ப் கழட்டும்.இல்லேன்னா செர்வன்ட் கழட்டி விடும்."
                 
                       "நெசமாவா?"

                      "படிச்சத சொன்னேன். ஆமிர்கானுக்கு ஷவர் பாத்ல குளிக்கப்
 பிடிக்காது. ஷாகித் கபூருக்கு ஒரு நாளைக்கு பத்து கப் காப்பியாவது குடிக்கணும்.இல்லேன்னா ஆளு டல். சாப்பிட்டு முடிச்சதும் குனால்கபூர் தட்டில கொஞ்சமாவது மிச்சம் வைப்பார். ஜான் ஆப்ரஹாம்  உட்கார்ந்திட்டா எப்பப்பார்த்தாலும் கால்களை ஆட்டிக்கிட்டே இருப்பார்.இது அவரது பழக்கம் .கிரிக்கெட் வீரர் சேவாக்,கரீனா கபூர் ,இவங்க ரெண்டு பேருக்கும் நகம் கடிக்கிற பழக்கம் இருக்கு.மாத்திக்க முடியல. சன்னி லியோன்னு ஒரு பேமஸ் நடிகை .அவ பத்து பதினஞ்சு தடவையாவது பாதத்தை கழுவனும்..இத விட கொடுமை  என்னன்னா ஆஸ்கார் பரிசு வாங்கியவ சான்ட்ரா.முக சுருக்கத்த  போக்க என்ன கிரீம் யூஸ் பண்ணுவா தெரியுமா? பைல்ஸ் கம்ப்ளெயிண்டுக்கு  யூஸ் பண்ற கிரீமை தடவுறான்னு எழுதி இருக்காங்க.. "

                             "என்னை  கன்வின்ஸ் பண்றதுக்காக இப்படி கதை விடுறீங்களா ?"

                             "கதை விட்டு என்ன ஆகப்போகுது ?யுனிவர்சல் அழகின்னு  சுஷ்மிதா சென்கிற நடிகையை செலக்ட் பண்ணினது உனக்கு ஞாபகம் இருக்கா?"

                              " இருக்கு.கல்யாணமே பண்ணிக்கல?"

                             "அந்த அழகிக்கு ஒப்பன் டெரஸ்ல குளிக்கிறதுன்னா ரொம்பவும்  பிடிக்கும்.கரீனாவின் புருசன் சயிப் அலிகானுக்கு புத்தகம் படிக்கிறது,போன் பண்றது எல்லாமே பாத்ரூமில்தான்.அங்க தனியா ஒரு குட்டி லைப்ரரி இருக்கு. போன் எக்ஸ்டென்சன் இருக்கு. இவ்வளவு ஏன் பிரபல அமெரிக்கப்பாடகி க்கு மிகப்பெரிய கெட்ட பழக்கம் இருக்கு. உன் மகனாவது  தேவலை.இவளுக்கு பல் தேய்க்க பிடிக்காது. மவுத் பிரஷ்னர்தான் யூஸ் பண்ணுவா!"

                     "அண்ணே ..என் பையனை நான் எப்படியும் கஷ்டப்பட்டு  திருத்திடுவேன் .இனி உங்கிட்ட யோசனை மட்டும் கேட்கப்போறதில்ல. ஆளை விடு!"

                 "அட என்னம்மா நீ...நெட்ல படிச்சததான் உங்கிட்ட சொன்னேன். சத்தியமா கத விடல."



சனி, 9 செப்டம்பர், 2017

12 .கணவன்...ஆனாலும் அவள் பத்தினிதான்!

சனிக்கிழமை .சாயந்திரம். மாலை மலரில் வந்த செய்தியை  மறுபடி மறுபடி  வாசிச்சேன்.

 நான் தமிழ்நாட்டில்  பிறந்த தவப்பயன் எங்க அய்யா அம்மாவுக்கு கஷ்டமில்லாமல் போச்சு. ஆனால் நான் பிறந்து அவங்களுக்குக் கொடுத்த கஷ்டம் இருக்கே!

 "ஆடி மாசத்தில பிறந்து ஆட்டிப்படச்சிட்டீயடா மவனே"என்பது என்னோட அய்யா அடிக்கடி பாடுற பாட்டு.  

நான் தாய்லாந்தில்  பிறந்திருந்தால் என்னுடைய  அய்யா-அம்மா வரதட்சணை கொடுத்துத்தான்  வீட்டுக்கு விளக்கேத்த  ஒருத்தியை கூட்டிட்டு வந்திருக்கணும். தாய்லாந்தில்  பிள்ளை வீட்டுக்காரன்தான் பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்கணும்.

அது சரி மாலைமலரில் வந்த செய்திக்கும் என்னோட புலம்பலுக்கும்  என்ன தொடர்பு?

ஜிர்யா பர்ன் புயாயப். மறுபடி ஒருதடவை  வாய்விட்டு சொல்லிப்பார்த்துங்க. இது  பெண்ணோட பெயர். வயசு முப்பத்தி இரண்டு. அழகா இருப்பா. பொதுவா தாய்லாந்து பெண்கள் அழகாகவும் மென்மையாகவும் இருப்பாங்க. முரட்டுத்தனமான தோல் இல்லை. பஞ்சை தொடுற மாதிரி இருக்கும். காதலுடன் இருப்பாங்க. ஆனால் பெரும்பாலான  ஆளுங்க சொல்ற மாதிரி 'அந்த மாதிரியான ' தொழில் செய்றவங்க இல்ல. கெட்டவங்களும் இல்லேன்னு சொல்ல முடியாது. ஏன் நம்ம நாட்டில அந்த மாதிரியான பெண்கள் இல்லவே  இல்லேன்னு எவனாவது சத்தியம் பண்ணுவானா? துண்டு போடுறேன்.தாண்டச்சொல்லு.!

சரி விஷயத்துக்கு வருவேனாக.!

ஜிர்யா  பர்ன் புயாயப்  என்கிற அந்த பெண்  12 தடவை கல்யாணம் பண்ணி  வரதட்சணை  வாங்கி மோசடி பண்ணிருக்கா..பேஸ்புக் வழியாகத்தான்  இந்த வேலையை  அவ பார்த்திருக்கா.

பெண்ணைப் பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு அவளை படிக்க வச்சு வளர்த்து ஆளாக்கி இருப்பாங்க. அதுக்காக  அந்த பெண்ணை பெத்தவங்களுக்கு மாப்பிள்ளையாக வருகிறவன்  கொடுக்கிறதுதான் வரதட்சணை. இந்த சிஸ்டத்தை பயன்படுத்தி லாரி, கார்,வாங்கி  பணம்  சேர்த்திருக்கா.பனிரெண்டு புருசன்களுடன் வாழ்ந்து  கன்னித்தன்மையை  இழந்து போனாலும்  ஒரு வகையில் பத்தினிதானே. அத்தனை பேருடனும்  சேர்ந்து குடும்பம் நடத்தி குத்து விளக்கு ஏத்தலியே!

இந்த பெண்ணுக்கும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து சேர்க்கிற  அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

கட்டிலுக்கு அடியில் ஸ்லீப்பர் செல் ..

அடியே .என் செல்லப் பெண்டாட்டி...!
------------------------------------

"எதுக்கு பதட்டப்படுறிங்க. ரிஜிஸ்டர் மேரேஜ்தான்  முடிஞ்சிருச்சே. நாம்ப  இப்ப ரெண்டு  பேரும் புருசன் பொண்டாட்டி.எங்க அப்பாவால  நம்மள ஒன்னும் பண்ண   முடியாது!"

"உங்கப்பன் ஏடாகூட அரசியல்வாதிடி . கட்சிக்குள்ளேயே  ஸ்லீப்பர் செல் வெச்சிருக்கிற ஆளு நம்ம கட்டிலுக்கு அடியில ஸ்லீப்பர் செல் வெச்சிருந்தா  என்ன செய்றது?"

*****************************************************************************

பத்து மிளகு எண்ணி பத்திரமா எடுத்திட்டுப் போ!
---------------------------------------

" போற போது  பத்து மிளகு  எண்ணி  எடுத்தின்டு    போடா  ராகவா ?! "

"எதுக்கும்மா  ?"

" பர்ஸ்ட் நைட்ல  உன் ஒய்ப்  மருந்து கிருந்து வச்சிட்டா என்னடா   பண்றது.? பத்து மிளகு தின்னா பரம விரோதி  வீட்லேயும் விருந்து சாப்பிடலாம்னு பெரியவா  சொல்லிருக்காளே. !"

***************************************************************************

பதுங்கு  குழியில் சி.சி.டி.வி. மாட்டுனது யாரு?
-------------------------------------------

" என்ன  அமைச்சரே ..பதுங்கு  குழியில்  சி.சி.டி.வி.? யார்  போட்ட  உத்தரவு?"

"ஆட்ட நாயகி  அனுபமா  நைட் வந்து போகிற விவரம் மகாராணிக்கு  தெரிஞ்சிருச்சு. போர் அறிவிப்பு  இல்லாத காலத்தில் பதுங்கு குழியில்  மன்னருக்கு என்ன வேலைன்னு  ராணியம்மா உத்தரவு  போட்டுட்டாங்க,!"

***************************************************

எம்.எல்.ஏ. ஏன்  தப்பி ஓடினார்?
-----------------------------

தலைவர் :  " கடுமையான  காவல்  போட்டிருந்தும்  அந்த எம்.எல்.ஏ. எப்படிய்யா  தப்பிச்சி ஓடுனார்?"

மா.செயலாளர்.:  " ரிசப்ஷன்ல  வீட்டம்மா  வெயிட்  பண்றாங்கன்னு  சொன்னதும்  கால்வாய்க்குள்  குதிச்சு  தப்பிச்சிட்டார்  தலைவா!"

தலைவர் :  " அப்ப இத்தனை  நாளும்  ரூமில்  இருந்தது  யாருய்யா?"


**********************************************************
பிக் பாஸ் ஸ்டைலில் பாட்டு போடு !
---------------------------------------

அதிகாரி : " எதுக்குயா  கைதிகள்லாம்  ஆர்ப்பாட்டம்  பண்றாங்க.?"

வார்டன்:  " விடியிற   போது டெய்லி  பிக் பாஸ்  ஸ்டைலில்  சினிமாப்   பட  பாட்டு  போடணுமாம். பிரீஸ்  விளையாட அனுமதிக்கனுமாம்.

*****************************************************************



  


புதன், 6 செப்டம்பர், 2017

எனக்கு வேண்டியது செக்ஸ் தான்டி...!

"சுத்தி எத்தனை பேர்  இருந்தா எனக்கென்ன , எனக்கு வேண்டியது  உடம்பு சுகம்.! அத  இன்பம்.காமம், வெறி  இன்னும் என்னென்ன வேணும்னாலும் சொல்லிக்கோ...டோன்ட்  கேர்....! என்னை   காம வெறியன்னு சொல்றியா..சொல்லிட்டுபோ ! செக்ஸ் என்பதை நானா உருவேத்திக்கல.என்  உடம்போடு இருக்கு. எல்லாருடைய உடம்பிலும் இருக்கு. மத்தவன் நைட்டில் பயன்படுத்துறான்.இன்னும் சிலர் யாரும் இல்லேன்னா கதவ அடிச்சிக்கிட்டு பகலிலும்   முடிக்கிறான்.நான் அப்படி ஆள் இல்ல.நினைச்ச இடத்தில நினச்ச நேரத்தில  அது  எந்த இடமாக இருந்தாலும் அனுபவிப்பேன்."

                 இப்படியும்  ஒருவன் சொல்வானா?

                 சொல்லவில்லை.! செய்தான்!

நாடே எதிர்த்தாலும் நான் சொல்வதுதான்  வேதம். நான்  செய்வதுதான்  நீதி, நேர்மை என  உலகில் எத்தனையோ சர்வாதிகாரிகள் ..நாசகாரர்கள்.!

நமக்கு சட்டென நினைவில் வருவது சண்டாளன்  அடால்ப் ஹிட்லர்தான்!

நாஜி காலத்திய  நடிகை மரியன்னே ஹோப்பே. எத்தனை சிலுக்குகள் வந்தாலும் ஒற்றைப் பக்கத்து பிராவுக்குள் அள்ளிப்போட்டு அடக்கிவிடுவாள். ஹிட்லரின்  பிரத்யேக ஹாட்பேக்  இவள்தான்.!

 சர்வாதிகாரியின் பச்சையான இச்சைகளை! வெளிச்சம் போட்டுகாட்டி இருப்பவர் மன நல மருத்துவர்  வால்கர் எலிஸ்  பில்கிரிம். நான்கு வால்யூம்கள்.

"நெப்போலியனுக்கு எதிராக  ஆஸ்திரிய மக்கள் எழுச்சியுற்று போராடிய  திரைப்படத்தை  ஹிட்லர்  பார்த்துக் கொண்டிருக்கிறார். பக்கத்தில்  நடிகை. பிரெஞ்சு ராணுவத்தினர் மலை ஏறிச்செல்கிறார்கள்.அவர்களை  தடுக்கும் வகையில் பாறைகளை  ஆஸ்திரிய மக்கள் உருட்டி விடுகிறார்கள்.

அதைப் பார்த்ததும் ஹிட்லர் தனது முழங்கால்களை  பரபரவென கைகளால்  தேய்க்கிறார். உணர்ச்சி வயப்பட்டார். அவரது கிளர்தலுக்கும் வன்முறைக் காட்சிகளுக்கும் ஒருவகை தொடர்பு இருக்கிறது. என்கிறார் மருத்துவர்.

"பெண்களை அடக்கி ஆள்வதில் எனக்கு வேகம் அதிகம்." என்பது  அந்த சர்வாதிகாரி சொன்னதுதான்!

பிரிட்டிஷ் பிரதமர் நெவில் சேம்பர்லின் ( 1938.) ஒரு முறை  ஹிட்லரின்  சோபாவை பற்றி   " இந்த சோபாவுக்கு தனிக்கதை உண்டு. அது அந்த 'நண்பருக்கு' மட்டுமே தெரியும்."என்று கிண்டலாக  சொல்லி இருக்கிறார்.

ஆக  ஆட்சி, அதிகாரம் கையில் இருந்தால் எதையும் செய்யலாம் .அது  இருட்டு வேலைகளுக்கும் பயன்படும்.எவனும் கேட்கமுடியாது. கேட்டால்  கொலையும் செய்யலாம் என்பதுதான் இதிலிருந்து நாம் அறியும் நீதி. 

சனி, 2 செப்டம்பர், 2017

மனிதனுக்கு வேட்டியும் சட்டையும் அழகு.!

"திறமையும் தகுதியும் இருந்தும்  கை அருகில் வந்த கல்வியை  நீட்  என்கிற  வல்லரக்கன் எடுத்துக்கொண்டானே ! நீட்  முறையினால் எத்தனை ஏழை, எளியவர்கள் பாதிக்கப்படுவார்கள். தன்னுடைய மரணமாவது  அந்த வல்லரக்கனுக்கு முடிவு கட்டாதா?"

இப்படி  எண்ணித்தான் இன்னுயிரை மாய்த்துக்கொண்டாளோ எனது  சோதரி அனிதா?

நினைத்துக்கொண்டே  கண்ணயர்ந்து விட்டேன். கடவுள் வந்தார்.

"என்னடா  உறக்கம்? உங்களுக்கெல்லாம்  எதுக்குடா மீசை?" என்று  கேட்டார்.

"அதுதானே ஆண்டவா ஆண் மகனுக்கு அழகு?" என்றேன்.

"பேச்சிலேயே  தேன் வார்க்கும் மனிதன்தானே நீ! இப்படித்தான்  சொல்வாய். "அச்சமும் பேடிமையும் அடிமைச்சிறுமதியும்  உச்சத்திற் கொண்டாரடி---கிளியே ஊமைச்சனங்களடி" என்று  மீசையை  முறுக்கிவிட்ட  பாரதி  உன்னைப் போன்றவர்களை  நினைத்துத்தான் பாடினானோ என்னவோ? மனிதன் வேட்டியும் சட்டையும் அணிவது அழகுக்காகவா?"

"என்ன கடவுளே! அவைதானே  எங்களின்  மானம் காக்கிறது?"

"ஓ.....அங்கங்களை  மறைப்பதில்தான்  உனது மானம் காக்கப்படுகிறது  என்கிற  நம்பிக்கை. நீ ஒரு பேடி ."

"கடவுளே! எல்லை மீறுகிறாய். உடைத்து நொறுக்கிவிடுவேன்!" ---எனது கண்களில் தெரிந்த உக்கிரம் பார்த்த இறைவன் ஏளனமாக சிரிக்கிறான்.

என்னை கோழையாக பார்க்கிறவனுக்கு எதுக்கு "ர் "? 'ன்" னே போதும்!

"வாள் எடுக்கத் துணிவற்றவன்   பேடிதான். அவனுக்கு மீசை இருப்பதால் வீரனாகி விட முடியுமா?  . கரப்பான் பூச்சியே.!" --மறுபடியும் ஏளனச்சிரிப்பு.எகத்தாளம். இறைவன் ஏகடியம் பேசுகிறான்.என்னடா  காலக்கொடுமை.?

"இப்போது உனக்கு என்னதான் வேண்டும்? எதுக்கு என் உறக்கத்தை  கெடுத்து  வார்த்தையாடுகிறாய்?"

"உறக்கம் கெடுகிறது என கவலைப் படுகிறாய்.  உனக்கு ஒன்று  சொல்கிறேன். பாரத யுத்தத்தில் பீஷ்மர்    சாரதியாக  இருக்கிற  கிருஷ்ணனைப்  பார்த்து  கை கூப்பியபடி ' கிருஷ்ணா ! யாரோ ஒரு நபும்சகன் கையால்  சாவதை விட  உன் கையால் கொன்று விடு!' என கெஞ்சுவார்..பீஷ்மருக்கு  இனம் காண முடிந்தது. உனக்கு யாரையும் இனம் காண முடியவில்லை. விடிந்தால் நீ ஓர் அடிமை. .அதனால் கதவைத் திறக்காதே என  எச்சரிக்கவே கனவில் வந்தேன்." என்றார்.

கனவு கலைந்தது. ஆனால்  பொருள் புரியவில்லை.

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

அனிதாவின் தற்கொலையும் ,தமிழக அரசும் தலைவர்களும்!

நல்ல வேலை இன்னும் எவனும் டெங்குவால் அனிதா செத்துவிட்டதாக சொல்லவில்லை. ஒரு வேளை நாளைக்கு  வயிற்று வலி தாங்காமல்  மந்திரியோ தந்திரியோ யாராவது ஒரு ஆள்  சொல்லலாம்.

'நீட் தேர்வு தொடர்பாக அனிதா தற்கொலை செய்யவில்லை. வறுமை காரணமாக செத்து விட்டதாக " யாராவது ஒரு மாதரசி வாய் திறந்தாலும் ஆச்சரியம் இல்லை. ஒரு தலித் மாணவிக்கு இருந்த நெஞ்சுரம் தலைவர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? இழவிலாவது  ஒன்று சேர்ந்து  களை எடுக்க மாட்டிங்களா? அடப் பாவிகளா?

"அவனா, இவனா ,எவன் பின்னால் போவது என்று திசை தெரியாது தவிக்கிற அரசியல்வாதிகளை நம்பி நாசமாகிவிட்டது தமிழ்நாடு. அரசாங்கம் எங்கே இருக்கிறது என்று பூதக்கண்ணாடி வைத்துத் தேடினால் அங்கு ஒரு புழு நெளிகிறது. அந்த புழுவை குச்சியை வைத்து விளையாடி க்கொண்டு ஒரு  சாமியார்  நோண்டிக் கொண்டிருக்கிறார். அந்த புழு அவரது தூண்டிலுக்கு  தேவை.

அதனால் தமிழகத்தில் விவசாயம் செத்தாலும் கவலை இல்லை. நச்சு பரவி நிலம் அழிந்தாலும் கவலை இல்லை..

நாங்களே  ஒட்டு வேலைக்காக  கோடிகளில் வியாபாரம் பேசி வருகிறோம். இந்த பிச்சாத்து நீட் தேர்வினால் யார் செத்தால் எங்களுக்கு என்ன? நாடு  கெட்டாலும் நாங்கள்  ராஜாக்களாகவே  இருப்போம். மக்கள் என்றைக்கு  காசு வாங்கி எங்களுக்கு ஓட்டுப்போட்டாங்களோ அன்றே அவர்கள் எங்களுக்கு  அடிமைகள். எங்களது விசுவாசிகளுடைய  ஏவல் நாய்கள் என்கிற அளவுக்கு  தமிழக அரசியல் கெட்டுப் போய்க்கிடக்கிறது.

அரசுக்கும் கவலை இல்லை. அதிகாரிகளுக்கு அக்கறை இல்லை. எதிர்க்கட்சிகளுக்கும் அறிக்கை விடுவதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.